search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள் நிறம்"

    • இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
    • கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.

    எண்ணூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-

    எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.

    ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ்கள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.
    • அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் 8 கோட்டங்களில் பஸ்களை இயக்கி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது நீண்ட தூர பஸ்களை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பஸ்கள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன.

    மேலும், பெண்களுக்கான இலவச பஸ்களுக்கு அடையாளம் தெரியும் வகையில் முன்னும், பின்னும் பிங் நிறம் அடிக்கப்பட்டு இயங்கி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது பஸ்களின் நிறங்களும் மாற்றப்படுவது இயல்பாகவே நடைபெற்று வந்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ்கள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன. பின்னர் அவை நீலம் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தற்போது அரசு மாநகர பஸ்களின் நிறங்கள் மாற்றுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அந்தவகையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் பஸ்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் மெரூன் வண்ணத்தில் பட்டை மற்றும் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழக அரசு போக்குவரத்து துறையானது ஆயிரம் புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி உள்ளதுடன், மிகவும் பழமையான பஸ்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்களுக்கு மஞ்சள் நிற பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 8 கோட்டங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம் என அரசு போக்குவரத்துத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    ×