search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிக்கட்டம்"

    • மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    • வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 10 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருவனந்தபுரம் தொகுதியில் 12 பேர், அட்டிங்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 12 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 8 பேர், மாவேலிக்கரை தொகுதி யில் 9 பேர், ஆலப்புழா தொகுதியில் 11 பேர், கோட்டயம் தொகுதியில் 14 பேர், இடுக்கி தொகுதியில் 7 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 10 பேர், திருச்சூர் தொகுதியில் 9பேர், சாலக்குடி தொகுதி யில் 11பேர், ஆலத்தூர் தொகுதியில் 5 பேர், பாலக்காடு தொகுதியில் 11 பேர், பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதியில் 8பேர், கோழிக்கோடு தொகுதியில் 13 பேர், வயநாடு தொகுதியில் 9பேர், வடகரா தொகுதியில் 10 பேர், கண்ணூர் தொகுதியில் 12 பேர், காசர்கோடு தொகுதியில் 9 பேர் என 20 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர். வடகரா தொகுதியில் 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசியலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா 16 தொகுதிகளிலும், பி.டி.ஜே.எஸ். 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.


    அனைத்து தொகுதிகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால் கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் குதித்தனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து கேரள மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. இந்த நிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஓட்டுப் பதிவு வருகிற 26-ந்தேதி நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்காக 25 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகளும், 181 கூடுதல் வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 045பேரும், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 34 ஆயிரத்து 394 பேரும் உள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 89 ஆயிரத்து 839 பேர்.

    கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
    • பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.

    சென்னை:

    சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.

    இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ×