என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணைக் கைதிகள்"

    • இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    டெல்அவில்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

    டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

    டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

    • பயணக் கைதிகளை விடுவிக்கும் வகையில் 6 வார போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால், பணயக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என மிரட்டல் விடுத்திருந்தது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

    அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்திருந்தனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

    இந்த நிலையில் இன்று 3 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் முடிவு செய்திருந்தது. ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் மிரட்டல் விடுத்தது.

    இதற்கிடையே சனிக்கிழமைக்குள் அனைத்து பயணக் கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால காசாவில் நரகம வெடிக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு காசா மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதனால் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. லெய்ர் ஹோர்ன் (46), சாகுய் தெகெல் சென் (36), அலெக்சாண்டர் (சஷா) டிரௌபனவ் (29) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    லெய்ர் ஹோர்ன் இஸ்ரேல் மற்றும் அர்ஜென்டினா குடியுரிமை கொண்டவர். சாகுய் தெகெல் சென் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஆவார். அலெக்சாண்டர் இஸ்ரேல் மற்றும் ரஷியா குடியுரிமை கொண்டவர். இந்த மூன்று பேருடன் மொத்த 24 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.

    • சண்டை 6 வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    • இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் அவர்கள் 4 பேரும் பலியானதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக நடந்து வந்த சண்டை 6 வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.

    நேற்று ஷிரி பிபஸ் என்ற பெண் , அவரது 2 குழந்தை களான ஏரியல், கிபிர் மற்றும் ஓய்வு பெற்ற பத்திரிகையாளரான ஓடட் லிப்ஷிட்ஸ் ஆகிய 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் அவர்கள் 4 பேரும் பலியானதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. 2 குழந்தைகளும் காசாவில் பாலஸ்தீன பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே தெரிவித்து உள்ளார். மேலும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்த ஷிரி பிபஸ் உடல் அவருடையது இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

    மேலும் அவர் ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற அனைத்து பிணைக்கைதிகளுடன் சேர்த்து ஷிரிபிசையும் திருப்பி அனுப்ப வேண்டும் என நாங்கள் கோருகிறோம் என தெரிவித்துள்ளார். 

    • தங்களை அடிமைப்படுத்தி குற்றவாளியாக ஆக்கியிருப்பதாக இந்தியர்கள் தகவல்
    • இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நய்பிடாவ்:

    தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 60 பேர் உள்பட 300 இந்தியர்கள் முகவர்கள் மூலம் தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அவர்களை ஒரு கும்பல் தாய்லாந்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்றனர். அங்கு பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை குற்ற செயல்களில் ஈடுபடுமாறு சித்ரவதை செய்கிறார்கள் என்று தகவல் வெளியானது.

    மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்களை காப்பாற்றுமாறு வீடியோ வெளியிட்டதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்லாந்து மற்றும் மியான்மர் அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பிணை கைதிகளாக உள்ள இந்தியர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மியான்மரின் மியாவாடி பகுதியில் எங்களை அடைத்து வைத்து குற்ற செயல்களில் ஈடுபடுமாறு சித்ரவதை செய்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நாடுகளில் இருந்து போலி இ-மெயில் குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. கடத்தல் கும்பல் சொல்வதை செய்ய மறுப்பவர்கள் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொடுமைப் படுத்துகிறார்கள்.

    தினமும் 16 மணி நேரம் வேலை பார்ப்பதுடன் சரியாக உணவும் கொடுப்பதில்லை.

    எங்களை அடிமைப்படுத்தி குற்றவாளியாகவும் ஆக்கியுள்ளனர். இந்த விவகாரம் வெளியே கசிந்ததால் எங்களை வேறு இடங்களுக்கு மாற்றவும் அதிக வாய்ப்புள்ளது.

    இங்கிருந்து தப்ப நினைப்பவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களது உடல் பாஸ்போர்ட்டுடன் தாய்லாந்து எல்லையில் வீசப்படும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். 24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் இருப்பதால் நாங்கள் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயத்தில் இருக்கிறோம். அதற்கு முன்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×