search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி20 உச்சி மாநாடு"

    • உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.
    • பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை (செப்டம்பர் 9, 10) மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.

    புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

    இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஜி20 மாநாட்டில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

    • உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

    சென்னை:

    டெல்லியில் ஜி-20 மாநாடு 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த பிரதமர் மோடி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு( 9-ந்தேதி ) விருந்து அளிக்கிறார்.

    ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

    • டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 மாநாட்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன.

    அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக ஜி-20 நாடுகள் அமைப்பு திகழ்கிறது. அந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

    ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. ஒவ்வொரு மாநாட்டின் போதும் ஏதாவது ஒரு முழக்கம் வெளியிடப்படுவது வழக்கம்.

    அதன்படி "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்பது டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டின் முழக்கமாக உள்ளது. டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டுக்காக மத்திய அரசு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லி மாநகரம் சொர்க்க லோகம் போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்கள் நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக நடைபெற்றன. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் ஜி-20 நாடுகள் இடையே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த முடிவுகள் கருதப்படுகின்றன.

    அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவதற்காக டெல்லி ஜி-20 மாநாட்டின் தலைவர்கள் பங்கேற்பு கூட்டம் நாளை (சனிக்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. சனி, ஞாயிறு 2 நாட்கள் ஜி-20 உச்சி மாநாடு விவாதங்கள் நடைபெறும்.

    டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 மாநாட்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் ஜி-20 நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுவார்கள்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் டெல்லி வர தொடங்கி விட்டனர். பெரும்பாலானவர்கள் நேற்று வந்து சேர்ந்து விட்டனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மேக்ரான், வங்காளதேச பிரதமர் ஹசீனா, சவுதி இளவரசர் மற்றும் தலைவர்கள் டெல்லி வருகிறார்கள்.

    டெல்லி வரும் வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க மத்திய மந்திரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கிறார்கள். அதன் பிறகு வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை. அவர் வீடியோ மூலம் பேசுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வீடியோ மூலமாகவும் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று இன்று காலை தகவல்கள் வெளியானது.

    அதுபோல சீன அதிபர் ஜின்பிங் ஜி-20 மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளார். அவருக்கு பதில் சீன பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருகிறார். ஜி-20 அமைப்பில் இடம்பெற்று உள்ள நாட்டுகளின் தலைவர்களை தவிர சிறப்பு அழைப்பாளர்களாக சில நாட்டு தலைவர்களை அழைக்கும் அதிகாரம் மாநாட்டை நடத்தும் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஸ்பெயின் உள்பட 9 நாட்டு தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இது தவிர ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு உள்பட உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    அதை ஏற்று நூற்றுக்கணக்கான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லியில் வந்து குவிந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான் செஸ்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது டெல்லி வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

    உலக தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிவதால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி முழுவதும் முக்கிய இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் செல்லும் வாகன போக்குவரத்து முழுமையாக தணிக்கை செய்யப்படுகிறது. டெல்லியில் மருந்து சேவை போன்ற அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் எளிதாக வந்து செல்வதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    2 நாட்கள் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக பருவ நிலை மாற்ற பிரச்சனையை சமாளிக்க எரிசக்தி துறையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது ஜி-20 மாநாட்டில் முக்கிய விவாத பொருளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எதிர்காலத்தில் எரிசக்தி மாற்றம் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவேதான் ஜி-20 மாநாட்டில் இதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட உள்ளது.

    மாநாட்டுக்கு ஒரே உலகம் முழக்கம் வைக்கப்பட்டு இருப்பதால் பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முன்னணி நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முக்கிய முடிவுகள் நாளை, நாளை மறுநாள் கூட்டங்களில் எடுக்கப்பட உள்ளது. குறைந்த நிதி ஆதாரத்தில் நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து பருவநிலை சவாலை எதிர்கொள்வது என்பது பற்றியும் தீர்மானிக்கப்பட உள்ளது.

    மேலும் கொரோனா தாக்கம் உலகை குலுக்கிய பிறகு இந்தியா தலைமையில் நடக்கும் முக்கிய சர்வதேச மாநாடாக இது அமைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் கொரோனா போன்று ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் அவற்றை ஒன்றுபட்டு எதிர்க்க ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தை உருவாக்கவும் ஜி-20 மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

    சுகாதார அவசர கால தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதுபோன்று மேலும் பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளன.

    • உலகின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு வருகின்றனர்
    • பிரகதி மைதானத்தை சுற்றிலும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது

    சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20.

    இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

    பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.

    புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், அவசரகால வாகனங்கள், மற்றும் விமான நிலையம், பழைய டெல்லி ரெயில்வே நிலையம் மற்றும் புது டெல்லி ரெயில்வே நிலையம் செல்லும் வாகனங்கள் ஆகியவை மட்டுமே அடையாளங்கள் உறுதியான பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

    இன்று (செப்டம்பர் 7) கோகுலாஷ்டமி விடுமுறையுடன், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ம் தேதி வரை என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புது டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படுவதை பெருமையாக கொள்வதால், இத்தனை கட்டுப்பாடுகளையும் டெல்லி மாநகர மக்கள் வரவேற்கிறார்கள்.

    • டெல்லியில் ஜி20 மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
    • ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

    ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என்று தெரிகிறது. 

    • ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • ஜி20 உச்சி மாநாடு காரணமாக டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

     

    இந்த நிலையில், டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்பட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிலைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.ஏ.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி இந்த பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான தடை உத்தரவு இன்று (ஆகஸ்ட் 29) துவங்கி, செப்டம்பர் 12-ம் தேதி ஆகிய 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
    • நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும், வருவதுமாக இருப்பார்கள் என்பதால், 3 நாட்களும் டெல்லி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 8-ந்தேதி நள்ளிரவு முதல் 10-ந் தேதி நள்ளிரவு வரை மாநகரின் பல பகுதிகளில் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து லுடி யன்ஸ் டெல்லிக்கு வருவோரின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

    மாநிலங்களுக்கு இடையேயான பஸ்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். ஆனால், பஸ் நிலையங்களில் அவற்றை நிறுத்த அனுமதிக்கப்படாது என போலீசார் தெரிவித்து உள்ளனர். டெல்லி மெட்ரோ சேவைகள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும், புதுடெல்லி பகுதியில் உள்ள சுப்ரீம் கோர்ட், கான் மார்க்கெட், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் போன்ற நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்பட உள்ளன.

    மேலும், முக்கிய மார்க்கெட் பகுதிகளான கன்னாட் பிளேஸ், கான் மார்க்கெட், மல்சா மார்க், ஷங்கர் மார்க்கெட், ஜன்பத், மோகன் சிங் பிளேஸ் மற்றும் பாலிகா பஜார் ஆகிய பகுதிகள் 3 நாட்களுக்கு மூடப்படும். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 விமானங்கள் புறப்படுகின்றன. அதுபோல 80 விமானங்கள் வருகின்றன. இந்த 160 விமானங்களையும் 3 நாட்களுக்கு ரத்து செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

    ஜி-20 மாநாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு தலைவர்களின் விமானங்களை இங்கு நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் 50 விமானங்கள் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் 20 விமானங்களை விமானப்படையின் பாலம் நிலையத்திலும், 20 விமானங்களை டெர்மினல்-1 லும், மற்ற விமானங்களை சரக்கு முனையம் மற்றும் டி-3 பகுதியில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம் என்பதால், அதற்காக முன்கூட்டியே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜி-20 உச்சி மாநாட்டை வெற்றியடைய செய்வதில் டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. விருந்தினர்கள் அனைவரும் டெல்லிக்கு வருகின்றனர். நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளில் போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்பட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதற்காக டெல்லி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தேசியக் கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது' என தெரிவித்தார்.

    • பல நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன
    • உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே புதின் கவனம் செலுத்துகிறார் என ரஷியா கூறியுள்ளது

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரை அறிவித்து, அந்நாட்டை ஆக்ரமிக்கும் முயற்சியை துவங்கியது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. 18 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் காரணமாக, இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    ரஷியாவின் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் புது டெல்லியில் நடக்க இருக்கிறது.

    அங்குள்ள பிரகதி மைதானில் உள்ள சர்வதேச கண்காட்சி-மாநாட்டு மையத்தின் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடக்க இருப்பதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஷியாவும் ஜி20 அமைப்பில் உறுப்பினர் என்பதால் புதின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு நேரில் வர போவதில்லை. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே அவரது முழு கவனமும் உள்ளது," என அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார்.

    தனது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே அவர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    ரஷியாவின் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • இதனால் டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறைவிட கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.

    இதேபோல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

    இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல் மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த நாட்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.

    • டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.

    ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்துவதற்காக டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) எந்த வீடும் இடிக்கப்படவில்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக தலைநகரில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

    ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை எம்பி மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

    அதில், "ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் எந்த வீடும் இடிக்கப்படவில்லை.

    எவ்வாறாயினும், அரசு அல்லது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.

    டெல்லி 2021க்கான மாஸ்டர் பிளான் மற்றும் டெல்லிக்கான ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் விதிகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, டிடிஏ துணைத் தலைவரின் தலைமையில் ஒரு சிறப்பு பணிக்குழு ஏப்ரல் 25, 2018 அன்று அமைக்கப்பட்டது.

    சிறப்பு பணிக்குழுவினர் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் கட்டிட விதிகளை மீறுதல் பற்றிய புகார்களை கண்டறிகிறது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில், ஜி-20 உச்சி மாநாட்டிற்காக நடந்து வரும் சாலைகள், பூங்காக்கள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை முடிக்க ஏஜென்சிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லி அரசு காலக்கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    மாஸ்கோ:

    இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, அதை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜி20 வடிவத்தில் ரஷியா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.

    ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

    இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதிகளை இன்று மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு படை, கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    ×