search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு பஸ் நிலையம்"

    • வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
    • தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

    பஸ் நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் இணைப்பு ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு, விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடைபாதை மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு யு வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    கோடை விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

    நாளை, நாளை மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 1,130 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்களில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். வெளியூர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    • மாறாக வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.
    • இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 40 துறைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    சென்னை கோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர்ப் பேருந்து நிலையம் வண்டலூர் - கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.

    சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்ப் பேராபத்து வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு, நீர்ப்பற்றாக் குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும். கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரெயில் மற்றும் மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும்.

    இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. அதுபோன்ற நல்வாய்ப்பு சென்னையில் இல்லை.

    சென்னை பூங்காக்களில் 20 ஏக்கர் பரப்பிலான செம்மொழிப் பூங்கா மற்றும் 15 ஏக்கர் பரப்பிலான அண்ணாநகர் கோபுரம் பூங்கா ஆகியன மட்டுமே பொது மக்கள் முழு அளவில் பயன்படுத்தத்தக்க பெரிய பூங்காக்கள் ஆகும்.

    முதலமைச்சர் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின், சென்னைக் காலநிலைச் செயல் திட்டத்தில் சென்னை மாநகரின் பசுமைப் பொது வெளியை அதிகரிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும். சென்னைப் பெருநகரில் புதிய பூங்காக்கள் உருவாக்கு வதற்குப் போதுமான இடம் இல்லாத நிலையில், 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும், 6.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள புறநகரத் தனியார்ப் பேருந்து நிலையமும் இடம் மாற்றப்பட்டுள்ளது ஒரு நல்வாய்ப்பு ஆகும். இவற்றில் மொத்தமுள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகரப் பேருந்து நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும். இதன் மூலம், சுமார் 50 முதல் 60 ஏக்கர் அளவிலான பரப்பில் ஒரு பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்.

    இதன்முலம், கடந்த 60 ஆண்டுகளில், சென்னையில் இருந்த ஏராளமான நீர்நிலைகளும் பசுமைப் பகுதிகளும் அழிக்கப்பட்டதுதான் வரலாறு என்பதை மாற்றி, ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் புதிதாக அமைக்கும் சாதனையை தமிழ்நாடு அரசு படைக்க முடியும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் 6 பிளாட்பாரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு நாள்தோறும் 2100 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் ஏற்கெனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டன. இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் நேற்று முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. மீதமுள்ள 20 சதவீத பஸ்கள் மாதவரம் புறநகர் பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டன.

    மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஏற்கெனவே ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய இடங்களுக்கு தினமும் 160 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் மற்ற 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு 710 பஸ்கள் செல்கின்றன.

    இதையடுத்து பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்.இ.டி.சி மற்றும் டி.என்.எஸ்.டி.சி பஸ்கள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே தற்போது கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பகல் நேரத்தில் மிகவும் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் பயணம் மேற்கொள்வதை காண முடிகிறது. இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்த பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு கிடக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


    இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    • பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.

    அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.

    சென்னை :

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    * கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மக்களுக்கு தேவையானதை செய்ய இருக்கிறோம். அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்படும்.

    * கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.

    * பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக செய்து தரப்படும்.

    * ஜன. 24-ந்தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    * கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகியவையும் உடனடியாக நிரம்பின.

    மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவையும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றவர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில் இருக்கும் வகையில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.

    சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 900 பஸ்களுடன் கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

    இது தவிர கார்கள் உள்பட சொந்த வாகனங்களிலும் நேற்று ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி வழியாக வெளி வட்டச்சாலையில் திருப்பி விடப்பட்டு அங்கிருந்து நேராக வண்டலூர் சென்று பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கார்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனங்களால் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூர் வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வண்டலூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றன. இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இதற்கிடையே வண்டலூரை கடந்து சென்ற வாகனங்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் புகுந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேலும் சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று முன்பதிவு செய்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    இதனால்அந்த பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன் பிறகும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன.

    குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் சுமார் 10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன.

    தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது.

    இதனால் நேற்று சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    நள்ளிரவை தாண்டிய பிறகு சாலைகளில் வரும் வாகனங்கள் குறையத் தொடங்கின. அதன் பிறகு போக்குவரத்து ஓரளவு சீராகத் தொடங்கியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் அதிகாலை 2.15 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.

    செங்கல்பட்டு அருகே பரனூர் சோதனை சாவடியில் வழக்கமாக 6 வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தீபாவளி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று 8 வழிப்பாதையிலும் வாகனங்கள் சென்றன. இதனால் செங்கல்பட்டை தாண்டியபிறகு எந்த நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. அதிகாலைக்கு பிறகு இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக காணப்பட்டது.

    இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வெளியூர் சென்ற பயணிகளால் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    • பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் நேற்று சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் மாலை 5 மணி முதல் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும். இரவு 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும்.

    ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல்தான் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அனைத்து நடைமேடையிலும் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு புற்றீசல் போல் வந்து கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் பஸ்கள் இல்லை.

    சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் இது தெரியாமல் அங்கு வந்தனர்.

    மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் பயணிகள் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும், இங்கிருந்து இயக்க இயலாது என்று அதிகாரிகள் கூறியதால் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்கப்பட்டது.

    இதற்கிடையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் உட்பட பயணிகள் அதிகளவில் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30மணி வரை காத்திருந்தும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மாலை 5 மணியில் இருந்து பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் கொண்டன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்து இருந்தனர்.

    திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையான தகவல் கொடுக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.

    பஸ் நிலையத்தை விட்டு ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்துதான் சென்றன. பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்பட பஸ் டிரைவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.

    நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு 12மணி வரை தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் என மொத்த 6656 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.
    • சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

    இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கோயம்பேடு பஸ் நிலைய அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

    நேற்று முன்தினம் (9-ந் தேதி) சென்னையில் இருந்து சுமார் 8500 பேரும், நேற்று 5 ஆயிரம் பேரும் அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    இதேபோன்று மற்ற பகுதிகளில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கும் ஏராளமானோர் புறப்பட்டு சென்று உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்கள் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று மாலையில் சென்னை வருவதற்கு சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று மாலைக்குள் மேலும் 4 ஆயிரம் கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி இன்று மாலையில் மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 26 ஆயிரம் பேர் பயணம் மேற் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இவர்கள் நாளை காலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்படக் கூடாது என் பதை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ×