என் மலர்
நீங்கள் தேடியது "மர்ம விலங்குகள்"
- பிரவு நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
- ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து சென்றுள்ளது.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அடுத்த வேலப்பன்கவுண்டன் வலசு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தோட்டத்தில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். இன்று காலை ஆடுகளுக்கு உணவு வைக்க வந்தபோது பட்டியில் உள்ள 8 ஆடுகள் மர்ம விலங்கு கடித்துக் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து சென்றுள்ளது. முருகன் நகர் பகுதி காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமானோர் தங்களது தோட்டத்தில் ஆடு, மாடு கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி அருகே உள்ள கருவில்பாறை வலசு பகுதியில் 19 கோழிகள், 4 ஆடுகளை அதே பகுதியில் சுற்றி தெரியும் 5 தெரு நாய்கள் கடித்து கொன்றது. அதேபோல் இந்த ஆடுகளையும் தெருநாய்கள் கடித்து கொன்று இருக்கலாம் என முதலில் சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் இறந்த ஆடுகளின் உடல் பாகங்கள் முழுவதும் கடித்து குதறப்பட்டு உள்ளதால் வேறு ஏதாவது மர்ம விலங்குகள் கடித்து கொன்று இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.