search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவகுணம்"

    • பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க பயன்படுகிறது.
    • மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    தமிழில் முள்ளுக்கீரை அல்லது முள்ளிக்கீரை என்று அழைக்கப்படும் 'அமராந்தஸ்' என்ற தாவரவியல் இனத்தை சேர்ந்த கீரை, முட்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும்.

    சிவப்பு நிற நிமிர்ந்த தண்டுகள், சில சமயங்களில் ஏறுவரிசை, 30-150 செ.மீ. நீளத்தில் கிளைத்திருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருந்து நீள்வட்டம், ஈட்டி-நீள் சதுரம், வடிவில் இருக்கும். மென்மையான இலை தண்டு 1 முதல் 9 செ.மீ. பூக்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

    இந்த மூலிகை கீரையின் மருத்துவ குணங்கள் ஏராளம். சிறுநீர் நன்றாக வெளியேற உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முறிந்த எலும்பு சேர துணையாக இருக்கிறது. மலமிளக்கியாக செயல்படுவதுடன் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுகிறது.

    வெப்பம் மற்றும் விஷத்தை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கை கட்டுப்படுத்துகிறது. சில நாடுகளில் பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க இந்த கீரையை பயன்படுத்துகின்றனர்.

    சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் தோல் அழற்சிக்கான வெளிப்பூச்சு மருந்தாகவும் தீக்காய தீவிரத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

    இது தவிர மூலம், குடல் அழற்சி, பித்தப்பை அழற்சி, சீரண மண்டல பாதிப்பை குறைக்க பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் பெருக்கத்தை தடுக்க உதவுவதுடன், மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இதை மெக்சிகோ போன்ற நாடுகளில் உணவுப் பயிராகவும், ஆஸ்திரேலியாவில் கீரைக்கு மாற்றாகவும், சீனாவில் காய்கறியாகவும் பயன்படுத்துகிறார்களாம்...!. ஆனால், தமிழ்நாட்டில் மழை பெய்தால் எங்கு பார்த்தாலும் முளைத்து கிடக்கும் இந்த முள்ளுக்கீரையை பற்றி தெரியாமல் பலரும் பயன்படுத்தாமல் தவற விட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.

    • பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
    • கண்டங்கத்தரி பழங்கள், தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை.

    கத்திரிக்காய் வகைகளில் ஒன்றுதான் இந்த கண்டங்கத்திரி. கண்டங்கத்திரியில் அல்கலாய்ட்ஸ், கிளைகோசைட்ஸ், சாப்போனின்ஸ், பிளாவினாய்ட்ஸ், சோலாசொடின், கவுமாரின் போன்றவை உள்ளன. இதில் நோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகின்றது. எனவே சித்தமருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

    கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.

    பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

    ஒடிசாவில் உள்ள தென்கனல் மாவட்டத்தை சேர்ந்த குந்த் பழங்குடியினத்தவர்கள் இந்த பழத்தின் டிகாஷனை, சர்க்கரை நோய்க்கு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்துகின்றனர். எனினும் இதன் ரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் குறித்து பெரிய மருத்துவ ஆராய்ச்சிகளோ அல்லது மருத்துவ ஆய்விதழ் வெளியீடுகளோ இதுவரை இல்லை.

    இதில் உள்ள அல்கலாய்ட்ஸ் தன்னுடல் தாக்குநோய் (ஆட்டோ இம்யூன் நோய்) மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். மேலும், அதிகமான அளவு உட்கொள்ளும்போது இதில் உள்ள சோலானின் ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற உணவு நஞ்சாதல் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    ஆகையால் உங்கள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கண்டங்கத்திரியை மட்டுமே சார்ந்திருக்காமல் அலோபதி மருத்துவ முறையை பின்பற்றலாம். உங்கள் தற்போதைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரியை (எச்.பி. ஏ1சி) பரிசோதித்து, ரத்த சர்க்கரை கட்டுக்குள் உள்ளதா என்பதை கண்டறிந்து, அருகில் உள்ள மருத்துவரை கலந்தாலோசித்து பயன்படுத்தலாம்.

    • கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும்.
    • வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும்.

    மர வகையை சேர்ந்தது இலந்தை மரம். கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை 9 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழம் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதன் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

    இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.

    இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும்.

    இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.

    உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

    பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

    பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தை பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

    ×