search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் துறைமுகம்"

    • வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 112 டிகிரி வரை ஒரு சில மாவட்டங்களில் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கோடை வெயிலை தாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

    இதனை தணிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கோடை மழை குளிர்வித்தது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மழை பெய்ததோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பருவம் தவறிய பலத்த மழையால் கடுமையான சேதங்களை சந்தித்தன.

    இதற்கிடையே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ரீமால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுவடையக்கூடும் என்றும், நள்ளிரவில் வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் புயல் கரைக்கு நெறுங்கும் நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாகவும், தகுந்த இடைவெளியுடனும் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    • தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.
    • சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று புயலாக மாறி உள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை 25-ந்தேதி அதிகாலை வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக ராமநாதபுரம் ராமேசுவரத்தில் புயல் எதிரொலியால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்லவில்லை. நாட்டு படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    ஹாமூன் புயல் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புயல் மேலும் வலு பெற்றதையடுத்து இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். தற்போது புயல் தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காற்றால் சாலைகள் முழுவதும் மணல் மூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.
    • பாம்பன் துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (3-ந் தேதி) வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் (1-ந் தேதி) முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் ராமேசுவரம் தீவுப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது.

    இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது படகுகள் அனைத்தும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மீனவர்கள் மட்டுமின்றி கடற்கரையோர கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • குமரிக்கடல், தென்தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    ராமேசுவரம்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

    இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், கடலூர், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தொலை தூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிப்பதாகும்.

    அதே போன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவ அமைப்புக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,

    இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துடனும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையும்,

    நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    ஆகையால் மீனவர்கள் இன்று முதல் 2-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×