search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்கள் கட்டணம்"

    • தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.

    இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.

    பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

    வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.

    பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

    இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.

    சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    ×