search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சுமெல் பாய்ஸ்"

    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல்.

    மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை குவித்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மஞ்சுமெல் பாஸ்ட் பட இயக்குனர் சிதம்பரம் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய இந்தி படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
    • வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த வாலிபரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதையை கொண்ட அந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கேரள மாநிலம் மட்டு மின்றி தமிழகத்திலும் பல திரையரங்குகளில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாகி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மேலும் பண மோசடிக்காக டிக்கெட் வசூல் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட குழுவினர் மீது புகார் எழுந்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில திரைப்படங்களை எடுத்தவர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆகவே கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எடுக்கப்பட்ட அனைத்து வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. 2024-ம் ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் ரூ720 கோடி வசூல் செய்திருக்கிறது. அதிலும் 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்', 'ஆவேசம்', 'பிரேமலு' ஆகிய 4 மலையாள திரைப்படங்களின் வசூல் ரூ100 கோடியை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோசடி புகார் கூறப்பட்டுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத் துறை இயக்குனரகம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது.
    • படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.

    அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்றும், இந்த மோசடியால் ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது. தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் அந்த படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் ஷாகிரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும் என்று அமலாக்கத் துறை இயக்குனரக வட்டாரம் தெரிவித்துள்ளது.

    • அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருந்த Njan Prakashan என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்த படத்தின் மூலம் அபர்ணா தாஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகியிருந்த 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படத்தில் கவின், பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

    இந்த நிலையில் அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    தீபக் பரம்போல் என்பவரை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறார். இவரும் நடிகர் தான். சமீபத்தில் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் இவர் நடித்திருக்கிறார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.



    இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடித்த தீபக் பரம்போல்-அபர்ணா தாஸிற்கு ஏப்ரல் 24ஆம் தேதி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • குணாகுகை பகுதியை பார்வையிட்டு, செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து உற்சாகம் அடைகின்றனர்.
    • குணாகுகையில் நடந்த சம்பவம் குறித்த தங்களது அனுபவங்களை சுற்றுலா பயணிகளிடம் பகிர்ந்தனர்.

    கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த 2 வார்த்தைகள் அடிக்கடி உலாவி கொண்டிருக்கின்றன. யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தை பற்றிய கருத்துகள், டிரைலர் காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. தியேட்டர்களுக்கு சென்று பார்த்த பலரும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மலையாளத்தில் வெளியானாலும், தமிழகத்தில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு சில காரணங்களை சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் குணாகுகையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதியை அதில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர்.

    மேலும் 1991-ம் ஆண்டும் வெளியான 'குணா' தமிழ் திரைப்படத்தை மையப்படுத்தியும் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் தான் திரைப்படத்தின் உயிரோட்டமாக அமைந்துள்ளது. இதனாலேயே தமிழகத்தில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    அடுத்ததாக படத்தின் கதைக்கரு. அதுவும் 2006-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுத்துள்ளனர். கேரள மாநிலம் மஞ்சுமெல் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது அவர்கள் குணாகுகையை பார்வையிட செல்கின்றனர். தடையை மீறி ஆபத்தான குணாகுகைக்குள் நுழைகின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் ஆழமான குழிக்குள் தவறி விழுந்துவிடுகிறார். அவரை நண்பர்கள் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே படத்தின் கதை. ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப கதைக்களம் இருந்தது. இதுவும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் தற்போது கொடைக்கானலுக்கு, குறிப்பாக குணாகுகையை பார்வையிட படையெடுத்து வருகின்றனர். அவர்கள் குணாகுகை பகுதியை பார்வையிட்டு, செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து உற்சாகம் அடைகின்றனர். நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கேரள குழுவினர் நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். தனியார் யூடியூப் சேனல் மூலம் நடைபெற்ற சிறப்பு படப்பிடிப்பிற்காக அவர்கள் வந்திருந்தனர்.

    குறிப்பாக குணாகுகைக்குள் சென்று ஆபத்தான குழிக்குள் விழுந்த சுபாஷ் சந்திரன், குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றிய குட்டன் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது அவர்கள் குணாகுகை பகுதிக்கு நேரில் சென்று, 2006-ம் ஆண்டு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    இதற்கிடையே அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், நிஜ 'மஞ்சுமல் பாய்ஸ்' நண்பர்கள் குழுவினரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    மேலும் அங்கு வருகை தந்த தமிழ் திரைப்பட நடிகரான முனிஸ்காந்த், நிஜ 'மஞ்சுமெல் பாய்ஸ்' குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், "மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது. திரைப்படத்தை பார்த்தபோது உங்களது உண்மையான கஷ்டத்தை நான் உணர்ந்தேன்" என்று கூறினார்.

    அதைத்தொடர்ந்து நண்பர்கள் குழுவினர், குணாகுகையில் நடந்த சம்பவம் குறித்த தங்களது அனுபவங்களை சுற்றுலா பயணிகளிடம் பகிர்ந்தனர். அப்போது சுற்றுலா பயணிகளின் கண்கள் கண்ணீர் குளமாகியது.

     

    சுபாஷ் சந்திரன் - குட்டன்

    சுபாஷ் சந்திரன் - குட்டன்

    இதற்கிடையே குணாகுகை குழிக்குள் தவறி விழுந்து, காப்பாற்றப்பட்ட சுபாஷ் சந்திரன், 'தினத்தந்தி' நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி எங்களது மஞ்சுமெல் கிராமத்தில் இருந்து நானும், எனது நண்பர்களும் வேனில் புறப்பட்டோம். மறுநாள் காலை கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டோம். மதியம் 2 மணி அளவில் குணாகுகையை சுற்றி பார்த்தோம். அப்போது ஆபத்தான குழிக்குள் நான் தவறி விழுந்து விட்டேன்.

    சுமார் 90 அடி ஆழத்தில் நான் விழுந்தேன். அந்த குழிக்குள் கூர்மையான பாறைகள் இருந்தன. அவற்றின் மீது மாறி, மாறி விழுந்தேன். கடைசியாக ஒரு பாறையில் விழுந்தேன். உடம்பெல்லாம் காயங்கள். குழிக்குள் கும்மிருட்டாக இருந்தது. இதனால் நான் பயத்தில் கதறினேன்.

    அதனை கேட்ட எனது நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உதவினர். அவர்கள் கொடுத்த கயிறு மூலம் எனது நண்பர் குட்டன் தைரியமாக குழிக்குள் இறங்கி என்னை உயிரோடு காப்பாற்றினார். சுமார் 4 மணி நேரம் குகைக்குள் போராடிக்கொண்டிருந்தேன். குழியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் என் உயிரே வந்தது.

    குணா குகையை மீண்டும் பார்த்தபோது எனது கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. அப்போது எனது நண்பர்கள் என்னை ஆசுவாசப்படுத்தினர். 2006-ம் ஆண்டு வந்த அதே 10 நண்பர்களுடன் நான் மீண்டும் கொடைக்கானலுக்கு வந்துள்ளேன். சுற்றுலா பயணிகள் தயவு செய்து ஆபத்தை உணராமல் எங்கும் செல்லக்கூடாது. இது எனது அறிவுரை.

    இவ்வாறு அவர் உருக்கத்துடன் தெரிவித்தார். 

    ×