என் மலர்
நீங்கள் தேடியது "பாண்டவர்கள்"
- நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.
- கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.
சகோதரர் ஒற்றுமையை ஓங்க செய்யும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி
தனிமரம் தோப்பாகாது என்பார்கள்.
குடும்பங்கள் கூடி வாழ்வது தான் கோடி நன்மை தரும்.
நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.
வாழும் போது வாழ்த்துவதும், வீழும் போது தாங்கி பிடிப்பதும் சொந்த, பந்தங்கள்தான்.
ஆனால் குடும்பங்களுக்குள் தான் எத்தனை பிரச்சனை. உறவு குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவது இன்று, நேற்று நடப்பது அல்ல.
புராண காலத்தில் இருந்தே அது தொடர்கிறது.
அதிலும் சகோதர குடும்பங்களுக்குள் எழுந்த பகையால் பஞ்ச பாண்டவர்கள் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.
அந்த பாண்டவர்களே தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ, சகோதர ஒற்றுமை ஓங்கிட வேண்டி நின்ற ஒரு கோவில் தமிழகத்ததில் உள்ளது.
பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோவில் தான் அது.
சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...!
யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்?
துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒரு சமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார்.
அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார்.
பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார்.
சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன்.
புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள்.
அப்போது பீமனின் கதை யால் நீ அடிபடுவாய்.
அந்த சமயத்தில் உன் சாபம் விலகும் என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான்.
பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான்.
கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.
அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினை பாவம்தான்.
அது தொலைய தீனரட்சகனான புருஷோத்தமனை பூஜிக்க வேண்டும் என்றார்.
புருஷோத்தமனை பூஜிக்க தொடங்கினார்கள் பாண்டவர்கள்.
ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்கு சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள்.
அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான்.
பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி. உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன்.
தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி.
அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது, துவண்டது.
சட்டென்று முனிவராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான்.
பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான்.
கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார்.
தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார்.
வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது.
தமிழில் பெரும் புலிவனம் பெரும்புலியூர், அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது.
வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன். அவர்கள் துன்பம் தீர அருளினார்.
வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும்.
எங்க ளுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான கார ணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான்.
எனவே இங்கே வந்து உம்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என வேண்டினார்கள் பாண்டவர்கள்.
பாண்டவர்களுக்கு அருளிய அதே வாசுதேவன், மதன கோபாலசுவாமியாக இன்றும் இங்கு அருள் பாலிக்கிறார்.
தினமும் ஏராளமான மக்கள் தங்கள் சகோதர ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் கோபாலனை வணங்கி செல்கின்றனர்.
- மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
- ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்
மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.
எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.
மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.
ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.
- கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
- அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.
கிருஷ்ணர் பிறந்த கதை
நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.
அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.
கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,
"அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.
வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.
எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.
எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.
- பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
- நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.
கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை
குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.
தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.
கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,
"கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.
வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.
கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.
தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.
கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.
வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.
வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.
மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.
பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.
வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.
காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.
காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.
உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.
- ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
- இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
துர்க்கையாக மாறிய பெண் குழந்தை
எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.
ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.
குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.
இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.
நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.
அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.
தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.
பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.
கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.
பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.
கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.
- இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
- அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை
சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.
பகலில் விரதம் இருக்க வேண்டும்.
இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.
அதன் ஆற்றல் அளவிட முடியாதது.
எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.
- நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
- ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.
கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்
கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.
தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.
நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.
ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.
அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.
கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.
அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.
கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.
ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
- இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
- கோவிந்தா என்ற சொல்லுக்கு “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்” என்று பொருளாகும்.
சைவ வைணவத்தை இணைக்கும் கிருஷ்ணர் பாதம்
கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.
அப்போது வெண்ணை சிதறி அவர் கால்களில் விழுந்தது.
அதோடு கிருஷ்ணர் நடந்ததால், கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது.
அதை நினைவு படுத்தவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கிருஷ்ணரின் கால் சுவடு பதிக்கப்படுகிறது.
மேலும் இது நம் வீட்டுக்கு கிருஷ்ணர் வருவதை குறிக்கிறது.
இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்று இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.
இதில் 8 என்பது "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும், 5 என்பது "நமசிவாய" என்ற மந்திரத்தையும் பிரதிபலிக்கிறது.
இப்படி எல்லாருக்கும் அருளும் கிருஷ்ணரை வழிபடும்போது, "கோவிந்தா"என்று சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.
கோவிந்தா என்ற சொல்லுக்கு "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்" என்று பொருளாகும்.
யார் ஒருவர் கிருஷ்ணரை கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி வணங்குகிறார்களோ., அவர்களுக்கு பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
- இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
- குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.
கிருஷ்ண வழிபாட்டு பலன்கள்
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை மறக்காமல் கிருஷ்ணரை வழிபட செய்ய வேண்டும்.
அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கிருஷ்ணரை வழிபட, வழிபட மாணவர்களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனமும், ஆற்றலும் அதிகரிக்கும்.
பெரும்பாலான ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆராதனை செய்வார்கள்.
இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும்.
குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.
கிருஷ்ணரை வழிபடும் இளைஞர்கள் தர்மசீலர்களாக வாழ்வார்கள்.
பெண்கள் கிருஷ்ணரை மனம் உருக வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கை கூடும்.
விவசாயிகள் கண்ணனை கும்பிட்டால் வயல்களில் விளைச்சல் பெருகும்.
மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன்கள் தீரும்.
தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் புகழ் உண்டாகும்.
தன்னை நாடி வரும் அரசியல்வாதிகளின் நிர்வாக திறமையை கிருஷ்ணர் அதிகரிக்க செய்வார்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் கோவா போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
கிருஷ்ண நாமத்தை உச்சரித்தப்படி கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும்.
யார் ஒருவர் கிருஷ்ணரை ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்குகிறார்களோ, அவர் நாமத்தையே உச்சரித்தப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு புண்ணிய உலகை சென்று அடையும் பாக்கியம் கிடைக்கும்.
- இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
- ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?
கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் மிக பிரச்சித்தமாக நடைபெறும்.
ஒவ்வொரு ஊரின் மரபுக்கு ஏற்ப உறியடி திருவிழா பல வகைகளாக நடத்தப்படுகிறது.
இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
பானை என்பது பரம்பொருள்.
அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.
பரம்பொருளின் காலடியில் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?
எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது.
லௌகீக வாழ்க்கையில், ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து அல்லல்பட வேண்டியுள்ளது.
இந்த தடைகளையெல்லாம் மீறி, கடந்து, தட்டுத் தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியதுள்ளது.
அப்போது நமது சிந்தனை, செயல் எல்லாம் பரம்பொருளிடம் சென்று சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக, உறுதியான சிந்தனையாக இருக்க வேண்டும்.
இந்த ஒரு முக சிந்தனையே அகங்காரம் எனும் உறியடி பானையை உடைக்க வைக்கும்.
அகங்காரம்போய்விட்டால் இறையருளும், முக்தி எனும் பாக்கியமும் தேடி வரும்.
உறியடி திருவிழாவில் இப்படி மாபெரும் தத்துவம் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
கிருஷ்ணர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது.
அவற்றை உணர்ந்து, புரிந்து கிருஷ்ணரை வழிபட்டால் பரம்பொருளின் அருள் பார்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.
- மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
- ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.
கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.
ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.
பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.
மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.
சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.
இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.
ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.
கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறான்.
ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.
அடேபக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.
என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.
குடும்பம் என்ற சம்சாரக்கடலில் விழுந்து, தத்தளித்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.
இது தான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.
- பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர்.
- அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார்.
பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகு கொண்டது குமரி மண். இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்பது மண் சார்ந்தது மட்டுமல்ல, நமது பாரம்பரியம் சார்ந்தது என்பது அனைவரும் பெருமை கொள்ளும் விஷயம்.
அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட ஊராக சொத்தவிளை விளங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் அழகை காண விடுமுறை காலங்களில் உள்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்ல தவறுவதில்லை.
இந்த சிறிய ஊருக்கு மகாபாரதத்துடன் தொடர்பு உள்ளது என்பது ஒரு அரிய தகவல் தான். மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனிடம் நாட்டை இழந்தவர்கள் பஞ்ச பாண்டவர்கள். இதனால் 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கையும்) செய்ய வேண்டிய நிலை பாண்டவர்களுக்கு ஏற்பட்டது.
பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறவேண்டிய நிலையில் அந்தணர் ஒருவர், பஞ்ச பாண்டவர்களிடம் உதவி கேட்டு வந்தார். அவர் நடத்த இருந்த வேள்விக்கு தீ மூட்ட பயன்படும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக் கொண்டது. அந்த மானை கண்டுபிடித்து அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார். அந்த மானைபிடிக்க ஓடினர் பாண்டவர்கள். இதனால் தளர்ந்துபோன அவர்கள் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.
காடு, மேடு பாராமல் ஓடிய அவர்களுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. எனவே எங்கேயாவது தண்ணீர் இருக்கிறதா? என்று பார்த்து தண்ணீர் கொண்டுவரும்படி நகுலனிடம், தருமர் கூறினார். தண்ணீரை தேடிச்சென்ற நகுலன் வனத்தின் ஒரு பகுதியில் தூய்மையான தண்ணீருடன்கூடிய தடாகத்தை பார்த்தான். உடனே அந்த பொய்கையில் இறங்கி தண்ணீரை பருக நகுலன் முயன்றபோது ஒரு அசரீரி ஒலித்தது. இந்த தடாகம் எனக்கு சொந்தமானது, அதனால் முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீ நீர் பருகலாம் என்றது அந்த அசரீரி.
அதை கண்டுகொள்ளாத நகுலன், குளத்துக்குள் இருந்த தண்ணீரை பருகினான். உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான். 2-வதாக சகாதேவன், 3-வதாக அர்ஜூனன், 4-வதாக பீமன் ஆகியோரும் வந்து பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயலும் போதும் நகுலனுக்கு ஒலித்த அசரீரி ஒலித்தது. ஆனால் அவர்கள் யாரும் அசரீரியை பொருட்படுத்தவில்லை. அந்த குரலை மீறி தண்ணீர் பருகியதால் நகுலனுக்கு பிறகு வந்த 3 பேரும் மாண்டனர்.
தண்ணீர் கொண்டுவர சென்ற தம்பிகள் 4 பேரும் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீரைத் தேடி தருமனும் நடக்கலானார். தடாகம் அருகே வந்தவர். தனது நான்கு சகோதரர்களும் மாண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இங்கு போர் எதுவும் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே என எண்ணியவர், உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகத்தை தணித்துக் கொள்வோம் என பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றார்.
அப்போதும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால்தான் உன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேரும் மாண்டு போனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகள் நிலைதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது.
அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் பருகாமல் கரையேறிய தர்மர், "இந்த பொய்கை உனக்கு சொந்தம் என கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. நீ கேள்விகளைக் கேள் முடிந்த அளவு பதில் கூறுகிறேன் என்றார். உடனே அசரீரி எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற கேள்விக்கு, தர்மர் உடனே சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார். இதுபோன்று அசரீரியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, சளைக்காமல் தர்மர் பதில் சொன்னார்.
தர்மரின் பதில்களால் அசரீரி மகிழ்ந்து தண்ணீர் பருக அனுமதித்தது. இறுதியில் அந்த அசரீரி இறந்த நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன், யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக்கேட்டது. நகுலனை எனக்கு திருப்பிக் கொடுங்கள் என்று தருமர் வேண்டினார். இதனால் ஆச்சரியமடைந்த அசரீரி யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான அர்ஜுனன், பீமன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்கு தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.
அதற்கு தருமன், எனது தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என 2 மனைவிகள் உண்டு. நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மற்றொரு தாயான மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாயாருக்கு பக்திபூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்து விட்டாள். அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல என்றான் தருமன்.
இந்த பதிலைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த தர்மதேவன் (எமதர்மன்) அங்கு தோன்றினார். தர்மா நான் உனக்கு தெய்வீகத் தந்தையாவேன்.அந்தணரின் அரணிக்கட்டையை மான் உருவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனது 4 சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள் என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்
தர்மதேவன். அதைத்தொடர்ந்து 4 சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது. அந்தணருக்கு அந்த அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருட அஞ்ஞாதவாசத்துக்கு தயாரானார்கள்.
மகாபாரத காவியத்தில் நகுலன், சகாதேவன், அர்ஜூனன், பீமன் ஆகிய 4 பேரும் நீர் பருகி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோவிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள். இப்பகுதி மக்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.
எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்த பொய்கை வறண்டு போகாது. சொத்தவிளை கடற்கரையை ஒட்டி பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும், மகாவிஷ்ணு கோவிலும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நாளடைவில் அது மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. இதுதான் சொத்தவிளை ஊரின் வரலாறு.