என் மலர்
நீங்கள் தேடியது "திருநாங்கூர்"
- கருடசேவை உற்சவம் விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
- 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அணிவகுத்து வந்தன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்ய தேச தலங்களாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கோவில்களில் இருந்தும் பெருமாள்கள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நேற்று காலை தொடங்கி விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
இதனை யொட்டி நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருடசேவையில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அலங்கரித்தவாறு அணிவகுத்து வந்தன.
அப்போது கிராமமக்கள் 11 பெருமாள்களுக்கும், பட்டு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் மணிமாடக் கோவில் மண்டபத்தின் முன்பு அனைத்து பெருமாள்களும் எழுந்தருளினர்.
முன்னதாக நாராயணப் பெருமாள் எதாஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, மணிமாடக் கோவிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை நிகழ்ச்சி' வெகு விமரிசையாக நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள்கள் குறித்த பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று திருப்பாவை, மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.
பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் நாராயணப் பெருமாள் கோவில் வாயில் முன்பு எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த தங்க கருடசேவை நிகழ்ச்சியை காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக திரண்டு கோவிந்தா.. கோவிந்தா... கோஷம் முழங்க மனமுருகி வழிபட்டனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நாராயணன் பெருமாள் வீதி, வைகுந்தநாதர் வீதி, கீழ வீதி, நாராயண பெருமாள் தெற்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் விடிய, விடிய திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இரவு முழுவரும் நடைபெற்ற நிகழ்ச்சியால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், நாங்கூர் ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.