என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி கட்சிகள்"

    • கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமீபத்தில் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

    இதன் அடுத்த கட்டமாக ஜனாதிபதியிடம் முறையிடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து ஜனாதிபதியிடம் கொடுக்க உள்ள கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தொ.மு.ச. தொழிற்சங்கம் சண்முகம் எம்.பி., ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் நேற்று கையெழுத்திட்டனர்.

    தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்தீபன், கல்யாண சுந்தரம், ராமலிங்கம் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று காலையில் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர்.

    தி.மு.க. எம்.பி.க்களும் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

    எனவே விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இந்த கடிதத்தை எம்.பி.க்கள் வழங்க உள்ளனர்.

    • தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்காக முயற்சிகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
    • தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம்.

    சென்னை:

    `சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது.

    இதுதொடர்பாக வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.

    மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மொழி கொள்கை விசயத்தில் மத்திய மந்திரி திமிராக பேசினால் தமிழர்கள் தனி குணத்தை காட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி தராமல் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய கல்வி மந்திரி பேசி இருப்பது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    'சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு நிதி பெற சட்ட நடவடிக் கைகளில் ஈடுபடலாமா? அல்லது அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொள்ளலாமா? என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.

    பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட-தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

    தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.

    அது, அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

    வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!

    அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என் பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!!

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    ×