என் மலர்
நீங்கள் தேடியது "துரைசாமி"
- அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.
- கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
9.ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத் தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.க.-வின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன்.
பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுக-வில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா.அணி- ஜெ.அணி இணைப்புக்கும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.
1. எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது.
2. பிரிந்து கிடக்கும் அதிமுக-வினரை ஒற்றுமைப்படுத்துவது.
3. பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது
அண்ணா திமுக-வின் குலதெய்வம் புரட்சித்தலைவர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்துகாட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.
அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள், தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு, இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும்.
தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
2. இந்திரா காந்தி தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணா திமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணா திமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்லி அடைந்தது.
3. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் சென்று என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார்.
4. அதன் பிறகு, காங்கிரஸ் உடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலிய சென்று ஆதரவு கொடுத்தார்.
7. திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றிபெற வைந்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.
8. 1981-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திரா காந்தி நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார்.
1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்ணா திமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.
இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்ஜிஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.
இவ்வாறு சைதை துரைசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- ம.தி.மு.க. பெருங்காய டப்பா போல காலியாக உள்ளது. ம.தி.மு.க.விற்கு எதிர்காலம் என்ற ஒன்று கிடையாது.
- தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பேன். கட்சியில் இணைய மாட்டேன்.
திருப்பூர்:
ம.தி.மு.க. எதை முன்னிறுத்தி தொடங்கியதோ அதன் நிலை மறந்து சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க ம.தி.மு.க.வை தாய்க்கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் துரை வைகோ சின்னப்பையன் என்றும், அவரது கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன். எனது கடிதம் குறித்து வைகோவிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பேன் எனவும் துரைசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி திருப்பூர் ம.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை உடைக்க யார் தூண்டுதலும் கிடையாது. மற்றவர்கள் சொல்லி எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சி எங்கு இருக்கிறது. அதனை உடைக்க. ம.தி.மு.க. பெருங்காய டப்பா போல காலியாக உள்ளது. ம.தி.மு.க.விற்கு எதிர்காலம் என்ற ஒன்று கிடையாது. கட்சியில் உள்ள இளைஞர்கள் நலன் கருதி இப்போதே தி.மு.க.வில் சேர்த்து விடுவது நல்லது.
யார் சொல்வதை பற்றியும் எனக்கு கவலை இல்லை. தொழிற்சங்க சொத்துக்கு சண்டை என கூறுகின்றனர்.தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முதல் தொழிற்சங்கத்தை துவங்கியது நான் தான். தொழிற்சங்கத்தை (பைலா) விதிமுறைகள் தான் கட்டுப்படுத்தும். அரசியல் கட்சிகள் இல்லை. சங்கத்தின் பொறுப்பாளர் பெயரில் சொத்துக்கள் இருக்குமே தவிர தனிநபர் பெயரில் இல்லை. ஒருவர் கையெழுத்து போட்டு எதையும் தூக்கி செல்ல முடியாது.விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர்.
கட்சி துவங்கிய நோக்கம் இன்று இல்லை.ம.தி.மு.க., பலவீனமடைந்து உள்ளது. கிளை கழகம் அமைக்க 100 பேர் உறுப்பினர்களாக தேவை. ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனர். பெரியார், அண்ணா கொள்கைகளை வலியுறுத்தி போராடுவேன். தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பேன். கட்சியில் இணைய மாட்டேன். எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் என்னை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என வைகோ சொல்கிறார்.
இவ்வாறு துரைசாமி கூறினார்.