search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reasi"

    • ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
    • உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் சங்கல்தான் - ரியாசியை இணைக்கும் வகையில் உலகின் மிக உயரமான சென்னாப் ரெயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமாக முதல் ரெயில் நேற்று இயக்கப்பட்டுள்ளது. இந்த சென்னாப் ரெயில்வே பாலம் (359 மீட்டர்கள்) பாரிஸில் உள்ள உயரத்துக்கு பிரசித்தி பெற்ற ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

    தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டம் குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், இந்த பாலத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், சுரங்கப்பாதை எண் ஒன்றில் மட்டும் மிச்சமுள்ள மீதி வேலைகள் முடிந்ததும் இன்னும் நான்கைந்து மாதத்துக்குள் சென்னாப் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சென்னாப் பாலம், சுமார் 272 கிலோமீட்டருக்கு போடப்படும் உத்தம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா (USBRL ) ரெயில்வே தடத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரெயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது. இதற்கிடையில் இந்த ரயில் பாலம் இணையும் ரியாசி மாவட்டத்தில் சமீபத்தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 9 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமுற்றனர்.
    • உயிர்தப்பியவர்கள் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்கள் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி என பல மாநிலங்களை சேர்ந்த பயணிகள் சிவகோரியில் இருந்து காத்ராவுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை வழிமறித்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமுற்றனர்.

     


    இந்த நிலையில், தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் வெர்மா கூறும் போது, "பயங்கரவாதியை பார்த்ததும், நான் தப்பிக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரின் தலை ஸ்டீரிங் வீல் மீது சாய்ந்ததை பார்த்தேன். இதன் பிறகு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது," என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தேவி பிரசாத், "பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த போதிலும், பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். நாங்கள் எந்தவித அசைவும் இன்றி தரையிலேயே படுத்துக் கொண்டோம். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை நாங்கள் உயிரிழந்தவர்களாக நினைத்துக் கொண்டோம்," என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் காயமுற்றவர்களை மீட்டு, உயிரிழந்த சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து சாலைக்கு கொண்டுவந்தனர். இவர்களை தொடர்ந்து காவல் துறை, பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ராஜத் ராம் வெர்மா, "முதலில் பேருந்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது என்று நினைத்தேன். பிறகு, திடீரென பயங்கரவாதிகள் தாக்கியதாக யாரோ அழுதார்கள். உடனே என் மனைவி மற்றும் மகனை பேருந்து இருக்கையின் கீழ் மறைந்து கொள்ள செய்தேன். மறைந்து கொள்வதற்குள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், என் மகனை என்னால் பிடிக்க முடியாமல் போனது. பிறகு மகன் குறித்து கேட்ட போது, அவன் உயிரிழந்துவிட்டதாக என் மனைவி தெரிவித்தார்," என்றார்.

    பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் உயிரிழந்தவர்களில் ராஜத் வெர்மாவின் 14 வயது மகன் அனுராக் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×