என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலேகான் குண்டு வெடிப்பு"

    • மசூதி அருகே குண்டுவெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • பாஜக தலைவர் பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்டோர் மீது விசாரணை நடந்து வந்தது.

    பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், இதனை விசாரிக்கும் NIA சிறப்பு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட இருந்த நிலையில் நீதிபதி ஏ.கே.ரோஹதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே செப்டம்பர் 29, 2008 அன்று மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் பாஜக தலைவர் பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்து வந்தது. பின்னர் 2011 இல் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே. லஹோட்டி மாவட்ட நீதிபதிகளின் வருடாந்திர பொது இடமாற்ற நடவடிக்கையின்கீழ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஹோட்டி மற்றும் பிற நீதிபதிகளுக்கான இடமாற்ற உத்தரவு, மும்பை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலால் பிறப்பிக்கப்பட்டது. 

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கடைசி விசாரணையில், நீதிபதி லஹோட்டி, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள வாதங்களை முடிக்குமாறு அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்புக்கு உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 16 இல் அவர் தீர்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இடமேற்றம் செய்யப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீதிபதியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 17 வருடத்தில் இந்த வழக்கு விசாரணையில் 5 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு வாய்ப்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
    • மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பிரக்யா சிங் தாக்கூர், "நான் இதற்கு முன்பும் எம்பி சீட் கேட்கவில்லை, இப்போதும் நான் கேட்கவில்லை. முந்தைய காலத்தில் நான் கூறிய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் என்னை மன்னிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், பாராளுமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதூரிக்கும் மக்களவை வேட்பாளருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×