search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலிகாட் ஏரி"

    • படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு சுவையான உணவு வழங்குகிறார்கள்.
    • ஏரியை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாராவிட்டால் ஏரி முற்றிலும் அழிந்து விடும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காட்டில் புலிகாட் ஏரி உள்ளது. இந்த ஏரி 15367 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அதில் 300 ஹெக்டேர் தமிழ்நாட்டிலும், மீதமுள்ள பகுதிகள் ஆந்திராவிலும் உள்ளது.

    இந்த ஏரியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். நகர்ப்புற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் இந்த ஏரியின் பரப்பளவு பாதியாக குறைந்து விட்டது.இதனால் இந்த ஏரியில் தற்போது மீன் பிடிப்பதும் குறைந்துவிட்டது. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அதிக அளவில் மீன்கள் சிக்குவதில்லை.

    எனவே இங்குள்ள மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும், குடும்பத்தை நடத்துவதற்காகவும் இந்த ஏரியை சுற்றுலா பகுதியாக மாற்றி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக படகு சவாரி அழைத்து செல்கிறார்கள். 2 மணி நேர படகு சவாரிக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு சுவையான உணவு வழங்குகிறார்கள். சுற்றுலா பயணிகள் இரவில் கடற்கரை பகுதியில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக தார்ப்பாய் மூலம் கூடாரம் அமைத்து கொடுக்கிறார்கள்.

    மேலும் இங்கு குளிர் காய நெருப்பு மூட்டியும் கொடுக்கிறார்கள். இதற்கு குறிப்பிட்ட கட்டணம் என்பதில்லை. பேரம் பேசி பணம் கொடுக்கலாம். சுற்றுலா பயணிகளும் இதை அற்புதமான அனுபவமாக உணருகிறார்கள்.

    மேலும் இந்த ஏரியின் அழகை படம்பிடிக்க விரும்பும் புகைப்பட கலைஞர்களும் இங்கு படகில் சென்று ஏரியின் அழகை படம் பிடிக்கிறார்கள்.

    இந்த ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார தமிழக அரசு சிறிதளவு நிதி ஒதுக்கி உள்ள நிலையில், ஆந்திர அரசு ரூ.128 கோடி செலவில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஏரியை தூர்வார திட்டமிட்டு உள்ளது. இங்கு தமிழகம் தரப்பில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ரூ.3.5 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏரியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மீன் பிடித்தபோது மீனவர்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதித்தார்கள். இப்போது ரூ.10 ஆயிரம் கிடைத்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள். இதனாலேயே மீனவர்கள் சுற்றுலா பயணிகள் மூலம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்த ஏரியை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாராவிட்டால் ஏரி முற்றிலும் அழிந்து விடும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ×