என் மலர்
நீங்கள் தேடியது "கோயம்பேடு பஸ் நிலையம்"
- இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர்.
- பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
சென்னை:
கோயம்பேடு பஸ்நிலையம் ஆசியாவில் மிகப்பெரிய பஸ்நிலையமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மற்றும் சென்னை நகர் மற்றும் புறகர் பகுதிகளுக்கு செல்லும் மாநகர பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தினமும் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். எப்போதும் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும்.
சமீபகாலமாக கோயம்பேடு பஸ்நிலையத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
மேலும் ஆண்களிடம் பாலியல் சில்மிஷங்களும் அதிகரித்து உள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் ஆண்களி டம் ஒரு கும்பல் சில்மிஷத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர்.
தனிமையில் நிற்கும் பயணிகள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து அழகான பெண்கள் இருப்பதாக கூறி விபசாரத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்து வருகின்றனர். சபலத்தால் சிலர் செல்லும் போது அங்கு அவர்களை மிரட்டி நகை-பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பலர் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல அசிங்கப்பட்டும், அச்சப் பட்டும் மூடிமறைத்து விடுகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி ரவுடி கும்பல் கோயம்பேடு பஸ்நிலையத்தை தங்களது கூடாரமாக மாற்றத் தொடங்கி உள்ளனர். அவர்களது அட்டகாசம் எல்லை மீறி நடந்துவருகிறது.
இதேபோல் கோயம்பேடு பஸ்நிலையத்தில் குடி போதையில் இரவு முழுவதும் தூங்கும் வீடாக போதை ஆசாமிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் அமரும் இருக்கையில் ஹாயாக படுத்து தூங்கும் காட்சி தினந்தோறும் அரங்கேறி வருகிறது. போதை கும்பல் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதும் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
ரவுடிகள் அட்டகாசம் மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாதது கோயம்பேடு பஸ்நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
பஸ்நிலையம் முழுவதும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள், பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் ஆகியவை சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் சரிவர பஸ்நிலையத்துக்கு ரோந்து வருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
கடந்த 2 நாட்களுக்குமுன்பு கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுபற்றி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் அங்கு இல்லை என்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா கூறும்போது, பஸ்கள் நிறுத்தப்படும் தடுப்பு சுவர் மற்றும் அங்குள்ள ஓரங்களில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. பெண் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகும்பலை கட்டுப்படுத்த போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட சி.எம்.டி.ஏ.வால் போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு பின்னர் பஸ்நிலையத்துக்கு நுழையும் இடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயணிகள் தேவையில்லாமல் பஸ் நிலையத்துகள் நுழைவதைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமற்று காணப்படும் பஸ்நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் பஸ்நிலையம் முழுவதையும் அவ்வப்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடிகள் அட்டகாசம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுத்தம் செய்வதில்லை. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பஸ்நிலையத்தில் இரவு நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பயணிகள் இல்லாமல் தங்கி உள்ளனர். அவர்களுடன் சமூக விரோதிகளும் புகுந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பஸ்நிலையத்தில் தேவையில்லாமல் வருபவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி சோதனை நடத்தி பஸ்நிலையத்தில் வீடு போல் தங்கி இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றனர்.
- பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாக தெரிவித்தனர்.
- மாணவிகள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போரூர்:
கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 10.30மணி அளவில் 2 சிறுமிகள் வழிதெரியாமல் சுற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும் அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருவதும் தெரியவந்தது.
தாய்-தந்தையை இழந்த மாணவிகளை பெங்களுரில் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பஸ்நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மாணவிகள் தாங்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று போலீசாரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து மாணவிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்கள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கத்தை விட அதிக அளவிளான பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
- போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
போரூர்:
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தங்கி இருக்கும் பலர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வார விடுமுறை மற்றும் நாளை மே தின விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதலே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து பயணிகளில் வசதிக்கேற்ப கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
நேற்று இரவும் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கத்தை விட அதிக அளவிளான பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு இல்லாமல் வந்த பயணிகள் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி சென்றனர்.
கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப் பட்டதாக தெரிகிறது. மேலு இரவு 10.30மணி முதல் இந்த இடங்களுக்கு செல்ல பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பஸ் நிலைய வளாகத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் இருக்கையில் அமர கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர் பலர் தங்களது உடமைகளுடன் செய்வது அறியாமல் நின்றனர். இதனால் இரவு முழுவதும் பயணிகள் குடும்பத்துடன் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையால் மீண்டும் முன்பு போல் பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
- நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர்.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில், தனியார் பஸ்களில் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
முன்பதிவு இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் பயணிகள் பலர் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர்.
ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர். இதுபற்றி அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டார் திடீரென 5 மற்றும் 6-வது பிளாட்பாரத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் அங்கு முன்பதிவு செய்த பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பஸ்சை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போக்கு வரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து கேட்டு அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் நள்ளிரவு 1மணி அளவில் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்று சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகிறோம்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அனைத்து பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்குள் நுழையாமல் ஜி.என்.டி. சாலையில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து செல்லும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் உள்ள பணி மனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் இருப்பதை அறிந்தார்.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து சுண்ணாம்பு குளம், அண்ணாமலை சேரி, தேர்வாய், கல்லூர், பிளேஸ்பாளையம், சத்தியவேடு, புத்தூர், மையூர், முக்கரம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நாளை (4-ந் தேதி) முதல் கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கோயம்பேடு பஸ் நிலைய அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் (9-ந் தேதி) சென்னையில் இருந்து சுமார் 8500 பேரும், நேற்று 5 ஆயிரம் பேரும் அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதேபோன்று மற்ற பகுதிகளில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கும் ஏராளமானோர் புறப்பட்டு சென்று உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்கள் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையில் சென்னை வருவதற்கு சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று மாலைக்குள் மேலும் 4 ஆயிரம் கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி இன்று மாலையில் மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 26 ஆயிரம் பேர் பயணம் மேற் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இவர்கள் நாளை காலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்படக் கூடாது என் பதை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.
- சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
போரூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.
குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
- வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
சென்னை:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
- இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் நேற்று சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் மாலை 5 மணி முதல் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும். இரவு 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும்.
ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல்தான் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அனைத்து நடைமேடையிலும் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு புற்றீசல் போல் வந்து கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் பஸ்கள் இல்லை.
சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் இது தெரியாமல் அங்கு வந்தனர்.
மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் பயணிகள் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும், இங்கிருந்து இயக்க இயலாது என்று அதிகாரிகள் கூறியதால் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்கப்பட்டது.
இதற்கிடையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் உட்பட பயணிகள் அதிகளவில் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30மணி வரை காத்திருந்தும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மாலை 5 மணியில் இருந்து பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் கொண்டன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்து இருந்தனர்.
திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையான தகவல் கொடுக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.
பஸ் நிலையத்தை விட்டு ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்துதான் சென்றன. பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்பட பஸ் டிரைவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு 12மணி வரை தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் என மொத்த 6656 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.
சென்னை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகியவையும் உடனடியாக நிரம்பின.
மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவையும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றவர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில் இருக்கும் வகையில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.
சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 900 பஸ்களுடன் கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.
இது தவிர கார்கள் உள்பட சொந்த வாகனங்களிலும் நேற்று ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி வழியாக வெளி வட்டச்சாலையில் திருப்பி விடப்பட்டு அங்கிருந்து நேராக வண்டலூர் சென்று பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கார்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனங்களால் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூர் வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வண்டலூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றன. இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
இதற்கிடையே வண்டலூரை கடந்து சென்ற வாகனங்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.
நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் புகுந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேலும் சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று முன்பதிவு செய்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.
இதனால்அந்த பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன் பிறகும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன.
குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் சுமார் 10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன.
தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது.
இதனால் நேற்று சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.
நள்ளிரவை தாண்டிய பிறகு சாலைகளில் வரும் வாகனங்கள் குறையத் தொடங்கின. அதன் பிறகு போக்குவரத்து ஓரளவு சீராகத் தொடங்கியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் அதிகாலை 2.15 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.
செங்கல்பட்டு அருகே பரனூர் சோதனை சாவடியில் வழக்கமாக 6 வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தீபாவளி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று 8 வழிப்பாதையிலும் வாகனங்கள் சென்றன. இதனால் செங்கல்பட்டை தாண்டியபிறகு எந்த நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. அதிகாலைக்கு பிறகு இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக காணப்பட்டது.
இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வெளியூர் சென்ற பயணிகளால் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
- பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.
சென்னை :
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
* கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மக்களுக்கு தேவையானதை செய்ய இருக்கிறோம். அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்படும்.
* கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.
* பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக செய்து தரப்படும்.
* ஜன. 24-ந்தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
* கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
- அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.
சென்னை:
சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.
தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.
அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.
பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.