என் மலர்
நீங்கள் தேடியது "மார்கழி மாத பிறப்பு"
- அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
- திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மார்கழி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாமி தாிசனம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில், அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்களில் மார்கழி மாத திருப்பாவை விழா நடந்தது.
ஆரணி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை வளர்பிறை பஞ்சமி விழாவையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்துப்பட்டு இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடுங்குளிரிலும் அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கினர். இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ஆவணியாபுரம் சிம்மமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தேசூர் ஆதிகேசவபெருமாள் கோவில், சேத்துப்பட்டு வரத சஞ்சீவிராய பெருமாள் கோவில், பெரிய கொழப்பலூர் காரக தூஷணபெருமாள் கோவில், திருக்குராயீஸ்வரர், திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போளூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போளூர் மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில், வெண்மணியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், குன்னத்தூரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.
- மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது.
மார்கசீர்ஷம் - வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். 'மார்கம்' என்பது 'வழி' என்று பொருள்படும். 'சீர்ஷம்' என்பது 'தலை சிறந்தது அல்லது உயர்ந்தது' என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம் இருக்கிறது என்பதையே 'மார்கசீர்ஷம்' என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது.
சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது. இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.

'மாதங்களில் நான் மார்கழி' என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது.
தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்தம் என்பதால், இந்த மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.
சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.
அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும்.
இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது.
சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும்.
மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.

மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.
இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது.
அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிக்க இறைவன் அருள் கிடைக்கும்.