search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 மணி நேர வேலை மசோதா"

    • விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்- அமைச்சர் தென்னரசு
    • இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது- அமைச்சர் கணேசன்

    தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் (ஏப்ரல் 23-ந்தேதி) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.

    இருந்தாலும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின உறுதிமொழி ஏற்றார்.

    சென்னை:

    நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1-ந்தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல நிகழ்ச்சிகள் நடந்தன. அதோடு தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் கொடியேற்றி உழைப்பாளிகள் தினத்தை சிறப்பித்தனர். சென்னை சிந்தாதிரிப் பேட்டை மே தின பூங்காவில் அமைந்து உள்ள மே தின நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

    இதற்காக அவர் சிவப்பு நிற உடை அணிந்து வருகை தந்தார். அவரை தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் கருப்பு, சிவப்பு சீருடையுடன் பேரவை கொடி ஏந்தி வரவேற்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்களும் உடன் வந்திருந்தனர். அவர்களும் மே தின பூங்கா நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின உறுதிமொழி ஏற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்க லட்சியங்கள் என்பது பொது உடமை சிந்தனையால் நிறைந்தது. தி.மு.க. ஆட்சியிலே பாட்டாளி வர்க்க சிந்தனையே மேலோங்கி நிற்கும்.

    நங்கவரம் விவசாய கூலி தொழிலாளிக்காக போராடியவர்தான் நமது கலைஞர் என்பதை நாடு நன்கறியும். தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆகி இருப்பேன் என்று சொன்னவர் கலைஞர்.

    தலைவர் கலைஞர் எனக்கு வைத்த பெயர் ஸ்டாலின். 1969-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே தொழிலாளர் நலனுக்காக ஒரு நலத்துறையை உருவாக்கி தனி அமைச்சகத்தையே உருவாக்கினார்.

    ரத்தம் சிந்தி போராடி உயிர் தியாகம் செய்து பல்வேறு தியாகங்களை செய்திருக்கிற தொழிலாளர்களை நினைவுபடுத்தும் வகையில் 1969-ல் மே முதல் நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவித்து அதை சட்டமாக்கியவர் கலைஞர்.

    தொழிலாளர்கள் ஓய்வு பெறுகிறபோது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் பணி கொடை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதும் கழக அரசுதான். விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பதற்காக தொழில் விபத்து நிவாரண நிதி திட்டத்தை ஏற்படுத்தியதும் கழக அரசுதான்.

    கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தோடு, விவசாய தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், மகளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கோவில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மை பணியாளர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி தந்ததும் தி.மு.க. அரசுதான்.

    1990-ம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிற நேரத்தில் இந்த நேப்பியர் பூங்காவுக்கு மே தின பூங்கா என்று பெயர் சூட்டியவரும் நமது கலைஞர்தான்.

    காரிலே வருகிறபோது பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் என்னிடம் கூறும்போது, சட்டமன்றத்திலே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மறைந்த வரதராஜன் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். மே தினத்தையொட்டி ஒரு நினைவு சின்னம் சென்னையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்த உடனே சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்த போதே கலைஞர் அதை அறிவித்து செயல்படுத்தினார். அதை வரைபடமாக வரைந்து சட்டமன்றத்தில் காட்டி அதற்கேற்ப அமைந்தது தான் இந்த நினைவு சின்னம்.

    இதே வழியில் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு செயல்பட்டு வருகிறது.

    அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் வகுத்த கொள்கை திட்டம்தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசாக அமைந்திருக்கிறது.

    எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. அதுதான் அடித்தளம். தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் இருந்த நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் செய்துதரப்பட்டுள்ளன.

    இந்த 2 ஆண்டு காலத்திலே 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்க கூடிய அமைப்பு சாரா தொழிலாளர் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இவை அனைத்துக்கும் மேலாக கடை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் படித்தவர்கள் வரை பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.

    இப்படி வேலை வாய்ப்பு பெற்றவர்களில் மாற்று திறனாளிகள், திருநங்கைகளும் இருக்கிறார்கள். இப்படி வரிசைபடுத்தி நான் சொல்லும் போது சமீபத்தில் சர்ச்சைகக்கான ஒன்று. தொழிலாளர் நலத்துறை சட்டமுன் வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவானது. அதைநான் சொல்லியாக வேண்டும்.

    தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அது மட்டுமல்ல அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். அதிலும் குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. இது அனைத்து தொழிற் சாலைக்கும் உண்டான சட்ட திருத்தமல்ல மிக மிக சில குறிப்பிட்ட தொழிற் சாலைக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் கட்டுப்பாட்டோடு அரசின் பரிசீலனைக்கு பிறகு பல மணி நேரம் குறித்து விதி விலக்கு வழங்கப்படும் என்பதுதான் சட்டத்தின் திருத்தம்.

    தொழிலாளர்களை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் அதிலே இருந்தது. ஆனாலும் தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதிலே சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது. தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்ட திருத்தமாக இருந்தாலும் தி.மு.க. தொழிற்சங்கமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டுள்ளேன். தி.மு.க. எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்டது என்பது இதற்கு எடுத்துக்காட்டு.

    இத்தகைய விமர்சனம் வந்ததும் உடனடியாக அனைத்து தொழிற்சங்கத்தினரையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி, அதற்கு பிறகு தொழிற்சங்க கருத்துக்களை கேட்டு, உடனடியாக எந்தவித தயக்கமும் இன்றி துணிச்சலோடு, அதை திரும்ப பெற்றுள்ள அரசு தான் நம்முடைய அரசு.

    மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததும் அதை திரும்ப பெற ஓராண்டுக்கு மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக உழவர்கள் டெல்லியில் போராடினார்கள். வெயில், மழையில், பனியில் அவர்கள் போராடினார்கள். இதில் பல பேர் உயிர் இழந்தனர்.

    இந்த மாபெரும் போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தொழிலாளர் உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வவேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா, மு.சண்முகம், மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, எழிலன், மயிலை வேலு, பரந்தாமன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரெங்கநாதன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன் மோகன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், மாணவரணி மோகன், பாபா சுரேஷ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல.
    • தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோரின் உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்தது. 1945-ல் இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை டாக்டர் அம்பேத்கர் பெற்றுத் தந்தார்.

    தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளது.

    வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரக் கருதி இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற் சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது.

    ஏற்கனவே தனிமனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம்.

    லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல.

    எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×