search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரும ஆரோக்கியம்"

    • வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது அதிசயத்தக்க நன்மைகளை அளிக்கும். அதிலும் இவை மூன்றையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், சத்தான, ஆரோக்கியமான அமுதமாக கருதப்படுகிறது.

    ஏ.பி.சி. ஜூஸ் தயாரிப்பது எப்படி?

    ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், 2 கேரட் இவைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் ஜூசரில் போட்டு விழுதாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதனை அப்படியே பருக வேண்டியதுதான்.

    நன்மைகள்:

    நச்சு நீக்கம்

    ஏ.பி.சி. ஜூஸ் பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடலாம். குறிப்பாக பீட்ரூட், இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவும்.

    செரிமானம்

    ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்துக்கு உதவும். கேரட், குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏ.பி.சி ஜூஸை தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    இந்த ஜூசில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்யும்.

    சரும நலன்

    ஏ.பி.சி. ஜூஸில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் பளபளப்பை தக்கவைக்க உதவி புரியும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சரும திசுக்களை சரி செய்ய உதவும்.

    சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கும். அத்துடன் இந்த ஜூஸில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிற பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    உடல் ஆற்றல்

    பீட்ரூட் ரத்த ஓட்டத்தையும், தசைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தையும் துரிதப்படுத்த உதவி புரியும். உடல் செயல்திறனையும் மேம்படுத்தும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கை சர்க்கரைகளும் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

    இதய ஆரோக்கியம்

    ஏ.பி.சி. ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்களிக்கும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதேவேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

    எடை மேலாண்மை

    ஏ.பி.சி. ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக நிர்வகிப்பதற்கும் இது சரியான தேர்வாக அமையும். நொறுக்குத்தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆர்வத்தைக் குறைத்து, நீண்ட நேரம் பசி உணர்வு இன்றி வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் வழிவகை செய்யும்.

    • வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
    • பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை.

    வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் அசாதாரண ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான் இப்போதும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவை குறித்து பார்ப்போம்.

    1. ரத்தத்தை சுத்தப்படுத்தும்:

    வேம்பு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:

    வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

    3. செரிமானத்தை தூண்டும்:

    செரிமானத்திற்கு உதவவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது செரிமான செயல்பாடுகளை தூண்டும். வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டியடிக்கும்.

    4. நச்சுக்களை நீக்கும்:

    உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல்முறைகளை விரைவுபடுத்தி, ஒட்டுமொத்த நச்சுக்களை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக்குவிக்கும்.

     5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:

    வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

    6. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

    வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் சொத்தை, ஈறு நோய்களை தடுக்க உதவும். வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.

     7. சரும ஆரோக்கியம் காக்கும்:

    பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.

     8. கூந்தலுக்கு வலு சேர்க்கும்:

    உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப்படுத்தும். பொடுகுத்தொல்லையை குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப்பார்ப்பதையும் தடுக்கும்.

    ×