search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவாக்சின்"

    • கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது.
    • பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.

    உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.

    அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடலில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

    அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக என தகவல் வெளியானது.

    கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.


    இந்நிலையில், கோவாக்ஸ் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும், ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும், திரும்பப் பெறப்படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
    • பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை.

    கோவிஷீல்டு தடுப்பூசியால் மிகவும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படுகிறது என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜென்கா நிறுவனம் கூறிய நிலையில், கோவாக்சின் (COVAXIN) மிகவும் பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "பாதுகாப்பு எனும் ஒற்றை இலக்கை குறிக்கோளாக கொண்டு தான் கோவாக்சின் உருவாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்திறன் சோதனை செய்யப்பட்ட ஒரே கோவிட் 19 தடுப்பூசி கோவாக்சின் மட்டும் தான்."

    "உரிமம் பெறும் வழிமுறையின் கீழ் கோவாக்சின் தடுப்பூசி 27 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முறையில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது."

    "கோவாக்சின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. கோவாக்சின் ஆயுள் காலம் தொடர்பாக தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன."

    "மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆய்வு முடிவுகள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் அடிப்படையில் கோவாக்சின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது."

    "அனுபவம் மிக்க ஆய்வாளர்கள் அடங்கிய பாரத் பயோடெக் குழுவினர் கோவிட் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைவு என்பதை நன்கு அறிந்துள்ளனர். எனினும், இவை பயனாளிகள் உடலில் அவர்களது ஆயுள் முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக எங்களது அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பு எனும் ஒற்றை நோக்கத்தை குறிக்கோளாக கொண்டே உருவாக்கப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளது.

    • கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின்.
    • கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, மேற்படி தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியானது. அரசியல் அழுத்தம் காரணமாக தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன.

    மேலும், தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது இந்திய மருத்துவம் மற்றும் விஞ்ஞான துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதில் எவ்வித அரசியல் நெருக்கடியும் இல்லை. அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகள் ஆராயப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது. மக்களை குழப்பும் வகையில் பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளது.

    ×