என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்"

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் ஆசீர்வாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மாநகர பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 55 கிலோ அளவில் இருந்தது. அதனையும், அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போதை பொருட்கள் வைத்திருந்ததாக விளாத்திக்குளத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 27), ஜெயராஜ் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வேறு எங்காவது போதை பொருட்கள் விநியோகம் செய்துள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் விளக்குத் தூண், ஜெய்ஹிந்துபுரம், தெற்குவாசல், புதூர், அவனியாபுரம், திருநகர், கூடல்புதூர் பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2 ஆயிரம் போதை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 13 பேரையும் கைது செய்தனர்.

    ×