என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மீனவர்கள் விடுதலை"

    • இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது.
    • விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

    3 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.

    மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார்.

    இந்தநிலையில் இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார். இதற்கி டையே பிரதமர் மோடியின் வேண்டுகோள் மற்றும் வலியுறுத்தலை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.

    அதேபோல் மீனவர்க ளுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர். மேலும் இலங்கை சிறையில் வாடும் மற்ற தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மீனவர்கள் மனதில் துளிர்த்துள்ளது.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
    • கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அதேபோல் காரைக்காலை சேர்ந்த செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல் மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி, தரங்கம்பாடி சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 15 பேர், கடந்த 6-ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

    கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீதான வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். படகோட்டிகள் 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார். 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 7-ந்தேதி விசாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

    மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரோல் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனார் (32) உள்பட 21 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்கால் முருகானந்தம், இரும்பன், பாபு உள்பட 15 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 36 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் 33 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை கைதானதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×