search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசுரம்-8"

    • எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம்.
    • சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம்.

    திருப்பாவை

    பாடல்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

    வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம் கோதுகுலம் உடைய

    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

    மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டன. ஆயர்குல பெண்கள் பாவை நோன்பிற்காக நீராட புறப்பட்டு விட்டனர். உன்னையும் நீராட அழைத்துச் செல்ல வேண்டி, அவர்களைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது உன்னை எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம். குதிரை வடிவில் வந்த அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன், மல்யுத்தம் செய்ய வந்தவர்களை வென்றவன், தேவர்களுக்கு தலைவனான கிருஷ்ணனைப் பாடி வணங்கினால் நாம் விரும்பிய அனைத்தையும் கேட்டு அவன் நிறை வேற்றுவான். நாங்கள் சொல்வதை ஏற்று புறப்படு!

    திருவெம்பாவை

    பாடல்

    கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழிகள் கூவுகின்றன. மற்ற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. வீடுகளில் ஏழிசை கருவிகள் முழங்குகின்றன. எங்கும் வெண் சங்குகள் ஒலிக்கின்றன. ஒப்பற்ற பேரருளைக் கொண்ட சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம். இத்தனையும் உனக்கு கேட்கவில்லையா? இதற்குப் பிறகும் தெளியாத உன் உறக்கம் என்ன உறக்கமோ? வாய் திறந்து பேச மாட்டாயா? திருமால், தன் கண்ணை பறித்து சிவபெருமானுக்கு சாத்தி சக்கரத்தை பரிசாகப் பெற்றார். அதேபோன்று இறைவனிடம் அன்பு கொண்டு பெருவாழ்வு பெறுவோம். உலகம் எல்லாம் ஒடுங்கக்கூடிய பிரளய காலத்தில் இறுதியில் தான் ஒருவ னாக நின்று காத்தருளும் தலைவனாகிய சிவனைப் பாடுவோம்.

    ×