என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ஜி20 மாநாடு"
- ரஷிய அதிபர் புதின் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
- அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது
உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு.
இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது. தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஆனால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பார் எனவும் ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, ரஷிய-உக்ரைன் போர் குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாகவும், இரு நாட்டு பொருளாதார உறவில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் காரணாமாகவும், சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அதிபர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது சந்தித்து கொள்வார்கள் என்றும் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல்களை தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் நம்பப்பட்டது.
ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிகாரபூர்வமாக சீனா அறிவித்திருக்கிறது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ரெகோபோத் கடற்கரையில் ஜோ பைடனுக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. தற்போது அங்கு சென்றிருக்கும் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை எனும் அறிவிப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனாலும், அவரை நான் விரைவில் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், எந்த நாட்டில், எப்போது சீன அதிபரை பைடன், சந்திப்பதாக இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.