என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டயம்"

    • கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
    • மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இது கனமழையாக மாறி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறது.

    நேற்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக எர்ணாகுளத்தில் சுமார 1½ மணி நேரத்திற்கு விடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக நகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    வெள்ளமாகச் சென்ற வீடுகள், வயல்வெளிகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தில் தாழநாடு மூன்நிலவு அருகே உள்ள சோவ்வூர் மற்றும் மேலுகாவு கிழக்க மட்டம் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் மேலுகாவு தாலுகாவில் வீடுகள் சேதம் அடைந்தன. ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் கல்லம்பாக்கம் என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்த கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

    கொச்சி துறைமுகம் பகுதியில் கேரள அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி காயம் அடைந்தார். இதேபோல், திருவனந்தபுரம் காட்டன் ஹில் பள்ளியில் நின்ற ஒரு பஸ்சின் மீதும் மரம் விழந்தது. மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம் முதலப்பொழி கடலில் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆபிரகாம் ராபர்ட் (வயது 60) மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கிள்ளியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முக்கோலத்தை சேர்ந்த அசோகன் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழையின் தாக்கம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதால், சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மீனச்சிலை ஆறு, திருவனந்தபுரம் கிள்ளியாறு போன்றவற்றில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், கனமழையால் நிலச்சரிவு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது.
    • அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.

    திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது.

    தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச்சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது.


    மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இதை திறந்து வைக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்று உள்ளார். விழா முடிந்ததும் நாளை மாலை அவர் சென்னை திரும்புகிறார்.

    • மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை தொங்கவிட்டு சித்ரவதை.
    • 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவர்களை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை, அவர்கள் கல்லுரியில் சேர்ந்ததில் இருந்தே மூன்றாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் ராக்கிங் செய்திருக்கின்றனர்.

    அவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை (டம்பில்ஸ்) தொங்கவிடுதல், விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்துதல் என பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    சித்ரவதை காரணமாக ஏற்பட்ட காயங்களில் முகப்பொலிவு மற்றும் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தம் லோசன்களை அதிகளவில் தடவி விட்டிருக்கின்றனர். அந்த லோசனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு ராக்கிங் செய்திருக்கின்றனர்.

    மேலும் சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்திருக்கின்றனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.

    சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் தொடர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்தபடி இருந்தால், அதுபற்றி முதலாமாண்டு மாணவர்கள் சிலர், தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முதலாமாண்டு மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபிறகே, முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட தகவல் வெளியானது.

    விசாரணையில் முதலாமாண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டது உறுதியானதால் அது தொடர்பாக வழக்கு பதிந்தனர்.

    ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்களான கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×