என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்சயதிருதியை"

    • அட்சய திரிதியை தானத் திருவிழா என்றும் கூறுவர்.
    • சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதி என்பர்.

    அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.


    அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.

    அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கி பயனடையலாம். உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்.

    ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே.


    பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.

    கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான்.

    மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.

    இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும்.

    கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

    • நகைக்கடைகள் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
    • தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.33 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.

    இதையடுத்து அட்சய திருதியை அன்று நகை வாங்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

    இதன்படி, சில கடைகள் தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளன. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.

    தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக் கொள்ளலாம்.

    முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் குறைந்த விலையிலும் அதிகமாக இருந்தால் ஏற்கெனவே முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

    மேலும் அட்சய திரிதியைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாடல்களில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இரவில் வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் அட்சய திரிதியை அன்று நல்ல நேரத்தில் தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் தற்போதே கடைகளுக்கு சென்று முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

     இதுகுறித்து, சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்கு

    பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. தமிழகம் முழுவதும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் வரை அதிகரிக்க கூடும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×