என் மலர்
நீங்கள் தேடியது "நீரிழிவு நோயாளிகள்"
- கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை குறைவாக உண்ணவேண்டும்.
- காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை குறைவாகவே உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் தினமும் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் 100 முதல் 150 கிராமுக்குள் பழங்கள் சாப்பிடுவது நல்லது. காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். பழங்களிலும் இருக்கும் கார்போஹைட்ரேட்டும் உடலில் சேரும் பட்சத்தில் அதன் அளவு அதிகரித்துவிடும்.
எப்போது பழங்கள் சாப்பிடலாம்?
உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ, அல்லது காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலோ பழங்களை சாப்பிடலாம். பழங்களை நன்றாக மென்றுதான் சாப்பிட வேண்டும். பழச்சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும். அவை விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால் பழமாக உட்கொள்ளும்போது நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.
வெறுமனே பழமாக சாப்பிடாமல் அதனுடன் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொண்டால் குளுக்கோஸாக மாற்றப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதல் விகிதம் குறையும். பழங்களுடன் பாதாம், புரதம் நிறைந்த உணவுப்பொருட்களையும் உட்கொள்ளலாம். வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து உட்கொள்வதும் நல்லது. பன்னீர், வேர்க்கடலை போன்றவைகளை எப்போதாவது உட்கொள்வது நல்லது. இப்படி சாப்பிடுவது குளுக்கோஸ் வேகமாக உறிஞ்சப்படுவதை தாமதமாக்கும். பழங்கள் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.
எந்த பழங்களை சாப்பிடலாம்?
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள்:
1. ஆப்பிள்
2. கொய்யா
3. ஆரஞ்சு
4. பப்பாளி
5. முலாம் பழம்
இந்த பழங்களில் இயற்கையாகவே கொழுப்பு, கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக இருக்கும். அத்துடன் அனைத்துவகையான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கும். அதிலும் போலேட், வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமானவை. அவற்றின் தேவையை இந்த பழங்கள் நிவர்த்தி செய்துவிடும்.
* ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் பொட்டாசியம் இந்த பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
* செல்கள் வளர்ச்சி அடைதல், பழுதடைந்தால் சீர் செய்தல், காயத்தை குணப்படுத்துதல், பற்கள் மற்றும் ஈறுகளை பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவையான வைட்டமின் சி, கொய்யா மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
* சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், முலாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் இருந்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் போலேட் நிறைந்திருக்கிறது.
* இந்த பழங்கள் குறைவான கலோரிகளுடன் வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருகின்றன. இவற்றுள் நார்ச்சத்தும் உள்ளடங்கி இருக்கிறது. உணவு செரிமானமாவதற்கு அது உதவுகிறது. குடல் இயக்கத்தை பராமரிக்கவும் துணைபுரிகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்து இதய நோயையும் தடுக்கிறது.
தவிர்க்க வேண்டிய பழங்கள்:
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஐந்து பழங்கள்:
1. மாம்பழம்
2. பலாப்பழம்
3. வாழைப்பழம்
4. சப்போட்டா
5. திராட்சை
இந்த பழங்களை சாப்பிட விரும்பினால் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள்:
* இந்த பழங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
* இந்த பழங்களில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வேண்டுமானால் உட்கொள்ளலாம். இந்த பழங்களின் சீசன் போது அதிகம் உட்கொண்டுவிட்டு நிறைய நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு அதிகரித்து அவதிப்படுகிறார்கள். ஒருவேளை இந்த பழங்களை உட்கொள்ள விரும்பினால் சாப்பிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குறைவாக உட்கொள்ளலாம். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கும். மதியம் மற்றும் இரவில் அரிசி உணவு, சப்பாத்தி போன்றவற்றை குறைவாக உட்கொள்வதும் நல்லது.
* நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே உண்ணும் பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பாதிக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். எந்த பழம் ரத்தத்தில் சர்க்கரை அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கவனித்து அதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது.
- வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்கும் ஆபத்து உள்ளது.
சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது. வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்குதல் ஆபத்து உள்ளது. வரும்முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாக்க இயலும். ஒரு வேளை நோய் தாக்குதல் இருந்தாலும் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களும், நம்பிக்கைகளும் மக்களிடம் உள்ளது. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் உதவும் மருத்துவ தகவல்களை காண்போம்.
டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய்
டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் நோயாகும். இதில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கிறது. இது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலையாகும். இது மரபணு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படலாம். டைப் 1 நீரிழிவு நோயில், இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நடைபெற முடியாமல் போகிறது. தாய்க்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கும்போது குழந்தைக்கு மூன்று சதவிகிதமும் தந்தைக்கு டைப்1 நீரிழிவு நோய் இருக்கும் போது குழந்தைக்கு ஐந்து சதவிகிதமும் இந்நோய் ஏற்பட அபாயம் உள்ளது.
டைப் 2 நீரிழிவு நோய்
அனைத்து வயதினரையும், குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். இந்நோயில், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், அப்படி சுரக்கப்படும் இன்சுலின் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) திறம்பட செயல்பட முடியாமல் போகிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகமாகிறது. உடல் பருமன், தவறான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இதை ஏற்படுத்துகிறது.
பரிசோதனைகள்
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயினை உறுதிப்படுத்த ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் உணவுக்கு முன் ரத்த சர்க்கரை அளவு, உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (ஜி.டி.டி), எச்.பி.ஏ1சி, இன்சுலின் அளவு, சீ-பெப்டைட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
டைப் 1 நீரிழிவு நோயை டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து வேறுபடுத்துவதற்கு சில குறிப்பிட்ட பரிசோதனைகள் இருக்கிறது. இதற்கு ஆன்ட்டிபாடி டெஸ்ட் என்று (பிற பொருள் எதிரி) பெயர். இந்த பரிசோதனையில் ஜி. ஏ.டி ஆன்டிபாடீஸ் (குளுடாமிக் ஆசிட்டிகார்பாக்சிலேஸ்), இன்சுலினோமா அசோசியேட்டடு 2ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் IA-2A, இன்சுலின் ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் (IAA), ஐலட் செல் சைடோபிலாஸ்மிக் ஆட்டோ ஆன்டிபாடிஸ் (ICA) போன்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனைகள் செய்து டைப் 1 நீரிழிவு நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஆரம்பகட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் முதலில் வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதனை (பாஸ்டிங் பிளட் சுகர்) செய்யப்படுகிறது. பின்னர் தண்ணீரில் 75 கிராம் குளுக்கோஸ் கலந்து குடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது.
வெறும் வயிற்றில் 100 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 140 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தம்.
வெறும் வயிற்றில் 101 மி.கி/டெசி லிட்டர் முதல் 125 மி.கி/டெசி லிட்டர் வரை ரத்தச் சர்க்கரை இருந்தால், அது இம்பேர்டு பாஸ்டிங் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். இதை ப்ரீடயாபட்டீஸ் என்றும் அழைப்பார்கள். சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை அளவு 141 மி.கி/டெசிலிட்டர் முதல் 199 மி.கி/டெசிலிட்டர் வரை இருந்தால் இம்பேர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று பெயர். இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும்.
வெறும் வயிற்றில் 126 மி.கி/டெசிலிட்டருக்கு மேல் இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு ௨௦௦ மி.கி/டெசிலிட்டருக்கு மேலிருந்தாலும் அவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம்.
நீரிழிவு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட்டை, 40 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.
அதிகமாக வியர்ப்பது ஏன்?
நீரிழிவு நோயாளிகளில் ஒரு சில பேருக்கு அதிகமான அளவு வியர்ப்பதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது...
ஹைபர்ஹைட்ரோசிஸ்:
இதில் காரணம் இல்லாமல் அதிகமாக வியர்க்கும் நிலையை பிரைமரி ஹைபர்ஹைட்ரோசிஸ் எனவும், ஏதேனும் காரணத்தோடு ஏற்படும் அதிகமான வியர்வையை செகண்டரி ஹைப்ரோ ஹைட்ராசிஸ் அல்லது டயாப்ரோசிஸ் என்றும் கூறுவார்கள்.
கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்:
இது காரமான உணவை உண்ணும்போதோ அல்லது நுகரும்போதோ முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அதிகமான வியர்வை ஏற்படும். இது பெரும்பாலும் அட்டானமிக் நரம்புகள் (தன்னிச்சை நரம்புகள்) பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்.
இரவு நேர வியர்த்தல்:
இது பெரும்பாலும் ரத்த சர்க்கரை தாழ்நிலையால் ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்று அதிகமான வியர்க்கும் நிலையான ஹைப்ரோஹைட்ராசிஸ்க்கு முக்கிய காரணம், டயாபட்டிக் அட்டானமிக் நரம்பியல் பாதிப்பு, உடல் பருமன் அல்லது மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.
மதுப்பழக்கம், புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்து மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து இன்சுலின் மற்றும் சர்க்கரை மாத்திரைகளின் டோசை மாற்றி அமைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படுதல் தொற்றுக்கும், உடலில் இருந்து துர்நாற்றம் வீசவும் வழி வகுக்கும்.
மாத்திரை உட்கொள்ள மறந்து விட்டால்?
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக மாத்திரைகளை ஞாபகமறதி காரணமாக சில நேரம் உட்கொள்ள மறந்து விடுகிறார்கள். சில சமயம் மறந்து போனதற்கும் சேர்த்து நிறைய மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். சிலர் மாத்திரைகள் வாங்க முடியாத சூழ்நிலையில் மாத்திரைகளை உட்கொள்ள தவறலாம்.
எப்போதாவது ஒருமுறை மாத்திரையை தவறுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி நீரிழிவு மாத்திரைகளை உட்கொள்ள தவறும்போது ரத்த சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் மாத்திரையை தவறவிட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் அதை உணரும் போது உடனே மாத்திரையை உட்கொள்ளுங்கள்.
ஆனால் மாத்திரை உட்கொள்ள தவறியதை மிகத்தாமதமாக அடுத்த டோஸ் மாத்திரையை போட வேண்டிய நேரத்தில் உணர நேர்ந்தால், நீங்கள் தவற விட்ட மாத்திரை டோசை தவிர்த்து வழக்கமாக போட வேண்டிய மாத்திரை டோசை உட்கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் தவறவிட்ட மாத்திரையையும் வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மாத்திரையையும் சேர்த்து இரண்டு மாத்திரைகளாக போடக்கூடாது.
- கோதுமை ரவை ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும்.
- குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.
100 கிராம் கோதுமை ரவையில் 152 கலோரிகள், 28 கிராம் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், 5 கிராம் புரதம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 41 ஆகும். இது ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.
கோதுமை ரவையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. கோதுமை ரவையில் வைட்டமின் பி1, பி2, பி6, புரதம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும், கொழுப்பு மற்றும் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகக்குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக கோதுமை ரவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- தேங்காயை துருவல் போட்டு பொரியலில் கலந்து சாப்பிடலாம்.
பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் அனைத்து வகையான உணவுகளிலும் தேங்காய் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தேங்காய் என்பது மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உள்ளடக்கிய "ட்ரூப்" வகையை சேர்ந்த ஒரு பழமாகும். தேங்காயில் பி1, சி, போலேட் போன்ற வைட்டமின்களும், மாங்கனிஸ், பொட்டாசியம், காப்பர், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இருக்கின்றன.
மேலும் இதில் லாரிக் அமிலம் போன்ற நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. தேங்காய் உட்கொண்ட பின்னர் இதில் உள்ள லாரிக் அமிலம், மோனோலாரினாக மாறுதல் அடைந்து உடலில் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறனை அதிகரிக்கிறது.

100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 33 கிராம் கொழுப்பு, 3 கிராம் புரதம், 9 கிராம் நார்ச் சத்து உள்ளது. மேலும் இது 51 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்சை கொண்டுள்ளது. இதில் அதிகமான அளவு கேலிக் ஆசிட் கேபிக் ஆசிட் போன்ற ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளது.
தேங்காயில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை நாம் எந்த வடிவில் எடுத்துக் கொள்கின்றோம் என்பதை பொறுத்தே நமக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
தேங்காயை துருவல் போட்டு பொரியலில் கலந்து சாப்பிடலாம். தேங்காய் சட்னியாக சாப்பிட்டால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் தேங்காய் பாலில் நார்ச்சத்து நீக்கப்படுவதால் இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமே மிச்சமாகிறது. மேலும் இதன் கிளைசெமிக் இன்டெக்சும் 97 ஆக உயர்ந்து விடுவதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை அதிகரித்து கெடுதலை ஏற்படுத்தும்.
- கால் நகங்கள் `ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் ஒரு சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளர்ந்து வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு வழிவகுக்கும். உள்நோக்கி வளரும் கால் நகங்கள் 'ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.

காரணங்கள்:
நகங்களை தவறாக வெட்டுதல் அல்லது மிக குறுகியதாக வெட்டுதல், நகங்கள் அசாதாரணமாக வளைந்து வளர்வது, முன்பகுதி இறுக்கமாக உள்ள காலணிகள் மற்றும் இறுக்கமான காலுறைகளை அணிதல், அடிபடுவது மற்றும் கனமான பொருள் கால் விரல் மீது விழும்போது ஏற்படும் காயம், தவறாக நிற்கும் அல்லது நடக்கும் தோரணை, மரபணு காரணங்களால் பிறப்பில் இருந்தே கால் நகங்கள் வளைந்து இருத்தல், அதிக வியர்வையின் வெளிப்பாட்டால் கால் விரல்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவது, மோசமான கால் பராமரிப்பு.

தீர்வு:
கால்களை தினமும் 4 அல்லது 5 முறை, 15 முதல் 20 நிமிடங்களுக்கு, வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது எம்சம் உப்பு கலந்த நீரிலோ ஊற வைக்க வேண்டும். இதனால் நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மற்ற நேரங்களில் கால்களை உலர்ந்த நிலையில் பராமரிக்க வேண்டும்.
நகங்களை வெட்டும் போது வளைவு வரை சென்று வெட்டாமல் நேராக வெட்ட வேண்டும். முன் பகுதி அகலமாக அல்லது விசாலமாக உள்ள காலணிகளையே பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளில் ரத்த நாளங்கள் பாதிப்புள்ளவர்களுக்கும், நரம்புகளை பாதிக்கும் டயாபட்டிக் நியூரோபதி பிரச்சனை உள்ளவர்களுக்கும் உள் நோக்கி வளரும் நகங்களால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தொற்றுக்கள் ஏற்பட்டால் அதை கட்டுக்குள் கொண்டு வர நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அழற்சியை தடுக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
இம்முயற்சிகள் அனைத்தும் பலன் தராவிட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம்.