search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர் தேர்தல் 2024"

    • இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது
    • உக்ரைனுக்கு ஆயுத உதவியை நாம் வழங்கினால் புதினை நிறுத்த முடியும் என்றார் பைடன்

    நாட்டின் பொருளாதார நிலை, அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும், ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" (State of the Union Address) எனப்படும் இந்த உரையை நிகழ்த்தினார்.

    தனது உரையில், முன்னாள் அமெரிக்க அதிபரும், தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, பெயர் குறிப்பிடாமல் கடுமையாக பைடன் விமர்சித்தார்.


    சுமார் 1 மணி நேரம் பைடன் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்ததாவது:

    எனக்கு முன்பு அதிபராக இருந்தவர் மக்களுக்கான அடிப்படை கடமைகளையே ஆற்றவில்லை.

    தற்போது அவர் ரஷிய அதிபர் புதினிடம், "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என கூறுகிறார்.

    ரஷிய அதிபரிடம் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறலாமா? இது ஆபத்தானது.

    புதின் உக்ரைனுடன் நிறுத்தி கொள்ள மாட்டார். நாம் உக்ரைனுக்கு தேவைப்படும் ஆயுத உதவி வழங்கினால் புதினை நிறுத்த முடியும்.

    நான் புதினுக்கு அஞ்ச மாட்டேன்.


    டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    தற்போது அமெரிக்காவில், அமெரிக்காவை கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் நிலைநிறுத்த நினைப்பவர்களுக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது.

    எனது வாழ்வு எனக்கு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம், ஆகியவற்றுடன் இணைத்து கொள்ள கற்று தந்துள்ளது. அந்த இரண்டிற்காகவே நான் போராடுவேன்.

    இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

    • போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் இருவருக்கும்தான் என்பது உறுதியாகி விட்டது
    • "பிறர் தன்னை கவனிக்க வேண்டும்" என டிரம்ப் ஏங்குகிறார் என பைடன் தரப்பு தெரிவித்தது

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி கொண்ட டிரம்பிற்கு போட்டி வேட்பாளராக களம் இறங்கிய அக்கட்சியை சேர்ந்த தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே, நேற்று, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதனையடுத்து அதிபர் பதவி போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவருக்கும் இடையே மட்டும்தான் என்பது உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    "நமது நாட்டு நலனுக்காகவும், அமெரிக்கா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் நானும் பைடனும் விவாதிக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை நான் விவாதிக்க அழைக்கிறேன். எந்த இடத்திலும், எந்நேரமும் விவாதிக்கலாம்" என டிரம்ப் தனது பிரத்யேக வலைதளமான "டிரூத் சோஷியல்" (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என ஏங்குகிறார் டிரம்ப். அதிபர் பிரசாரத்தில் ஒரு நிலையில் விவாதங்கள் நிச்சயம் நடைபெறும். ஆனால், பைடனை பார்த்தே ஆக வேண்டும் என டிரம்ப் விரும்பினால் அவர் அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை; எப்போதும் சந்திக்கலாம்" என பைடனின் பிரசார குழுவின் ஆணையர் மைக்கேல் டைலர் (Michael Tyler) தெரிவித்தார்.


    2020ல், அப்போதைய தேர்தல் காலகட்டத்தில் பைடன் மற்றும் டிரம்ப், இருவரும், 2 முறை விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்
    • புளோரிடாவில் டிரம்ப் மற்றும் மஸ்க் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வரும் டிரம்ப், பிரசாரங்களுக்கான நிதி கட்டமைப்பில் பைடனை விட பின் தங்கி உள்ளார்.

    தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் புளோரிடா மாநில மியாமியில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

    டிரம்ப்பை, மஸ்க் ஆதரிக்கும் பட்சத்தில் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்தார்.

    மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் என கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்க கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் $192 பில்லியன் நிகர மதிப்பு உள்ள எலான் மஸ்க், ஜோ பைடனின் குடியேற்ற மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பான கொள்கைகளை விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்
    • வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 2023ல் இருந்தே அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மும்முரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    2021 ஜனவரி 6 அன்று, அப்போதைய அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபடும்படி தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கொலராடோ மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், தேர்தல் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19 அன்று உத்தரவிட்டிருந்தது.

    இதனால் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருந்ததுடன், அவருக்கு இது பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள், கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

    அதிபர் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்த கூடாது என்றும் மத்திய அரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராகவும் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதில் தடை ஏதுமில்லை எனும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள கணக்கில், "அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி" என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    • அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
    • ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி

    கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.

    இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.

    இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.

    அப்போது நிக்கி தெரிவித்ததாவது:

    தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.

    தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.

    அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.

    "என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.

    இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

    • டிரம்பின் நடவடிக்கைகளை யூகிக்க முடியாது என்றார் புதின்
    • நேட்டோ குறித்த டிரம்பின் பார்வையில் நியாயம் உள்ளது என்றார் புதின்

    உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    அயல்நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு புதின் பதிலளித்ததாவது:

    இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷியா விரும்பும்.

    பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல; அவர் நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை. அவர் அந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல; டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.

    இருப்பினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷியா இணைந்து பணியாற்ற முடியும்.

    நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.

    பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் டாக்டர் அல்ல. அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது.

    2021ல் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • 52 வயதான நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
    • "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" என்றார் நிக்கி

    வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களத்தில் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    குடியரசு கட்சியின் சார்பில், டிரம்பை தவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா மாநில கவர்னரும், ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்கா தூதருமான 52 வயதான நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க வழிவகுத்த "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்றுங்கள்" (Make America Great Again) எனும் முழக்கத்தையே இவ்வருட தேர்தலுக்கும் முழக்கமாக கையில் எடுத்துள்ளார், டிரம்ப்.

    தற்போதைய நிலவரப்படி, வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள தலைவராக டிரம்ப் பார்க்கப்படுகிறார்.

    ஆனால், டிரம்புடன் போட்டியிட முன்வந்த பிற தலைவர்கள் பின்வாங்கி விட்ட நிலையிலும் நிக்கி ஹாலே தொடர்ந்து ஆதரவு தேடி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், பிரசாரத்தில் நிக்கி தெரிவித்ததாவது:

    "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" (Make America Normal Again).

    80-வயதுடைய இருவர் பணியாற்றியதை விட நாம் சிறப்பாக பணியாற்ற முடியும்.

    அவர்கள் இருவரின் பரஸ்பர தாக்குதல் மக்களை களைப்படைய செய்து விட்டது. இதில் குழப்பமும் சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.

    தங்களின் சின்னஞ்சிறு நோக்கங்களுக்காக சண்டையிடும் தலைவர்கள் மக்களுக்கு வேண்டாம். அமெரிக்க மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துபவர்களே அவர்களுக்கு அதிபர்களாக வேண்டும்.

    நீங்கள் பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் ஒரு அதிபராக நான் நிச்சயம் பணியாற்றுவேன்.

    இவ்வாறு நிக்கி கூறினார்.

    இதற்கிடையே, "நிக்கி ஹாலே அதிபரானால் அமெரிக்காவை முடிவில்லா போர்களுக்கு தள்ளி விடுவார். ஏனெனில், நிக்கி போர்களையே விரும்புகிறார். தன்னை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் எனக் கூற அவரிடம் இதுவரை சரியான வாதங்கள் ஏதுமில்லை" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

    77 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் 81 வயதான ஜோ பைடன், இருவருமே முதுமை நிலையை அடைந்து விட்டதால், வேறு ஒரு இளம் தலைவர் அதிபராக வேண்டும் என பல வாக்காளர்கள் கருதுவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் வரலாம்
    • டிரம்புடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றார் ரான் டி சான்டிஸ்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயாக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகளின் தீர்ப்புகளின் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.

    டொனால்ட் டிரம்பை தவிர தென் கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே (Nikki Haley) மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டி சான்டிஸ் (Ron DeSantis) ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க ஆதரவு சேகரித்து வருகின்றனர்.

    பிரதிநிதித்துவ தேர்தல் முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், வேட்பாளர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே முதலில் ஆதரவு இருப்பதை நிலைநாட்ட வேண்டும்.

    இதுவரை டொனால்ட் டிரம்பிற்கு சிறப்பான ஆதரவு இருந்து வருகிறது.

    ரான் டி சான்டிஸ் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.


    இதை தொடர்ந்து ரான் போட்டியிலிருந்து விலகினார்.

    இது குறித்து பேசிய ரான், "போட்டியிலிருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு கோரிய பிரசாரத்தையும் நிறுத்தி கொள்கிறேன். குடியரசு கட்சி வாக்காளர்கள் மீண்டும் டொனால்ட் டிரம்ப் அதிபராவதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனக்கும் டிரம்பிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய அதிபர் ஜோ பைடனை விட பன்மடங்கு திறமையும், தகுதியும் உள்ளவர். அவருக்கு என் ஆதரவை முழுமையாக அளிக்கிறேன்" என தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு கோரி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமஸ்வாமி, போட்டியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 


    தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்பிற்கு அக்கட்சியில் நிக்கி ஹாலே மட்டுமே போட்டியாளராக உள்ளார்.

    • நான்சி பெலோசி பெயருக்கு பதில் நிக்கி ஹாலே பெயரை டிரம்ப் பயன்படுத்தினார்
    • அதிபர் பதவி கடும் மன அழுத்தங்களை தர கூடியது என்றார் ஹாலே

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களம் இறங்கி வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப் மீது சில மாநிலங்களில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அவர் அதிபர் ஆவதில் சிக்கல்கள் எழலாம் என நம்பப்படுகிறது.

    எனவே, குடியரசு கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் தென் கரோலினா கவர்னருமான நிக்கி ஹாலேயும் போட்டியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

    இரு தினங்களுக்கு முன், டொனால்ட் டிரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பேரணியில் 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பேசினார்.

    அப்போது பேசிய டிரம்ப், நிக்கி ஹாலேயின் பெயரை குறிப்பிட்டு பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பை நிக்கி சரிவர கையாளவில்லை என குற்றம் சாட்டினார்.

    ஆனால், டிரம்ப் பேச முற்பட்டது அப்போதைய முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை குறித்து என்பது பின்னர் தெளிவாகியது. பெயர்களை மாற்றி டிரம்ப் உரையாற்றியது விமர்சனத்திற்கு உள்ளானது.

    நிக்கி ஹாலே தனது எக்ஸ் கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    ஒரு பேரணியில், 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது நான் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர கவனிக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டி பேசி உள்ளார்.

    அப்போது நான் வாஷிங்டன் பகுதியிலேயே இல்லை.

    டிரம்ப், நான்சி பெலோசியை குறிப்பிட நினைத்து என் பெயரை பயன்படுத்தி விட்டார் என பிறகு நான் அறிந்தேன்.

    ஆனால், அந்த உரையில் "நிக்கி ஹாலே" என தெளிவாக பல முறை என் பெயரைத்தான் அவர் பயன்படுத்தினார்.

    கடும் அழுத்தத்தை தர கூடிய அமெரிக்க அதிபர் பதவியில் அமர மிக அதிகமான மன உறுதி வேண்டும். அந்த மன நிலை இல்லாதவர்கள் அப்பதவிக்கு வர கூடாது.

    இவ்வாறு நிக்கி பதிவிட்டுள்ளார்.

    • "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" முழக்கத்தை டிரம்ப் முன்னெடுத்துள்ளார்
    • "விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு எதிரணிக்கு அளிக்கும் வாக்கு" என்றார் டிரம்ப்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக போட்டியிடுகிறார்.

    2016 தேர்தலில் "மாகா" எனப்படும் (Make America Great Again) "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" எனும் முழக்கத்தை முன்னெடுத்து பெரும் வெற்றி கண்ட டிரம்ப், 2026 தேர்தலிலும் அதையே தன் பிரசாரங்களில் முன் வைக்கிறார்.

    அமெரிக்காவின் பல மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், அவர் அதிபராவது கேள்விக்குறியாக உள்ளது.

    குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு வேட்பாளரான தொழிலதிபர் விவேக் ராமசாமி, தனக்கு தீவிரமாக ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகிறார்.

    தனது பிரசாரங்களில் விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பை புகழ்வதுடன் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை விமர்சித்து "டிரம்ப் குற்றமற்றவர்" என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில், இன்று டொனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" (Truth Social) கணக்கில் விவேக் ராமசாமியை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

    அதில், "விவேக் என் ஆதரவாளரை போல் பிரசாரத்தை தொடங்கினார். ஆனால், தற்போது பிரசார யுக்திகளில் ஆதரவை தந்திரமாக மறைத்து விடுகிறார். நீங்கள் விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு, எதிரணிக்கு அளிக்கும் வாக்காகும். அவர் பேச்சில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். "மாகா" கனவை நனவாக்க விவேக் ஏற்றவர் அல்ல" என பதிவிட்டுள்ளார்.

    டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் விவேக் ராமசாமி எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    நான் டிரம்பின் பதிவை கண்டேன். அவரது தேர்தல் பிரசார ஆலோசகர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அவருக்கு அளித்துள்ளனர். 21-வது நூற்றாண்டின் சிறந்த அதிபர் டிரம்ப்தான். என்னை அவர் விமர்சித்ததற்காக நான் அவரை தவறாக விமர்சிக்க போவதில்லை. ஆனால், தற்போது நாட்டில் உள்ள சூழல், அவரை அதிபராக அனுமதிக்காது என என்னை போல் பலர் நம் நாட்டில் நம்புகின்றனர். நாட்டிற்காகவும், டிரம்பிற்காகவும் நான் கவலைப்படுகிறேன். நான் அவர் ஆதரவாளன்.

    இவ்வாறு விவேக் பதிவிட்டுள்ளார்.

    • வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
    • டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்

    இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.

    தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.

    இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.

    சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.

    அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.

    தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.

    ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.

    டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
    • மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே

    அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

    2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.

    நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×