என் மலர்
நீங்கள் தேடியது "செந்துறை"
- கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .
திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.
இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.
இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.