search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் பருமன்"

    • உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும்.
    • உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது.

    உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை..

    உணவு-உடல் செயல்பாடு

    உணவு பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு இவை இரண்டும் உடல் எடை குறைப்பு விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு உட்கொள்ளும் விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், உடல் இயக்க செயல்பாடுகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதும், கண்காணிப்பதும் உடல் எடை குறைவதற்கு உதவும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

    சர்க்கரை-கார்போஹைட்ரேட்

    இன்றைய உணவு வழக்கத்தில் சர்க்கரையும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. அவை உடல் பருமனுடன் தொடர்புடையவை. குறிப்பாக வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கலந்த சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். உடலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும், இன்சுலின் வெளியிட்டை தூண்டும். எனவே இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும்.

    நார்ச்சத்து

    நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான கார்போஹைட்ரேட் ஆகும். இது உடல் எடை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வயிறு நிறைவாக உட்கொண்ட திருப்தியை தரும். கலோரிகளை உட்கொள்ளும் அளவை குறைக்கும். முழு தானியங்களில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பருப்பு மற்றும் நட்ஸ் வகைகள் போன்ற நார்ச்சத்து நிரம்பப்பெற்ற பொருட்களை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை கொடுக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.

    உடற்பயிற்சி

    உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடலாம். அத்துடன் உடற்பயிற்சி வல்லுனர்களின் வழிகாட்டுதல்படி வலு தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இந்த இரண்டு வகை பயிற்சிகளும் கலோரிகளை எரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பானங்கள்

    சர்க்கரை கலந்த பானங்கள், மது, அதிக கலோரி கொண்ட காபி போன்ற பானங்கள் ஊட்டச்சத்து நன்மைகளை வழங்காமல் கலோரிகளை அதிகரிக்க செய்யலாம். கலோரி உட்கொள்ளலை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது கருப்பு காபியை தேர்வு செய்யலாம்.

    • நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
    • ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

    நூடுல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான உணவுத் தேர்வாக மாறியுள்ளது. ஏனெனில் அவை மலிவானவை, தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் வசதியானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நூடுல்ஸ் என்றாலே பிடிக்கும்.

    இருப்பினும், நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உள்ளன. நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.

    நூடுல்சில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதினால் உயர் ரத்த அழுத்தம், நீர் தக்கவைத்தல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவை போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதில்லை. மேலும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

    உடல் பருமன்

    நூடுல்சில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    புற்றுநோய்

    நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக வயிற்று புற்றுநோய். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    செரிமான பிரச்னைகள்

    நூடுல்சில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக சோடியம் காரணமாக வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரே நாளில் பல நூடுல்சை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்சை உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

    நூடுல்ஸ் ஒரு வசதியான மற்றும் மலிவான உணவு. விருப்பமாக இருந்தாலும், அவை பலவிதமான உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நூடுல்சை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம்.

    • சிலருக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படக்கூடும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
    • நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களில் உள்ள புரதங்களை அடையாளம் கண்டுள்ளது.

    இரவுப் பணிபார்க்கும் ஊழியர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிலருக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படக்கூடும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகம் மற்றும் பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், நைட் ஷிப்ட் பணியாளர்கள் ஏன் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதற்கான புதிய தகவல்களை வழங்குகிறது. 

    இதுகுறித்து ஹான்ஸ் வான் டோங்கன், பல்கலைக்கழகத்தின் எல்சன் எஸ். ஃபிலாய்ட் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் கூறியதாவது:-

    நமது "மூளையில் உள்ள முதன்மை உயிரியல் கடிகாரத்துடன்" தொடர்புடைய செயல்முறைகள் உள்ளன. அவை பகல் மற்றும் இரவு என்று தாளங்களை பின்பற்றுகின்றன.

    உள் தாளங்கள் சீர்குலைக்கப்படும் போது, அது நீடித்த மன அழுத்தம் நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    மேலும், ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், இந்த சீர்குலைந்த தாளங்கள் மூன்று நாட்கள் நீடித்தால் போதும், நீரிழிவு மற்றும் உடல் பருமனை தடுக்க ஆரம்பகட்ட தலையீடு சாத்தியமாகும்.

    இது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

    ரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி, ரத்த அடிப்படையிலான நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களில் உள்ள புரதங்களை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் சில முதன்மை உயிரியல் கடிகாரத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன மற்றும் இரவு மாற்றங்களுக்கு எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

    இருப்பினும், மற்ற பெரும்பாலான புரதங்கள் மாற்றத்தைக் காட்டின. குளுக்கோஸ் ஒழுங்குமுறையில் ஈடுபட்டுள்ள புரதங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், விஞ்ஞானிகள் இரவு-மாற்ற பங்கேற்பாளர்களில் குளுக்கோஸ் தாளங்களின் கிட்டத்தட்ட முழுமையான தலைகீழ் மாற்றத்தைக் கண்டறிந்தது.

    மேலும், இன்சுலின் உற்பத்தி மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் ஈடுபடும் செயல்முறைகள் இரவு-பணிமாற்றம் செய்யும் தொழிலாளர்களில் ஒத்திசைவு இல்லாமல் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். 

    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

    குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

    குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.

    குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    • உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம்.
    • உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம்.

    கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான் என்பதால் அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை. மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

    கற்றாழையை முறைப்படி பொடியாக்கிச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் இளமையாக வாழலாம் எனத் தேரன் வெண்பா கூறுகிறது. உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.

     சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே. பெண்களின் கர்ப்பப்பை மற்றும் தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதியான கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் கைகண்ட மருந்து இது. உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.

    இன்று உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் அத்தனை இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே! கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.

    சரி, சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். காரணம், பெரும்பாலான ஜூஸ் கடைகளில் கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.


    எப்படித் தயார் செய்வது?

    நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

    • 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
    • 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
    • அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.

    இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

    இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
    • சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.

    உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?

    இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

     ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?

    உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.

    உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?

    முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.

    பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.

    தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.

    • ட்ரை கிளிசரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
    • கார்போஹைட்ரேட் உணவுகள் ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது.

    ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.

     ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.

     ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?

    1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, 'நல்ல' கொழுப்பை அதிகரிக்கும்.

    2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.

    சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

    3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.

    சித்த மருத்துவம்:

    1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது.
    • கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட 'என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், 'லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
    • இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. கிராமங்களை விட அதிகளவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.

    இந்தியாவில் நகர் புறங்களில் வாழக்கூடியவர்கள் இனிப்புகள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    சராசரியாக, ஒரு சாதாரண நகர்ப்புற இந்தியர் குறைந்தபட்சம் 100 கிராம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறார், இது ஒரு நாளைக்கு 500 கிலோ கலோரிகளை வழங்குகிறது.

    இது தேவையானதை விட அதிகம் என்று ஐதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதிக ஆற்றல் கொண்ட உணவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாததன் விளைவாக, நகரங்களில் உள்ள மக்கள் அதிக எடை மற்றும் பருமனாக உள்ளனர்.

    "நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.


    இது சமீபத்திய தரவுகளில் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 50 கிலோகலோரி என்பது ஒரு மாதத்தில் எடை 1 கிலோ வரை அதிகரிக்க்கும்.

    "பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதி சுவையான தன்மை, அதிகமாக உட்கொள்வதை எளிதாக்குகிறது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், நீரழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற உணவு தொடர்பான தொற்று அல்லாத நோய்கள் அதிகரிக்கும்.

    உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இந்தியர்களிடையே இளம் வயதிலேயே வெளிப்படுகின்றன, இறப்பு விகிதம் உலக சராசரியை விட அதிகமாக உள்ளது.

    இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் இந்திய நகர்புற மக்களை நோய்வாய் படுதலில் இருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை நகரில் உள்ள பள்ளி மாணவர்களில் 5 பேரில் ஒருவர் உடல் பருமனாகவும், அதிக எடை கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தனியார் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவமனை ஆகியவை பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை குறித்து ஆய்வு நடத்தியது. 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 584 பேர் மாணவிகள் ஆவார்கள்.

    இந்த ஆய்வில் 40 சதவீத மாணவ-மாணவிகள் வயதுக்கு மிஞ்சிய கூடுதல் எடையுடன் உடல் பருமனாக இருப்பது தெரியவந்துள்ளது. 667 பேருக்கு (59.43 சதவீதம்) உடல் எடை இயல்பாக இருக்கிறது. 237 பேர் (21.08 சதவீதம்) அதிக எடையிலும், 220 பேர் (19.5 சதவீதம்) உடல் பருமனாகவும் உள்ளனர்.

    அதிக எடை அல்லது உடல் பருமன் பாதிப்பு இந்தியாவில் உள்ள பல பள்ளி ஆய்வுகளில் காணப்பட்டதைவிட இது அதிகமாக உள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


    துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, "உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகப்படியாக பயன்படுத்துவது, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது, வீடுகளில் இருந்து வாகனங்களிலேயே பள்ளிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்தது" என்றார்.

    ×