என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயக்கழிவுநீர்"

    • சாயக்கழிவு ரசாயனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அங்கு வானுயர கரும்புகை எழுந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் குளத்துப்பாளையம் மண்ணரையில், சாய ஆலைகளில் இருந்து பெறப்படும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்து, அதன் கழிவை திடப்பொருளாக மாற்றி மீண்டும் தண்ணீரை பயன்படுத்தும் வகையிலான பொது சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ரியாக்டர் எந்திரத்தல் திடீரென தீ பற்றி கொளுந்து விட்டு எரிய துவங்கியது. மேலும் பயன்படுத்தாத குழாய்களில் இருந்து வெளியேறிய வாயு காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்தது. சாயக்கழிவு ரசாயனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அங்கு வானுயர கரும்புகை எழுந்தது.


    தொழிலாளர்கள் சுத்திகரிப்பு ஆலையை விட்டு வெளியேறிய நிலையில் புகை மூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 6 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சாயக்கழிவுகளை தரம் பிரித்து தரும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எச்.பி., ரக குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாளையக்காடு பகுதியில் ஆய்வு நடத்தினர்.
    • சாக்கடை கால்வாய் ஒன்று சேர்வதால், எந்த இடத்தில் சாயம் திறந்துவிடப்பட்டது என கண்டறியமுடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சர்ந்த சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்நிறுவனங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிவப்பு நிற பட்டியலில் வைத்துள்ளது. சாய ஆலை மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. சுற்றுச்சூழல் விதிகளை மீறும் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதியின்றி வாடகை வீடுகள், குடோன்களில் ரகசியமாக பட்டன் ஜிப் டையிங், டேபிள் பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை சாக்கடை கால்வாய் மற்றும் அருகிலுள்ள நீர் நிலைகளில் திறந்துவிடுகின்றனர்.ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, ரெயில்வே பாலம் பகுதி சாக்கடை கால்வாயில் நீல நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், பகல்வேளையிலேயே தைரியமாக சாயக்கழிவுநீரை திறந்து விடுவதை பார்த்து இயற்கை ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார் கூறியதாவது:- பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், மாசுகட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாளையக்காடு பகுதியில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள் சென்றபோது, சாயக்கழிவுநீர் நின்றுவிட்டது. மீண்டும், சூர்யா காலனி, கோல்டன் நகர் உள்பட அப்பகுதி முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. பொதுமக்களிடமும் விசாரித்தோம்.பல்வேறு பகுதி சாக்கடை கால்வாய் ஒன்று சேர்வதால், எந்த இடத்தில் சாயம் திறந்துவிடப்பட்டது என கண்டறியமுடியவில்லை. அப்பகுதியில் நிறுவனங்கள் இல்லை. வீடுகளில் வைத்து பட்டன் ஜிப் டையிங் அல்லது டேபிள் பிரின்டிங் இயக்கி, சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம்.பாளையக்காடு சுற்றுப்பகுதிகளில் தினமும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். சாயக்கழிவுநீரை திறந்து விடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டால்,0421 2236210என்கிற எண்ணில், பொதுமக்கள் உடனடியாக மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார். 

    ×