search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101218"

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஏடிஎம் மையம் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை சிவன் சாலையில் அமைந்துள்ளது தனியார் ஏடிஎம் மையம்.

    இந்த மையத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தீ மளமளவென பரவியது.
     
    தகவலறிந்து சம்பவ் இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என தெரிய வந்துள்ளது.

    தனியார் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அருப்புக்கோட்டையில் குடும்ப தகராறில் பிரியாணி மாஸ்டர் தற்கொலை செய்தார்.

    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே உள்ள அய்யன் ரெட்டிய பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் குடும்பத்தினரை விட்டு பிரியாணி கடையிலேயே தங்கியிருந்தார். நேற்று இரவும் மணிகண்டன் கடையில் தங்கினார்.

    இன்று காலை கடையை திறந்த போது அவர் பிணமாக கிடந்துள்ளார். அவரது அருகே வி‌ஷ பாட்டிலும் கிடந்தது. இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிகண்டன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி- கருங்குளம் சாலையில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் நூற்பு மில் அருகே வந்தபோது 6 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். அப்போது 3 பேர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் மற்ற 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது 3 மிளகாய் தூள் பாக்கெட்டுகள், கத்தி மற்றும் 25 அடி நீள கயிறு இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 21), முருகேசன் (21), மண்டல மாணிக்கம் முருகன் என தெரியவந்தது.

    மேலும் தப்பி ஓடியவர்கள் திருச்சுழி அஜித் (24), ராமநாதபுரம் மணி வண்ணன் (24), முத்துப்பட்டி முத்தமிழ் செல்வம் (24) ஆகும். இவர்கள் வழிப்பறி அல்லது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்களா? என தீவிர விசாரணை நடக்கிறது.

    அருப்புக்கோட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டி முத்துராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இருவருக்கும் அந்த பகுதியில் அருகருகே தோட்டம் உள்ளது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகர்சாமி தனது தோட்டத்தில் குப்பைகளை எரித்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமியும், அவரது பேரன் தமிழரசனும் சேர்ந்து கட்டையால் கண்ணனை தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த கண்ணனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, தமிழரசனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

    அருப்புக்கோட்டை அருகே வாலிபரை கொலை செய்து கல்குவாரியில் வீசி சென்றவர்கள்யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியில் உள்ள காட்டுப் பகுதியில் கல்குவாரி உள்ளது. இங்குள்ள 200 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து பள்ளத்தில் கிடந்த பிணத்தை மீட்டனர்.

    பிணமாக கிடந்தவர் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்கவராக உள்ளார். அவரது முகம் சிதைந்து ரத்தக்காயங்களுடன் இருப்பதால் அவர் யார் என்பதில் அடையாளம் காண முடியவில்லை.

    கொலையாளிகள் வாலிபரை கொலை செய்து விட்டு கல்குவாரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையானவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் கிடந்த 4 கலசங்களை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் அய்யாத்துரை என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கீரை விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று இவரது மகன் அருணாச்சலம் என்பவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்தார். அப்போது தண்ணீர் வரவில்லை. இதையடுத்து அருணாச்சலம் தோட்டத்து கிணற்றில் இறங்கிப் பார்த்தார். அப்போது 4 கோவில் கோபுர கலசங்கள் கிணற்றுக்குள் கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுண் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கலசங்களை மீட்டனர்.

    இதை திருடியவர்கள் யார்? எதற்காக கிணற்றில் வீசிச் சென்றார்கள்? எந்த கோவிலின் கோபுர கலசங்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளுடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாறு கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தந்தையுடன் சேர்ந்து மாமனார்-மாமியாரை ஓட... ஓட... அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது45). இவரது மனைவி வனிதா (42). இவர்களது மகள் முனீஸ்வரி (23).

    இவருக்கும், நரிக்குடி அருகே உள்ள கீழசெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் கணேசனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    திருமணத்திற்கு முன்பே கணேசனுக்கும், கீழசெம் பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணேசன்-முனீஸ்வரி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் தொடர்பு வைத்திருந்த பெண்ணுடன் திருப்பூர் சென்று கணேசன் தங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி தனது நிலைமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கணேசனை சமரசம் செய்து முனீஸ்வரியுடன் சேர்த்து வைத்தனர். இருவரும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். அங்கேயும் கணேசன் மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். இதனால் வெறுப்படைந்த முனீஸ்வரி கணவர் மீது திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு கணேசன்-முனீஸ்வரி தம்பதியர் மீண்டும் வீரசோழனுக்கு வந்து குடியேறினர். இந்த நிலையில் நேற்று இரவு கணேசனிடம் பேசுவதற்காக முனீஸ்வரியின் பெற்றோர் செந்தில்வேல்-வனிதா வந்தனர்.

    அப்போது அவர்கள் மகளிடம் பிரச்சினை செய்யாமல் குடும்பம் நடத்துமாறு கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், அவரது தந்தை பாண்டி ஆகியோர் செந்தில் வேல்-வனிதாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். ஆத்திரம் அடங்காத இருவரும் அவர்களை ஓட...ஓட... விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதில் செந்தில்வேல் கை, கால்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். வனிதாவையும் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வீரசோழன் போலீசார் சம்பவ இடம் வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் கணேசன் சரண் அடைந்தார். தலைமறைவாகி இருந்த பாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டையில் பணம் வைத்து சூதாடியதாக 2 தாசில்தார்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Arrest

    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- பந்தல்குடி ரோட்டில் தனியார் கிளப் உள்ளது. இங்கு விருதுநகர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணம் வைத்து சூதாடுவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 34 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அங்கிருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் கைதானதில் 2 பேர் தாசில்தார்கள் என்பதும், ஒருவர் அரசு அதிகாரி என்பதும் தெரிய வந்தது.


    சூதாடியதாக கைதான தாசில்தார்களில் ஒருவர் பெயர் பாண்டிசங்கரராஜ். இவர் விருதுநகர் பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் சுரேந்திரன். மதுரையில் பணியாற்றி வருகிறார்.

    கைதான அரசு அதிகாரி முருகன் சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநராக பணியாற்று கிறார். இவர்கள் தவிர பஸ் டிரைவர்கள் ராஜசுந்தரம், ராஜாங்கம் உள்பட 34 பேரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சூதாட்டம் தொடர்பாக அதிகாரிகள் உள்பட 34 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Arrest

    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது ராமசாமி நகர். இங்குள்ள அய்யங்கரன் என்பவரது தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் முகம் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தன.

    இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்த பெண்ணின் கையில் சங்கீதா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் அருகே வி‌ஷபாட்டில்களும் கிடந்தன. அந்த பெண்ணை யாராவது இந்த தோட்டத்துக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்றும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை தீ வைத்து எரித்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என்பதை அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கஞ்சா வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பன்னிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 24). கஞ்சா விற்று வந்தார்.

    இவர் எம்.ரெட்டியபட்டி சென்று கஞ்சா விற்றபோது அங்கு மாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் வியாபாரி மல்லிகார்ஜூனன் (47) வந்தார்.

    அவர்கள் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் ரஞ்சித் குமார் பேசிய பேச்சு மல்லிகார்ஜூனனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் சரமாரியாக தாக்கினார். இதில் ரஞ்சித் குமார் தலையில் காயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டிய பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மல்லிகார்ஜூனனை தேடி வருகின்றனர். #Tamilnews
    விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதிகள் பயனடையும் வகையிலான புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி கூட்டரங்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 30 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமாக மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளில் ரூ.404 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து பணிகள் தொடங்க அறிவிக்கப்பட உள்ளது.

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தில் மாவட்டத்தில் 4,210 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.126 கோடியே 30 லட்சம் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 பேருக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பாராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×