search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடை ஏற்றுமதி"

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது.
    • வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து கனடாவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா - கனடா விவகாரம் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:-

    பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது. கோட்டா முறை ரத்தான பிறகு, இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை குறைத்துக்கொண்ட கனடா, வங்கதேசத்துக்கு ஆர்டர்களை அதிக அளவில் வழங்கி வருகிறது.

    அமெரிக்கா, ஐரோப்பியா, ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 61 ஆயிரத்து 764 கோடி அளவுக்கு நடந்துள்ளது. அதில் கனடாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே.அதாவது, 1,304 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.

    கனடாவுடன் ஏற்பட்ட மோதலால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. புதிய சந்தை வாய்ப்புகள் தொடர்பான விசாரணை ஆக்கப்பூர்வமாக இருப்பதால் மற்ற நாடுகளில் புதிய வாய்ப்புகளை வசப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர். கனடா விவகாரத்தால் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை, கனடா - இந்தியா இருதரப்பும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மாற்று வாய்ப்புகளை தேட தொடங்கி விட்டனர்.

    • சில மாதங்களாக நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது.
    • பருத்தி ஆடை களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் வர்த்தக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது

     திருப்பூர்:

    ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ஆயத்த ஆடை இறக்குமதி செய்யும் நாடுகளில், பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டன. இயல்புநிலை திரும்பாததால் அந்நாடு களின் ஆடை நுகர்வும் குறைந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டரும் குறைந்தது.சில மாதங்களாக நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது. கடந்த 2022 ஜூலையில் 10 ஆயிரத்து 994 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது.

    கடந்த 2022 ஏப்ரல் - ஜூலை வரையிலான 4 மாத ஏற்றுமதி 45 ஆயிரத்து 648 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு அதே காலத்தில் 39 ஆயிரத்து 746 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், சர்வதேச அளவில், பருத்தி ஆடை களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் வர்த்தக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு பின், அந்நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.பட்ஜெட் தயாரித்து செலவு செய்ய பழகிவிட்டனர்.விலை குறைவான ஆடைகளை பயன்படுத்துகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் மட்டுமே வர்த்தக இயல்பு நிலை திரும்பும்.அதன் பிறகே பருத்தி ஆடை ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும்.

    முன்னதாக செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதிக்கு இந்திய நிறுவனங்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது என்றார். 

    • ஏற்றுமதி மட்டும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.
    • அரசு பஞ்சுக்கு இறக்குமதி வரியை நீக்கியது.

    திருப்பூர் : 

    கடந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம், 35 லட்சத்து 91 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. இறக்குமதி வர்த்தகம் 57.35 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மட்டும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மற்றும் பருத்தி விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டின் துவக்கமே போராட்டமாக இருந்தது. ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது.சில மாதங்களில், பஞ்சு - நூல்விலை சீரான நிலையை அடைந்தது. அதற்கு பிறகும் ஏற்றுமதி வர்த்தகம் வேக மெடுக்கவில்லை.போர் சூழலால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் செலவுகளை குறைத்து கொண்டனர். ஆடை விற்பனையும் முடங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து இரண்டு கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்திருந்தது. நடப்பு ஆண்டில் 9,930 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 17 சதவீதம் குறைவு.ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில் 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,859 கோடி,2019-20ல் 9,786 கோடி, 2020-21 ஏப்ரல் மாதம் 962 கோடி, 2021-22ல், 9,664 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இந்தாண்டில் மீண்டும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஆர்டர் வரத்தும், அந்நாடுகளில் ஆடை விற்பனையும் குறைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்தால் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.இந்தநிலையில் பருத்தி மிகை நாடாக திகழ்ந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக இந்த ஆண்டு மாறியுள்ளது. மொத்த உற்பத்தி 320 லட்சம் பேல்களாக குறைந்துள்ளதாகவும், மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி சீசனாகும். ஆண்டுதோறும் 350 லட்சம் பேல்களுக்கும்(ஒரு பேல் 170 கிலோ பஞ்சு) அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.இவ்வாண்டு பருத்தி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறியுள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறையினர், பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் செப்டம்பர் தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தையில் 90 சதவீத பருத்தி விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் 60 சதவீத பஞ்சு மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.தவிர மொத்த பருத்தி உற்பத்தி 337 லட்சம் பேல்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 320 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 30 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படும். 20 லட்சம் பேல்கள் தரம் குறைவு காரணமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் பருத்தி மிகை நாடாக இதுவரை திகழ்ந்து வந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக மாறியுள்ளளது.கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி 44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 35 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த ஏற்றுமதி 18 சதவீதம் குறைந்துள்ளது. ஜவுளித்தொழில்துறையில் நிலவும் நெருக்கடியால் மொத்த உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. 25 முதல் 30 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு விலை ரூ.60,700 ஆக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு ஒரு கேண்டி ரூ. 51,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கிறது. இதை நீக்கினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி இந்திய சந்தைக்கு வந்துவிடும். தவிர வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு பஞ்சு குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும்.

    கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மத்திய அரசு பஞ்சுக்கு இறக்குமதி வரியை நீக்கியது. அதே போல் தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்போது உள்ள சூழல் குறித்து 'சைமா', 'சிட்டி' உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சரை விரைவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த அனைத்து வர்த்தகமும் நின்றுபோனது.
    • பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தரும் நகராக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2020 கொரோனா தொற்றின் போது உலகம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த அனைத்து வர்த்தகமும் நின்றுபோனது. இந்நிலையில், கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்து கப்பல் மூலம் சரக்குகள் அனுப்பும் நிலை வந்த போது கப்பல் நிறுவனங்கள் குறைந்த அளவு கப்பல்களை மட்டுமே இயக்கின. மேலும் சரக்கு பெட்டக பற்றாக்குறையும் ஏற்பட்டது .இந்நிலை தற்போது வரை தொடர்கிறது.

    தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய சீசனை பொறுத்து ஒரு கண்டெய்னருக்கு 6 ஆயிரம் டாலர் முதல் 8 ஆயிரம் டாலர் வரை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 12 ஆயிரம் டாலர் முதல் 15 ஆயிரம் டாலர் வரை உள்ளதாகவும், கொரோனா தொற்றுக்கு பின் விலை சற்று குறைந்திருந்தாலும் சரக்கு பெட்டக தட்டுப்பாடு உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கிடைக்கும் குறைந்த லாபத்தில் பெரும் பகுதி சரக்கு பெட்டக கட்டணமே சென்று விடுவதாகவும், உலக அளவில் வர்த்தக சரக்கு கப்பல் நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின் புதிய உத்தியை கையாளத் தொடங்கியுள்ளன. அதாவது குறைந்த அளவு கப்பல்களை மட்டுமே இயக்கி வருகின்றன. இதன் காரணமாகவும் விலை ஏற்றம் உள்ளது‌.

    அதே நேரத்தில் சீனா உலகின் பெரிய ஏற்றுமதியாளராக உள்ளதால், அந்நாட்டுக்கு அதிக கண்டெய்னர்கள் தேவைப்படுவதால் காலி கண்டெய்னர்கள் எடுத்து வரும் கப்பல்களுக்கு கண்டெய்னர் ஒன்றுக்கு 400 முதல் 500 டாலர் வரை கட்டணமாக கொடுப்பதால், உலக அளவில் வர்த்தக கப்பல்களில் கையாளப்படும் கண்டெய்னர்களில் பெரும்பகுதி சீனாவுக்கு சென்று விடுவதால், மற்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சரக்கு பெட்டகம் கிடைக்காமல் தடுமாறி வருகின்றன.

    இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சரக்கு பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் வர்த்தக கப்பல் நிறுவனங்கள், தங்களிடம் உள்ள வர்த்தக கப்பல்களில் பாதியளவு கூட இயக்காமல் நிறுத்தி வைத்து குறைவான கப்பல்களை மட்டும் இயக்கி அதிக லாபம் பார்த்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்‌.

    திருப்பூரின் ஏற்றுமதி முழுவதும் கப்பல்களை மட்டுமே சார்ந்து உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, சென்னை, கொச்சின் துறைமுகங்களை சார்ந்து உள்ள நிலையில், தற்போது நிலவும் கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்றுமதியை பாதிக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில் குறித்த காலத்தில் சரக்குகளை அனுப்ப வேண்டிய தேவை இருப்பதால் ஏற்றுமதியாளர்களும் என்ன விலை கொடுத்தேனும் கண்டெய்னர்கள் புக் செய்ய வேண்டிய நிலையால், கப்பல் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.

    உலக பொருளாதாரத்தில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக திகழ முற்படும் சீனாவும் தன் பங்குக்கு காலி சரக்கு பெட்டகங்களை கபளீகரம் செய்து தன் நாட்டுக்கு வரும்படி செய்வதால் இங்கு கண்டெய்னர் தட்டுப்பாடு நிலவுவதாக திருப்பூர் பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் ஏற்றுமதி குறைந்து போகும் சூழலால் நாட்டுக்கு வரும் அந்நிய செலாவணி குறையும் அபாயம் இருப்பதால், மத்திய அரசு இதில் உரிய கவனம் செலுத்தி சரக்கு பெட்டகங்கள் எளிதாக குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே திருப்பூர் பின்னலாடை துறையினர் வேண்டுகோளாக உள்ளது‌.

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன.தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் (பீடர் வெசல்) ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று அங்கு பெரிய கப்பலுக்கு (மதர் வெசல்) மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால் சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால் பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ., தூரத்தில் கொச்சி, 330 கி.மீ.,ல் தூத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

    விரைவில் சரக்கை அனுப்ப 500 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது. செலவும் அதிகரிக்கிறது.திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது.எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, தூத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுக சார்பு நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×