என் மலர்
நீங்கள் தேடியது "தங்க அங்கி அணிவிப்பு"
- ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
- நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.
இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.
மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர்.
- பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் முழங்கினர்.
சபரிமலை:
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.
இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த தங்க அங்கி கடந்த 23-ந்தேதி சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர். தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம்குத்தி வந்தடைந்தது.
அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தங்க அங்கி 18-ம் படி வழியாக கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னர் மாலை 6.40 மணியளவில் மண்டல பூஜையின் முன் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா' என பக்தி கோஷம் முழங்கினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் காலை 9.45 மணி வரை நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும்.
தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.
- இதுவரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர்.
- மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இநத ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் (23-ந்தேதி) வரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.46 லட்சம் அதிகமாகும்.
இந்தநிலையில் மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்ய மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முறைப்படி இன்று 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணி விக்கப்படும். தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22-ந்தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.
அந்த ஊர்வலம் இன்று பிற்பகலில் பம்பையை வந்தடைகிறது. அதனை கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்கிறார். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
மாலை 6.15 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஐயப்பன் தங்க அங்கியில் நாளை வரை பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பின்பு மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ஊர்வலம் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்க அங்கி ஊர்வலம் மாலை 5 மணிக்கு சரங்குத்தியை அடைந்ததும், பம்பையில் இருந்து மலையேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை நடைபெறும் தினத்திலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்பட உள்ளன.
ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.