என் மலர்
நீங்கள் தேடியது "சபரிமலை ஐயப்பன் கோவில்"
- மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
- வருகிற 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு பிரம்மதத்தன், கண்டரரு ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடை திறந்து ஐப்பசி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக இன்று காலை சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் மூலம் நடைபெறுகிறது.
சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் 31-ந் தேதி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
- மகரவிளக்கு பூஜை முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்.
- மகர விளக்கு பூஜையில் நெரிசலால் பகதர்கள் அவதிப்படாமல் இருக்க நடவடிக்கை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி நடைபெற உளளது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் (நவம்பர்) 15-ந்தேதி திறக்கப் படுகிறது.
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மேற்கொண்டு வருகிறது.
மேலும் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் கூடட நெரிசலால் பகதர்கள் அவதிப்பட்டதை போன்று, நடக்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
அது தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தேவசம்போர்டின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது விரிவான மாற்றங்களுடன் மண்டல பூஜை காலத்திற்கு முன் அமைக்கப்படும்.
பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் "வைபை" வசதி செய்வது பரிசீலனையில் உள்ளது. சன்னிதானம், பதினெட்டாம்படி, கோவில் முற்றம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர பூஜையின் போது ஸ்பாட் புக்கிங்கிற்காக 3 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் சபரிமலைக்கு சிரமமின்றி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதற்கு தேவையான வசதிகள் தேவசம் போர்டு சார்பில் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.
அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' அடிப்படையில் 70 ஆயிரம் பேர், 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' செய்வதற்கு வசதியாக பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது.
கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர பூஜையின் போது ஸ்பாட் புக்கிங்கிற்காக 3 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
'ஸ்பாட் புக்கிங்' செய்யும் பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் 'கியூ-ஆர் கோர்டு' மற்றும் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக அமைப்பை தயார் செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
மேலும் சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள், இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.
மேலும் கற்பூரம், சாம்பிராணி போன்றவை பூஜை பொருட்களாக இருந்தாலும், தீ ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- சபரிமலைக்கு ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
- பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்ப சில மாற்றங்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன்கோவிலில் மண்டல பூஜை கடந்த 16-ந்தேதி தொடங்கி யது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், 6 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகம் என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், தினமும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை செய்ய தேவசம்போர்டு தயாராகி வருகிறது. தற்போது பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதான பகுதியில் உள்ள மேம்பால பகுதியில் நடந்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் பக்தர்கள் இந்த மேம்பால பகுதியில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
இதனை மாற்றுவது குறித்து தேவசம்போர்டு பரிசீலனை செய்து வருகிறது. பதினெட்டாம் படி ஏறி வரும் பக்தர்களை, பாலத்தில் ஏறச்செய்யாமல் நேரடியாக சன்னதிக்கு முன்புறம் அனுப்புவதன் மூலம் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமியை தரிசிக்க முடியும். ஆகவே அந்த முறையை செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித் துள்ளார். அவ்வாறு பாலத்தில் ஏறிச் செல்லாமல் பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்பவதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதனை செய்த பிறகு இந்த முறை அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
- பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிக்க தடை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள ஐகோர்ட்டும் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர்.

மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- மழை காரணமாக பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.
இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.
தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இருமுடி கட்டி முடித்ததும் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம்.
- ‘சாமியே சரணம்’ என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும்.
* சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி.
* ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், ஐயப்பனின் திருமேனி அபிஷேகத்துக்குரிய நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்லும் பையைத்தான் 'இருமுடி' என்கிறோம்.

* இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம், வீடுகளில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.
* இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து, படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
* இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.

* இருமுடி கட்டிக்கொள்ளும் ஐயப்ப பக்தர், குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிரப்பத் தொடங்கும் போது, நமது பிரார்த்தனைகளோடு 'சாமியே சரணம்' என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும். வீட்டில் யாராவது நெய் நிரப்ப விரும்பினால் அவர்களும் தேங்காயில் நெய் நிரப்பலாம்.
* நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை - பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
* முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.
* வசதி வாய்ப்புகள் இல்லாத முன் காலத்தில், இருமுடியின் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.

* இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

* தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
* இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது.
- கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
- அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது.அன்றைய நாள் முதல் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.
முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் படிப்படியாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம் போர்டு செய்துள்ளது.
சீசன் தொடங்கிய 12 நாட்களில் சபரிமலைக்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 437 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 லட்சத்து 59 ஆயிரத்து 515 அதிகம். இது போல வருவாயும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடியாக வருவாய் உள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
- சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம்.
திருவனந்தபுரம்:
"பெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்திலும் பல மாவங்டங்களில் பலத்த மழை பெய்கிறது.
நேற்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில் இன்று வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமிட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. அதிலும் சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2-வது நாளாக மழை பெய்தது.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் மலை யேறிச் சென்றார்கள். மேலும் சன்னிதானத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்றே தண்ணீர் வரத்து அதிக ரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியில் வருவாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
கேரளாவில் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.மலைப்பாங்கான பகுதி களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- இரு சீசன்களிலும் மொத்தம் 53 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
- ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
கோவில் நடை திறக்கப் பட்டதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றார்கள். இதனால் மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரி மலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. பக்தர்கள் நெரிசல் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய் தார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை பந்தளம் அரண்டனை ராஜ பிரதிநிதி சாமி தரிசனத்துக்கு பிறகு இன்று நிறைவுக்கு வந்தது.
இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு கோவில் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் கணபதிஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அபிஷேகம் மற்றும் நைவேத்திய பூஜைகள் நடந்தன.
மகர விளக்கு வைப வத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் பந்தள அரண் மனையிடமிருந்து கொண்டு வந்த திருவாபரண குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் எடுத்துக் கொண்டு பதினெட்டாம்படி வழியாக இறங்கிச் சென்று பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.
அதே நேரத்தில் பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு மேல் சாந்தி அருண்குமார் நம்பூ திரி, ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்தார்.
பின்னர் ஐயப்பனின் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்தல், கையில் யோக தடி வைத்து யோக நிலையில் அமர்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
பின்பு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் சாவியை பந்தள அரச பிரதி நிதியிடம் மேல்சாந்தி ஒப்படைத்தார். அதனை கையில் வைத்துக்கொண்டு அரச பிரதிநிதி பதினெட்டாம் படி வழியாக இறங்கிச் சென்றார்.
பதினெட்டாம் படி இயங்கியதும் கோவில் சாவியை தேவசம் பிரதி நிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ நாத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாதாந்திர பூஜை செலவுக்கான பணமும் வழங்கப்பட்டது.
பின்னர் அரச பிரதிநிதி மற்றும் அவரது குழுவினர் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர். திருவாபரண ஊர்வலம் வருகிற 23-ந்தேதி பந்தளம் அரண்மனையை சென்றடைகிறது.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இந்த இரு சீசன்களிலும் மொத்தம் 53லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.