search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரயான்-3 வெற்றி"

    • அக்டோபரில் ஒரு பரிசோதனை விண்கலன் அனுப்பப்பட இருக்கிறது
    • மூன்றாம் கட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்படுகிறது

    இதுவரை எந்த நாடும் புரியாத சாதனையாக நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

    இதனை அடுத்து பல விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்த இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    மத்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

    அப்போது அவர், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நிதி பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். சந்திரயான்-3 திட்டத்திற்கு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் முயற்சிகளுக்கு கோவிட் தொற்று நெருக்கடிகளினால் தடை ஏற்பட்டது."

    "தற்போது சந்திரயான்-3 வெற்றி அடைந்ததை அடுத்து ககன்யான் உட்பட பல திட்டங்களில் இனி இஸ்ரோ தீவிரம் காட்டும். இதன்படி ககன்யான் திட்டத்திற்காக, அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதலில் ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு சோதனை விண்கலனை அனுப்பும்."

    "அடுத்த கட்டமாக "வியோமித்ரா" எனும் பெயரில் ஒரு பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பெண் மனித இயந்திரம் மனிதர்களின் நடவடிக்கைகளையும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்."

    "இந்த இரு முயற்சிகளும் வெற்றி அடைந்ததும், அதில் இருந்து கிடைக்கும் அனுபவங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அதன்படி மூன்றாவது முயற்சியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதும் முக்கியம்," இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திரயான் 3 முயற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் ஃபவத்
    • நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் வானில் வெற்றிகரமாக செலுத்தியது.

    நேற்று மாலை 06:04 மணியளவில் சந்திரயான்-3 திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்டது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.

    எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது. உலகில் பலரும் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் பலர் இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.

    கடந்த ஓரிரு வருடங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, பிற நாடுகளிடமும், பொருளாதார அமைப்புகளிடமும் உதவிகள் கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான்-3 நிலவை தொடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி இந்தியாவின் சாதனை முயற்சிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்தியாவை போன்று பாகிஸ்தானும் நிலவிற்கு செல்ல முயற்சிகள் எடுக்குமா என அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஒரு பாகிஸ்தான் குடிமகன், "நாங்கள் நிலவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வசிக்கிறோம். அதாவது நிலவில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சாரம் உட்பட எந்த வசதிகளும் கிடையாது. அதே போல்தான் பாகிஸ்தானிலும் இவை எதுவும் கிடையாது," என பதிலளித்தார்.

    இவரது நகைச்சுவையான பதில் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    ×