search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழித்தேர்"

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி விரைவில் முடிவடையுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இக்கோவில் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது இந்த தேர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில் வீற்றிருந்து நான்கு வீதிகளில் உலா வரும் தியாகராஜரை பயபக்தியுடன் பக்தர்கள் வணங்குவார்கள்.

    ஆழித்தேரோட்டம் முடிவடைந்த நிலையில் இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. இதனால் ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்க இந்துசமய அறநிலைத்துறை திட்டமிட்டது. கடந்த மே மாதம் 27-ந் தேதி ஆழித்தேரோட்டம் முடிவடைந்த நிலையில் இரும்பு கூரையால் மூடப்படாமல் தேர் திறந்து இருந்தது.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையில் தேர் நனைந்து வீணாகுவதை கண்டு பக்தர்கள் வேதனையடைந்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் இரும்பு தகட்டினால் மேற்கூரை அமைத்து, தார்பாய் கொண்டு தேரினை மூடியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. கண்ணாடி கூண்டிற்காக ஆழித்தேரை சுற்றி சிமெண்டு கான்கிரீட் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுவதால் தேரை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரதான கீழவீதி சாலையில் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் துரிதமாக தொடங்கிய நிலையில் நாளடைவில் பணிகள் தேக்க நிலை ஏற்பட்டு தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த முறை ஆழித்தேர் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கனமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கன மழையில் இருந்து தேரை பாதுகாத்திட தற்காலிக கூரை போதுமானதல்ல.

    எனவே ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×