என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தரகர்கள் கைது"

    • தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை.
    • முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.

    பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தக்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.

    பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைப்பது இல்லை. எல்லா வகுப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை. இதில் இடைத்தரகர்கள் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதா என ரெயில்வே வணிகத் துறையோடு இணைந்து பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    கடந்த சில மாதங்களாக தட்கல் டிக்கெட் விற்பனையை ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட சில முகவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் தினமும் அதிகளவில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இது போன்ற முறைகேடு நடந்து இருந்தாலும் தெற்கு ரெயில்வே மூலமே இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்யும் போது பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து இறுதியாக பணம் செலுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த நடைமுறை முற்றுப்பெறும். இந்த நடைமுறைகளை மேற்கொள்ள 2, 3 நிமிடங்கள் ஆகிவிடும். ஆனால் புரோக்கர்கள் சட்டவிரோதமாக போலி சாப்ட்வேர் தயாரித்து முன்பதிவுக்கான நடைமுறைகள் எதுவும் இல்லாமல் நேரடியாக மிக எளிதாக டிக்கெட் பெறக்கூடிய வசதியை ஏற்படுத்தி இதுவரையில் புக்கிங் செய்து மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

    பெயர், வயது, செல்லும் இடம், தேதி போன்றவற்றை மட்டும் பதிவு செய்து பணத்தை செலுத்தும் இந்த சாப்ட்வேர் மூலம் விரைவாக முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட்டினை பெற முடியும் என்பதை ரெயில்வே அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்புள்ள 7506 டிக்கெட்டுக்கள் தெற்கு ரெயில்வேயில் மட்டும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் 404 இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது 391 வழக்குகள் பதிவு செய்து கைதாகியுள்ளனர்.

    இந்த மோசடியில் ஐ.ஆர்.சி.டி.சி. முகவர்களும் சிக்கியுள்ளனர். 119 முகவர்கள் சாப்ட்வேர் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் ஐ.டி. முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதே போல 2003 ஐ.ஆர்.சி.டி.சி. ஐ.டி.களும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதனையும் முடக்கி வைத்துள்ளனர். மொத்தமாக டிக்கெட் புக்கிங் செய்வதிலும், தக்கல் முன்பதிவிலும் இந்த முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்தனர்.
    • மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 2 இடைத்தரகர்களும் நூற்றுக்கணக்கானவர்களை மியான்மர் நாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி உள்ளனர்.

    மும்பை:

    மியான்மர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மியாவாடி என்ற நகரம் மாபியா கும்பல் மற்றும் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கிறது.

    அந்த மாபியா கும்பல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கொண்டது. அந்த ஆயுத குழுவினர் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களை கடத்தி சென்று தங்களது டிஜிட்டல் குற்றங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    அந்த வகையில் அந்த மாபியா கும்பலிடம் சுமார் 300 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக சிக்கி இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. அவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள் என்பதும் அங்கிருந்து பேசியவர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

    தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலரும் மியான்மருக்கு கடத்தப்பட்டு ஆன்லைன் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மாபியா கும்பலிடம் இருந்து தங்களை மீட்குமாறு தமிழக இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். முதலில் 32 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அடுத்தகட்டமாக 13 தமிழர்கள் மீட்கப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    மற்றவர்களையும் மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 6 தமிழர்கள் அங்குள்ள ஆயுதக்குழுக்கள் கும்பலிடம் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    மியான்மருக்கு கடத்தி செல்லப்படும் இளைஞர்களை இந்தியாவில் சிலர் திட்டமிட்டு ஏமாற்றி அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் நல்ல வேலை இருப்பதாகவும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் ஏமாற்றி அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அங்கு சென்ற பிறகு கிரிப்டோ கரன்சி மூலம் மோசடி செயல்களை செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளனர். மோசடியில் ஈடுபட மறுப்பவர்களை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்து உள்ளனர். இவை அனைத்தும் மீட்கப்பட்டவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே மீட்கப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் 2 இடைத்தரகர்கள் சிக்கி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் டோங்கிரி நகரை சேர்ந்த அந்த 2 இடைத்தரகர்களும் நூற்றுக்கணக்கானவர்களை மியான்மர் நாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி உள்ளனர். அங்குள்ள ஆயுதக்குழுக்களுடன் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த 2 இடைத்தரகர்களும் நவாஸ்கான், உமர் காதர் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடம் மகாராஷ்டிர மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை போல மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் இடைத்தரகர்களை பிடிக்கவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×