என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "rama temple"
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், சிவசேனா கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜனதாவும் ராமர்கோவில் கட்டுவதில் ஆர்வமாக உள்ளது. அண்மையில் இதே கோரிக்கையை முன்வைத்து தனிப்பட்ட முறையில் சிவசேனா அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
இந்தநிலையில் கடந்த 4½ ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவசேனா தனது கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து உள்ளது.
அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் இதுபற்றி கூறப்பட்டு இருப்பதாவது:-
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ஒருவர்(மோடி) தனக்கு 56 அங்குல மார்பளவு இருப்பதாக கூறினார். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். இதனால் காங்கிரசை தேர்தலில் மக்களால் தூக்கி எறிந்துவிட்டு 56 அங்குல மார்பளவு கொண்ட மனிதரிடம் நிர்வாகத்தின் சாவியை ஒப்படைத்தனர்.
ஆனால் அவரிடம் அரசியல் திறமை இல்லை. இதனால்தான் ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811270712037842_1_Shiv-Sena-1._L_styvpf.jpg)
விரைவில் நடக்கப்போகும் தேர்தலில் மக்கள் உங்களின் மார்பளவை மீண்டும் அளக்கப் போகிறார்கள். அப்போதும் ராமர் வனவாசத்தில் இருக்க நேர்ந்தால் உங்கள் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ராமர் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு காங்கிரஸ் மறைமுக நெருக்கடி அளிப்பதாக மோடி குற்றம்சாட்டி இருப்பதற்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
‘‘இந்திராகாந்தி குடும்பம் மற்றும் காங்கிரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்று புகார்களை கூறுவதற்காக ஆட்சியை மக்கள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரசும், சமாஜ்வாடியும் முட்டுக்கட்டை போட்டதால்தான் அவற்றை அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றினர். எனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.
இதில் ராகுல்காந்திக்கு முக்கியத்துவம் எதற்கு?... காங்கிரசுக்கு என்ன பலம் உள்ளது?... பிறகு ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். காங்கிரசை எதிர்ப்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தில் நாடகமாடினால் நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். ராமர்கோவில் பா.ஜனதா அளித்த வாக்குறுதி’’ எனவும் சாம்னாவில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. #Ayodhyarally #Ramtemple #PMModi
புதுடெல்லி:
அயோத்தி ராமர் கோவில் போராட்டங்கள் தொடர்பாக எழுத்தாளர் ஹேமந்த் சர்மா எழுதிய 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்பது உண்மையான சம்பவம். இதை அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராமர் கடவுள் என்பது இந்துக்களின் அடையாளம். அது இந்துக்களின் நம்பிக்கை.
இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. அப்படி கேட்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் தாமதம் இல்லாமல் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாடே விரும்புகிறது. அப்படி ராமர்கோவில் கட்டப்பட்டு விட்டால், இந்து - முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேற்றுமைகள் மறைந்து விடும்.
ராமர் கோவில் தொடர்பான வழக்கு தீர்ப்புகளை விரைவாக வழங்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இழுத்து கொண்டு செல்லக்கூடாது. இந்த சமூகம் தான் முதன்மையானது. அவர்களுக்கு உண்மையும், நீதியும் கிடைக்க வேண்டும்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809211233234162_1_amitddd._L_styvpf.jpg)
மதநம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்பக்கூடாது. அது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.
பாரதிய ஜனதா அமித்ஷா பேசும்போது, ராமர் கோவில் விவகாரத்தில் 500 ஆண்டுகளாக மவுன போராட்டம் நடந்து வருகிறது. ராமஜென்ம பூமி போராட்டம் தான் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் ஆகும்.
அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டியது அனைவரின் விருப்பம். அயோத்தியில் கடந்த காலத்தில் நடந்த சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது என்பதற்கு சாட்சியமாக உள்ளது என்று கூறினார்.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசும் போது, அயோத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு அனைத்து சமூகத்தினரும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.
அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனாலும் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
உத்தரபிரதேசத்தில் கூட்டுறவு துறை கேபினட் மந்திரியாக இருப்பவர் முகுத் பிகாரி வர்மா. இவர் பக்ரைச் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரிடம் நிருபர்கள் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இன்னும் கோவில் கட்டவில்லையே என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த முகுத் பிகாரி வர்மா, ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதற்கு நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ராமர் கோவில் எப்படி கட்ட முடியும் என்று திருப்பி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மந்திரி, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது. நீதி எங்கள் கையில் இருக்கிறது. அதன் நிர்வாகம் எங்கள் கையில் இருக்கிறது. சட்டசபையும் எங்களிடம் உள்ளது. இந்த நாடே எங்களிடம் தான் இருக்கிறது. இது எங்கள் கோவில். எனவே நாங்கள் ராமர் கோவில் கட்டுவோம் என்று பதில் அளித்தார்.
சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மந்திரி முகுத் பிகாரி வர்மா கருத்தை அறிய விரும்பியபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். #UttarPradesh #RamaTemple #MukutBihariVerma
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ஜனதாவின் பலம் அதிகரித்து வருவதை கண்டு எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. இதனால் நாட்டின் வளர்ச்சியை அக்கட்சிகள் எதிர்க்கின்றன. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் கைகோர்த்துள்ளன. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. அந்த குழப்பத்தில் ஆதாயம் அடைய அந்த கட்சிகள் விரும்புகின்றன.
கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதை கூட எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்க முடியவில்லை. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திறன் கொண்ட ஒரு தலைவரை எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்த முடியவில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி. இதில் மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் ராமர்தான் கோவில் கட்டப்பட வேண்டிய தேதியை முடிவு செய்ய வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும். தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சாதியை வைத்து அரசியல் செயயும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #RamaTemple