search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனிதநேய ஜனநாயக கட்சி"

    • மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன.
    • அரசு சார்ந்த நிர்வாக பொறுப்புகளில் பிற சமூகத்தவரும் உள்ளனர்.

    சென்னை:

    மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே ராணுவம் மற்றும் ரெயில்வே துறை நிர்வாகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சொத்துக்களை கொண்டதாக வக்பு வாரியம் திகழ்கிறது. இவையெல்லாம் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பவையாகும். இவற்றின் வழியாக வரும் வருமானங்கள் இவை சார்ந்த நலப்பணிகளுக்கு செலவிடப்படுகின்றன. இவற்றை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இவற்றில் படித்த- சமூக ஈடுபாடு கொண்ட பெண்கள் பரவலாக பணியாற்றுகின்றனர்.

    இதன் அரசு சார்ந்த நிர்வாக பொறுப்புகளில் பிற சமூகத்தவரும் உள்ளனர். இந்த நிலையில் வெளியாகும் தகவல்கள் இவற்றை சீர்குலைக்கும் உள்நோக்கிலேயே பாஜக அரசின் புதிய அணுகுமுறைகளாக உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் செய்வது எனில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவின் ஆலோசனைகளின் படியே எந்த சட்ட முன்வடிவையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இதை கவனத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு, அதிகார திமிருடன் அத்துமீறுமேயானால் நாடு தழுவிய ஜனநாயக போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். எனவே நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஒன்றிய அரசை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ரார் என்பவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளது ஒரு மதவெறி வன்முறை கும்பல்.

    இந்த வன்முறை செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமின்றி இஸ்லாமியர்கள் என்பதால் மட்டும் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. சமீபகாலமாக மத வெறுப்பு பேச்சு, கும்பல் படுகொலைகள் அரங்கேறி வருவது அன்றாடமாகிவிட்டது .

    இந்த அசாதாரண சூழல் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ராரை படுகொலை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மதவெறி வன்முறை கும்பலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×