search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப் 4 தேர்வு"

    • தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    டிஎன்பிஎஸ்சி மூலம நிரப்பப்படும் பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

    தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது.

    இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
    • குரூப் 4 தேர்வு 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன.

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

    இந்நிலையில், நடந்து முடிந்த குருப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இந்த புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.

    அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

    கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
    • ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

    இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

    இதற்காக விண்ணப்பம் செய்வோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாகப் படித்து கொள்ள வேண்டும். அவர்கள் தேர்வுக்கான அனைத்து தகுதிவாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.

    விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது.

    தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விண்ணப்பம் செய்யும் நபர் முதலில், அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அதன்பின் எந்த அனுமதியும் கிடையாது.

    அவர்கள், தமிழக வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    மொபைல் போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    பல்வேறு துறைகளில் மொத்தம் 6,244 காலி பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

    3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.

    பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.

    பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும்.

    அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. அதற்குரிய இணையதளத்தில் சென்று பிற விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

    • டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
    • அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24-ந்தேதி நடத்தப்பட்டது.

    டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரி பார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை.

    ஜனவரி மாத இறுதியில் தான், நியமனம் செய்யப்பட வேண்டிய நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில் முடிவுகள் அறிவிக்கப் படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது.

    குரூப்-4 தேர்வை 18.50 லட்சத்திற்கும் மேலானவர்கள் எழுதினார்கள். இவ்வளவு இளைஞர்களின் எதிர்காலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதற்கேற்ற பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது.

    அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஒரு போட்டித் தேர்வை எழுதிய மாணவர்கள், அதன் முடிவை அறிந்தால் தான் அடுத்தப் போட்டித் தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும். இத்தகைய சூழலில் ஒரு தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும்.

    நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித்தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.

    ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில் முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×