search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணில்கள் பறிமுதல்"

    • எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அவரது உடைமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா்.

    அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காணப்படும் 8 பறக்கும் அணில் என்ற சுகர் கில்டர் குட்டிகள், தென் அமெரிக்கா, பிரேசில் நாடு வனப்பகுதியில் இருக்கும் மர்மோசெட் என்ற வகை 3 சிறிய குரங்கு குட்டிகள், தென் அமெரிக்கா வனப்பகுதியில் வசிக்கும் தேகு லிசார்ட் என்ற 3 ராட்சத பல்லி குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை விலங்கு குட்டிகள் என்பதாலும், அவற்றை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பதாலும் தாய்லாந்தில் இருந்து எடுத்து வந்திருப்பதாக கூறினார்.

    ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்கா, அமேசான் வனப்பகுதியில் வசிக்க கூடியது என தெரிவித்தனர்.

    இதையடுத்து வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×