search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுய அன்பு அவசியம்"

    • வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகள்.
    • வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும்.

    நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை. இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிக குறைவு. கோபமும், வெறுப்பும், மன அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு வாழ்க்கையை நேசிக்காததே அடிப்படை காரணமாகும். வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்!

    வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும். ஒவ்வொன்றையும் நேசிக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியே வந்ததும் சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படுகிற வெப்பத்தை உணர வேண்டும். மெல்லியக்காற்று நம்மீது படும் போது ஏற்படுகிற அந்த இதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

    வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது தான். வெற்றியும் தோல்வியும் நிறைந்ததுதான். அதை நடுநிலையோடு எதிர்கொள்கிற போது சுமைகள் மாறி, சுகமாக தெரியும். அதற்கு நாம் நம்மை எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர்களாக மாற்ற வேண்டும். இயங்குதல் என்றால் வழக்கமாய் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலைகள் செய்வது மட்டுமல்ல. அந்த வட்டத்தை கடந்து கிடைக்கும் நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும்.

    உதாரணமாக இலக்கியம் மீது ஆர்வம் என்றால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறலாம். திரைப்பட ஆர்வலர் என்றால் திரைப்படங்களை பார்க்கலாம். திரைப்படங்கள்குறித்து கலந்துரையாடுகிற நிகழ்வுகளில் பங்கு பெறலாம்.


    எது உங்களுக்கு பிடிக்கிறதோ எந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தோடு, அந்த நபர்களோடு உங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். அது உங்களுக்குள் உள்ளார்ந்த மாற்றத்தை கொடுக்கும்.

    ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப யோசித்து உங்களையே குழப்பிக் கொள்ளாமல் உங்கள் மனநிலையை சீராக வைக்க உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அது உங்களை மாற்றும்.

    ஏதாவது ஒரு செயலை அன்றாடம் செய்வேன் என முடிவு எடுங்கள். அது காலையில் சிறிது நேரம் நடப்பதாக இருக்கலாம். செடிக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கலாம். எதுவானாலும் சரி, அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.


    குடும்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் பலர் தங்களுக்கென ஓடுவதில்லை. ஒரு நாளின் பத்து நிமிடத்தையாவது உங்களுக்கென செலவிடுங்கள். அமைதியாக அமருங்கள்.

    எல்லாம் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துங்கள். என்ன நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். நாம் செய்கிற ஒவ்வொரு வேலைகளையும் ரசித்து, கவனத்தோடு, நிகழ்கால உணர்வோடு இணைந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தமானதாகவும், அழகானதாகவும் தெரியும்.

    • உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன.
    • நம்மை நாமே அன்பு செய்வோம், மகிழ்ச்சியாக வாழ்வோம்.

    இந்த உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன. தன் மீது பிறர் அன்பு காட்ட வேண்டும், தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும், மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், தன் செயல்களை அங்கீகரிக்க வேண்டும், தான் சிறப்பாக செயல்பட்டால் பாராட்ட வேண்டும் என ஏதாவதொரு வகையில் பிறர் தன் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதர்களும் ஆசைப்படுவது யதார்த்தமானது.

    அதேபோல தனக்கு பிடித்தமானவரிடம் அளவில்லா அன்பை பொழிவதும், அவருக்கு பிடித்ததை பரிசாக அளிப்பதும், அவரை சந்திக்க அலாதியான விருப்பம் கொள்வதும் பலரது இயல்பாக இருக்கும். தன்னிடம் அன்பு காட்டுபவருக்காக எதையும் செய்ய துணிந்திடுவார்கள். தம்மால் முடியாததையும் தமது சக்திக்கு அப்பாற்பட்டதையும் கூட செய்ய முயற்சி செய்வார்கள்.

     அதேபோலவே நம்மையும் பிறர் அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் நம்மையே அன்பு செய்ய மறந்து விடுகிறோம். இதனையே சுய அன்பு என்று சொல்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். சுய அன்பு என்பது சுய நலம் அல்ல. அது நமது மன நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும் அற்புதமான திறவுகோலாகும்.

    இன்றைய சமூகச்சூழலில் பலர் வாழ்க்கை மீது வெறுப்பு கொள்வதற்கும், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்கும் சுய அன்பு இல்லாததே காரணம். சுய அன்பு என்றால் புரியாத புதிரல்ல, அது மிகவும் எளிதானது. நம்மையே நாம் அன்பு செய்வது என்றால் நம்மையே நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது. நாம் சிகப்போ, கருப்போ, குண்டோ, ஒல்லியோ, குட்டையோ, நெட்டையோ எப்படியாக இருந்தாலும் நாம் நம்மையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள்ளேயே `நான் அழகானவன்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

     ஒருபோதும் நாம் நம்மை பிறரோடு ஒப்பிடவே கூடாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு வகையில் தனித்துவம் ஆனவர்கள். எனவே நமது தனித்துவ பண்பை ஏற்றுக்கொண்டு அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக நம்மையே நாம் அன்பு செய்வோம். அதன் வெளிப்படாக நமக்காக மேற்கொள்ளும் சிறு, சிறு காரியங்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் செய்வோம்.

    அதேபோன்று நல்ல செயலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, அதனை செய்து முடித்து விட்டால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வோம். அதற்கு தக்க சன்மானமாக ஏதாவதொரு பரிசை வாங்கி நமக்கே நாம் அளித்துக்கொள்வோம். அது ஐஸ்கிரீம் வாங்கி ருசித்து சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம். இப்படி செய்வது விளையாட்டாக தெரியலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உளவியல் தாக்கம் பெரியது என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே நம்மை நாமே அன்பு செய்வோம்...! மகிழ்ச்சியாக வாழ்வோம்...!

    ×