என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி20 உச்சி மாநாடு"

    • டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 மாநாட்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன.

    அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக ஜி-20 நாடுகள் அமைப்பு திகழ்கிறது. அந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

    ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. ஒவ்வொரு மாநாட்டின் போதும் ஏதாவது ஒரு முழக்கம் வெளியிடப்படுவது வழக்கம்.

    அதன்படி "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்பது டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டின் முழக்கமாக உள்ளது. டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டுக்காக மத்திய அரசு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லி மாநகரம் சொர்க்க லோகம் போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்கள் நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக நடைபெற்றன. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் ஜி-20 நாடுகள் இடையே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த முடிவுகள் கருதப்படுகின்றன.

    அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவதற்காக டெல்லி ஜி-20 மாநாட்டின் தலைவர்கள் பங்கேற்பு கூட்டம் நாளை (சனிக்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. சனி, ஞாயிறு 2 நாட்கள் ஜி-20 உச்சி மாநாடு விவாதங்கள் நடைபெறும்.

    டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 மாநாட்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் ஜி-20 நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுவார்கள்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் டெல்லி வர தொடங்கி விட்டனர். பெரும்பாலானவர்கள் நேற்று வந்து சேர்ந்து விட்டனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மேக்ரான், வங்காளதேச பிரதமர் ஹசீனா, சவுதி இளவரசர் மற்றும் தலைவர்கள் டெல்லி வருகிறார்கள்.

    டெல்லி வரும் வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க மத்திய மந்திரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கிறார்கள். அதன் பிறகு வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை. அவர் வீடியோ மூலம் பேசுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வீடியோ மூலமாகவும் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று இன்று காலை தகவல்கள் வெளியானது.

    அதுபோல சீன அதிபர் ஜின்பிங் ஜி-20 மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளார். அவருக்கு பதில் சீன பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருகிறார். ஜி-20 அமைப்பில் இடம்பெற்று உள்ள நாட்டுகளின் தலைவர்களை தவிர சிறப்பு அழைப்பாளர்களாக சில நாட்டு தலைவர்களை அழைக்கும் அதிகாரம் மாநாட்டை நடத்தும் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஸ்பெயின் உள்பட 9 நாட்டு தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இது தவிர ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு உள்பட உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    அதை ஏற்று நூற்றுக்கணக்கான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லியில் வந்து குவிந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான் செஸ்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது டெல்லி வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

    உலக தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிவதால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி முழுவதும் முக்கிய இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் செல்லும் வாகன போக்குவரத்து முழுமையாக தணிக்கை செய்யப்படுகிறது. டெல்லியில் மருந்து சேவை போன்ற அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் எளிதாக வந்து செல்வதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    2 நாட்கள் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக பருவ நிலை மாற்ற பிரச்சனையை சமாளிக்க எரிசக்தி துறையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது ஜி-20 மாநாட்டில் முக்கிய விவாத பொருளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எதிர்காலத்தில் எரிசக்தி மாற்றம் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவேதான் ஜி-20 மாநாட்டில் இதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட உள்ளது.

    மாநாட்டுக்கு ஒரே உலகம் முழக்கம் வைக்கப்பட்டு இருப்பதால் பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முன்னணி நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முக்கிய முடிவுகள் நாளை, நாளை மறுநாள் கூட்டங்களில் எடுக்கப்பட உள்ளது. குறைந்த நிதி ஆதாரத்தில் நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து பருவநிலை சவாலை எதிர்கொள்வது என்பது பற்றியும் தீர்மானிக்கப்பட உள்ளது.

    மேலும் கொரோனா தாக்கம் உலகை குலுக்கிய பிறகு இந்தியா தலைமையில் நடக்கும் முக்கிய சர்வதேச மாநாடாக இது அமைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் கொரோனா போன்று ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் அவற்றை ஒன்றுபட்டு எதிர்க்க ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தை உருவாக்கவும் ஜி-20 மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

    சுகாதார அவசர கால தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதுபோன்று மேலும் பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளன.

    • உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

    சென்னை:

    டெல்லியில் ஜி-20 மாநாடு 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த பிரதமர் மோடி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு( 9-ந்தேதி ) விருந்து அளிக்கிறார்.

    ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

    • உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.
    • பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை (செப்டம்பர் 9, 10) மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.

    புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

    இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஜி20 மாநாட்டில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

    • அறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்தது
    • 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' கோட்பாடு வலியுறுத்தல்

    அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது.

    உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனாவும், உக்ரைனை அமெரிக்காவும் ஆதரிப்பதால், மாநாட்டில் வெளியிடப்பட வேண்டிய கூட்டு பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க எந்த முடிவும் எடுக்கப்படாததால், வரைவறிக்கையில் இந்தியா புதியதாக சில வாக்கியங்களை சேர்த்து தலைவர்களின் பார்வைக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ஜி20 தலைவர்களுக்கிடையே பிரகடனம் குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் அறிவித்தார். 'டெல்லி பிரகடனம்' என அழைக்கப்படும் இந்த அறிக்கையில் உக்ரைன் போர் குறித்து இந்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.

    அதில், "சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றுடன் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சட்டங்களின் அடிப்படை கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்."

    "நாடுகளுக்கிடையேயான மோதல்களையும் நெருக்கடிகளையும் அமைதியான வழிமுறைகளில் தீர்த்து கொள்ளவும், ராஜதந்திரத்தின் மூலம் பேச்சுவார்த்தையின் மூலமாகவுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்."

    "போரினால் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் மோசமான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் முயற்சியில் நாங்கள் ஒன்றுபடுவோம். மேலும், அண்டை நாடுகளுக்கிடையே அமைதியான நட்பும் நல்லுறவும் நிலவ 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' எனும் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையிலும், உக்ரைனில் அமைதியை கொண்டு வர ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்து நிற்க கூடிய அனைத்து வகையான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய காலகட்டம் ஒரு போருக்கான காலகட்டமாக மாறக்கூடாது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ‘அரசு எங்களை பூச்சிகளைப் போல கருதுகிறது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?’ என்று ஒரு குடிசைவாசி கேள்வி கேட்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
    • தெருநாய்கள் போன்றவை குரூரமாக சுற்றிவளைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகின்றன.

    புதுடெல்லி:

    தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது. நம் நாட்டின் உண்மைநிலையை நமது விருந்தினர்களிடம் மறைக்கத்தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஆக்கப்பூர்வ கூடலாக இருக்க வேண்டும், உலக பிரச்சனைகளை ஒத்துழைப்போடு கையாள வேண்டும் என்பதே ஜி-20 மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் வராமல் இருக்கலாம். இளவரசர் பொடம்கினின் (முன்னாள் ரஷிய ராணுவ தலைவர். பிரதமர் மோடியை இவ்வாறு குறிப்பிடுகிறார்) கைங்கரியம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகள் துணிகளை கட்டி மூடி மறைக்கப்பட்டுள்ளன அல்லது இடித்து தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்துள்ளனர். தெருநாய்கள் போன்றவை குரூரமாக சுற்றிவளைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகின்றன. பிரதமர் மோடியின் மதிப்பை மெருகேற்றுவதற்கே இவ்வாறு செய்யப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

    டெல்லியில் குடிசைப்பகுதிகள் துணியை கட்டி மறைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியையும், தெருநாய்கள் போன்றவை பிடித்து இழுத்துச் செல்லப்படும் காட்சியையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

    மேலும் ஒரு வீடியோவில், 'அரசு எங்களை பூச்சிகளைப் போல கருதுகிறது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?' என்று ஒரு குடிசைவாசி கேள்வி கேட்பது இடம்பெற்றுள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
    • விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைலுக்கினார்.

    ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.

    இந்த மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது.

    இந்த விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைலுக்கினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

    • அதிபரை பாதுகாக்க, பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
    • துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏவும் வசதிகளும் இதில் உள்ளன.

    அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவு எண் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த காரில் மட்டுமே அமெரிக்க அதிபர் பயணம் செய்வார். பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா பாதுகாப்பு துறை இதை நடைமுறையாக வைத்துள்ளது.

    அந்த வகையில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பீட்ஸ் காரில் பயணம் செய்கிறார். டெல்லி சாலைகளில் வலம் வரும் இந்த பீஸ்ட் கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காரின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    * சமீபத்திய மாடல் 'பீஸ்ட் காரை' ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.) நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

    * இதன் எடை 6,800 கிலோ முதல் 9.100 கிலோ எடை வரை இருக்கும். இதில் 7 பேர் பயணம் செய்யலாம். இதன் நீளம் 18 அடி.

    * அதிபரை பாதுகாக்க, பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவசர காலத்தில் பயன்படுத்த அதிபரின் குரூப் ரத்தம் இதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

    * ரசாயன தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் இருக்கும் அதிபருக்கு பாதிப்பு ஏற்படாது. டயர் பஞ்சர் ஆனாலும் கார் ஓடும். இருள் சூழ்ந்த பகுதியை பார்க்கும் கருவிகள், தாக்குதலில் இருந்து தப்பிக்க புகை மண்டலத்தை ஏற்படுத்தும் சாதனம், எதிரிகளின் வாகனம் பின் தொடர்வதை தடுக்க எண்ணை பீய்ச்சி அடிக்கும் சாதனம் ஆகியவை இதில் உள்ளன.

    * அலுமினியம், செராமிக் மற்றும் எக்கு பயன்படுத்தி கவச வாகனம் போல் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * காரின் வெளிப்புற தகடுகள் 8 இன்ச் தடிமன் கொண்டவை. கார் கண்ணாடிகள் 130 மி.மீ. தடிமனில் பல அடுக்குகளாக இருக்கும். காரின் ஒவ்வொரு கதவும் போயிங் 757 விமான கதவின் எடை அளவுக்கு இருக்கும். எதிரிகள் யாரும் கார் கதவை திறப்பதை தடுக்கும் வகையில் அதன் கைப்பிடியில் 120 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி ஷாக் கொடுக்கும் வசதிகளும் இதில் உள்ளன.

    * துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏவும் வசதிகளும் இதில் உள்ளன.

    * அதிபரின் கார் அணிவகுப்பில், ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் செல்லும்.

    * இதன் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 12 கோடியே 45 லட்சம்). ஆனால் இந்த காரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ. 124 கோடி ஜி.எம். நிறுவனம் செலவிட்டுள்ளது.

    • ஜி20 உறுப்பினர்களில் ரஷியாவை சீனா ஆதரிக்க அமெரிக்கா எதிர்க்கிறது
    • உறுப்பினர்களின் 100 சதவீத ஒப்புதல் கிடைத்ததாக பிரதமர் அறிவித்தார்

    ஜி20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ஜி20 அணியில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அங்கத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டின் முக்கிய முடிவுகளும், எதிர்கால நோக்கங்கள் குறித்தும் ஒரு அறிக்கை கூட்டாக வெளியிடப்படுவது வழக்கம். இம்முறை இந்த வரைவறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு சிக்கல் எழுந்தது.

    ரஷிய உக்ரைன் போரில், ஜி20 அணியில் உறுப்பினரான சீனா, ரஷியாவை ஆதரிக்கிறது. ஆனால் மற்றொரு உறுப்பினரான அமெரிக்கா ரஷியாவை எதிர்க்கிறது. ஒரு சில உறுப்பினர் நாடுகள் இரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகிக்கிறது.

    இந்நிலையில், வரைவறிக்கை தயாரிப்பின்போது ரஷிய உக்ரைன் போர் குறித்து இடம்பெறும் கருத்துக்களால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று மாலை அனைத்து உறுப்பினர்களின் 100 சதவீத ஒப்புதலுடன் கூட்டறிக்கை தயாரானதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    டெல்லி பிரகடனம் எனும் பெயரில் அந்த அறிக்கை நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஏற்று கொண்டுள்ள அம்சங்களுடன் நேற்று வெளியாகியது.

    இதனை தயார் செய்ய இணை செயலாளர் ஈனம் கம்பீர் மற்றும் நாகராஜ் நாயுடு ஆகியோர் பல நாட்டு பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதன் பயனாக இச்சிக்கலில் மாநாட்டின் முதல் நாளிலேயே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டது.

    டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டது குறித்து இம்மாநாட்டிற்கான இந்திய அரசாங்கத்தின் ஷெர்பா (sherpa) எனப்படும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த் கூறியுள்ளதாவது:-

    அறிக்கை தயாரிப்பில் மிகவும் சிக்கலாக இருந்தது புவிசார் அரசியல் பிரச்சனையான ரஷிய உக்ரைன் போர் குறித்து இடம்பெறும் பத்திகளும், அது சம்பந்தமான வாக்கியங்களும் உருவாக்கப்படுவதுதான். இதற்காக உறுப்பினர் நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக 300க்கும் மேற்பட்ட சந்திப்புகள நடந்தன. 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகளும் அவர்கள் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டு அதன் பிறகே இது சாத்தியமானது.

    இவ்வாறு அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

    உலக தலைவர்களின் கூட்டறிக்கையில் "ரஷியா", "உக்ரைன்" எனும் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு "அனைத்து நாடுகளும் பிற நாடுகளின் எல்லைக்கான உரிமைகளை மதிக்க வேண்டும்" என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    • எதிர்காலம் டிஜிட்டல் மயமாக இருக்கும் என்றார் உர்சுலா
    • ஏஐ குறித்து அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும்

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது 2-நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதன் 3-வது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லெயென் (Ursula von der Leyen) உரையாற்றினார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    இன்று நான் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து பேச விரும்புகிறேன்.

    ஏஐ-யால் சில அபாயங்களும் ஏற்படலாம். ஆனால், இது மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது முக்கியமான கேள்வி. செயற்கை நுண்ணறிவை உருவாக்கி மென்பொருளை தயாரிப்பவர்கள் இதனை ஒழுங்குபடுத்த அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைக்கிறார்கள்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில், 2020-ல், செயற்கை நுண்ணறிவு குறித்த முதல் சட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். நம்பிக்கையை வளர்க்கும் அதே நேரத்தில் புதுமைகளை எளிதாக்க விரும்புகிறோம். இப்போது உலகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்தே நமது எதிர்காலம் வடிவமைக்கப்படும்.

    ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை களைந்து புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கும் என நான் நம்புகிறேன். பாதுகாப்பான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகளில் முதலீடுகளை வளர்க்க வேண்டும்.

    ஏஐ-யினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கான சாத்தியமான நன்மைகளையும் அவர்கள் வழங்க வேண்டும். இதன் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கு சாத்தியமான நன்மைகளையும் நிபுணர்கள் வழங்க வேண்டும்.

    இரண்டாவதாக டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் குறித்து பேச விரும்புகிறேன். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு உண்மையான ஊக்க சக்தியாக இருக்கலாம். இந்தியா, தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

    இந்திய பிரதமர் கூறியதை கேட்டோம். அவருடைய முயற்சிகளை நாங்கள் மிகவும் ஆதரிக்கிறோம். சிறிய முதலீடுகளில் பெரும் பயன்கள் சாத்தியம் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அனைவருக்குமான அனைவரும் நம்பக்கூடிய, சிறப்பாக இயங்கக்கூடிய ஒரு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதிலேதான் வெற்றி அடங்கியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மற்றும் டிரான்ஸ்-ஆப்பிரிக்கா வழிப்பாதை எனும் திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

    புதிய பொருளாதார வழித்தடம் (New Economic Corridor) எனப்படும் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை நாளைய உலகின் வேகமான, சுருக்கமான மற்றும் தூய்மையான ஒரு இணைப்பு நடவடிக்கை என பாராட்டினார்.

    • 18-வது உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது
    • அடுத்தாண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது

    உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது 2-நாள் உச்சி மாநாடு, இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது.

    இதனையடுத்து, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை, பிரேசில் நாட்டதிபரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். அதனை பிரேசில் நாட்டதிபர் லுலா ட சில்வா (Lula da Silva) பெற்று கொண்டார்.

    அடுத்தாண்டு இம்மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது.

    இது குறித்து பிரேசில் அதிபர் லூலா ட சில்வா தெரிவித்ததாவது:-

    இந்தியா ஒரு உயரங்களை எட்டப்போகும் நாடு. நான் அதன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெறும் நூற்றுக்கணக்கான சந்திப்புகளின் மூலம் மக்களையும் ஆட்சியமைப்பில் முழுமையாக பங்கு பெற வைக்கும் புதிய வழிமுறையை இந்தியாவிடம் நாங்கள் கற்று கொண்டோம். இந்தியாவிலிருந்து பலவற்றை நாங்கள் அறிந்து கொண்டோம். அவற்றை கொண்டு இந்தியாவில் இப்போது நடந்த மாநாட்டை போலவே ஆக்கபூர்வமான ஒரு மாநாட்டை அடுத்த வருடம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    pic.twitter.com/Y1Xh30KfJG

    • "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் முழக்கம் இடம்பெற்றிருந்தது.
    • "உலகம் முழுவதிலும் அமைதியும் நம்பிக்கையும் நிலவட்டும்" என்றார்.

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது.

    இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய தலைநகர் புது டெல்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் எனும் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

    இம்மாநாட்டின் மையக்கருவாக "வசுதைவ குடும்பகம்" எனும் தத்துவத்தின் அடிப்படையில் "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் முழக்கம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாநாடு நிறைவடைந்ததையடுத்து, இந்த கூட்டமைப்பின் தலைமை, பிரேசில் நாட்டிற்கு வழங்கப்பட்டது. அடுத்த வருடம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இந்த கூட்டமைப்பின் அடுத்த சந்திப்பு நடைபெறும்.

    அதிகாரபூர்வமாக பிரேசில் இந்த தலைமை பொறுப்பை டிசம்பர் மாதம் ஏற்று கொள்ளும். அதுவரை இந்தியா இதன் சம்பிரதாய தலைமையில் இருந்து வரும்.

    இந்த நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இறுதி உரை நிகழ்த்தினார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    நண்பர்களே.. எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிரேசிலுக்கு முழு ஆதரவை வழங்குவோம். அவர்களின் தலைமையின் கீழ் ஜி20 அதன் இலக்குகளை மேலும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பிரேசில் அதிபர் மற்றும் எனது நண்பர் லூலா டி சில்வா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஜி20 தலைமை பதவியை அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.

    நீங்கள் அனைவரும் அறிந்தபடி, நவம்பர் மாத இறுதி வரை ஜி20 தலைமையில் இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது. இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ளன.

    கடந்த இரண்டு நாட்களில், நீங்கள் அனைவரும் இங்கு பல விஷயங்களை முன்வைத்து, பல பரிந்துரைகளை வழங்கியுள்ளீர்கள். மேலும், புதிதாக பல திட்டங்களையும் முன்வைத்துள்ளீர்கள். நீங்கள் வழங்கியிருக்கும் பரிந்துரைகள், அவற்றின் மீதான அடுத்த கட்ட நகர்வுகள், அவற்றை எவ்வாறு இயக்க முடியும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

    நவம்பர் பிற்பகுதியில் ஜி20 உச்சி மாநாட்டின் மெய்நிகர் அமர்வை (virtual session) நடத்த வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். அந்த அமர்வில், இந்த உச்சி மாநாட்டின் போது முடிவு செய்யப்பட்ட திட்டங்களை நாம் மதிப்பாய்வு செய்யலாம். இதற்கான விவரங்கள் அனைத்தையும் உங்கள் அனைவருடனும் எங்கள் குழு பகிர்ந்து கொள்ளும். நீங்கள் அனைவரும் அதில் பங்கு பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.

    இதன் மூலம், இந்த ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவை அறிவிக்கிறேன். "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் கோட்பாட்டின் வழித்தடம் பயனுள்ளதாக அமைய வேண்டும்.

    "ஸ்வஸ்தி அஸ்து விஸ்வஸ்ய!" - அதாவது, "உலகம் முழுவதிலும் அமைதியும் நம்பிக்கையும் தழைத்தோங்கட்டும்."

    140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    இவ்வாறு பிரதமர் மோடி தனது நிறைவுரையில் கூறினார்.

    • மழை காரணமாக அப்பகுதியில் புல்வெளி, தரை ஆகியவை ஈரமாக இருந்தன.
    • ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா அதிபர்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்தனர்.

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது.

    இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய தலைநகர் புது டெல்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் எனும் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஜி20 அமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது.

    இதில் இங்கிலாந்து பிரதமரும், அமெரிக்க அதிபரும் பங்கேற்ற போதும் உறுப்பினர் நாடுகளில் சீனா, ரஷியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியில் பல வருடங்கள் போராட்டம் நடத்தி 1947ல் இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த முன்னணி சுதந்திர போராட்ட தலைவர் மகாத்மா காந்தி. போர், ரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை ஆகியவற்றை வெறுத்து அகிம்சை வழியிலேயே தனது போராட்டங்களை முன்னெடுத்தவர் காந்தி.

    காந்தி நினைவிடம் மத்திய புது டெல்லி ராஜ் காட் பகுதியில் உள்ளது. ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை இங்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அங்கு தலைவர்கள் வருகை தந்தனர்.

    அவர்களை மோடி வரவேற்றார். ராஜ் காட் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்திருந்தாலும் உலக தலைவர்களை மோடி வரவேற்கும் போது மழைபொழிவு நின்றிருந்தது.

    உலக தலைவர்கள் அங்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கு சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்திய பின் அவர்கள் புறப்பட்ட போது பாரம்பரிய இந்திய இசை முழங்கியது.

    இந்த நிகழ்வின் போது ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் மற்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் காலணிகள் ஏதும் அணியாமல் வெறும் கால்களுடன் அங்கிருந்த ஈர தரையில் நடந்து சென்றனர்.

    ரஷிய உக்ரைன் போர் குறித்த வார்த்தைகளை தவிர்த்து அனைத்து உலக தலைவர்களும் ஒப்புதல் அளிக்கும் விதமாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டதும், பருவகால மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தியதும் மற்றும் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்க நடவடிக்கை எடுத்ததும் இந்திய ஜி20 தலைமையின் முக்கிய வெற்றியாக இருந்தாலும், உலக தலைவர்களை ஒருங்கிணைத்து அமைதி வழியில் சிக்கல்களுக்கு தீர்வு காண வலியுறுத்திய காந்தி நினைவிடத்திற்கு அவர்களை அழைத்த மோடியின் ராஜதந்திரம் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.

    ×