search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹட்டி சமூகத்தினர்"

    • வறுமையை சமாளிக்க அதிரடி முடிவு என்கிறார்கள்.
    • குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என மாமியார் அறிவுறுத்தி உள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன.

    இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த பகுதியை சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிர்மவுர் பகுதியில் உள்ள ஜமுனா கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்தார்.

    ஏழ்மையில் வாடிய இந்த குடும்பத்தினர் ஒரு சிறிய அறையில் தான் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அதிலும் கணவரின் குடும்பம் மிகப்பெரியது என்ற நிலையில் சிறிய அறையில் பாதி இடத்தில் சுனிலா தேவியின் இல்லற வாழ்க்கையும் நடைபெற்றுள்ளது. சில நேரங்களில் அரை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.

    அப்போது சுனிலா தேவியின் கணவரது இளைய சகோதரர் பள்ளியில் படித்து கொண்டிருந்தார்.

    கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சுனிலா தேவி, பள்ளியில் படிக்கும் தனது மைத்துனருக்கு மதிய உணவு தயார் செய்து கொண்டு சென்றுள்ளார். காலங்கள் கடந்தன.

    தனது கணவரின் இளைய சகோதரர் படிப்பை முடித்து வளர்ந்த நிலையில் அவனையும் திருமணம் செய்து கணவராக ஏற்றுக்கொள்ளும்படி சுனிலா தேவியின் கணவர் கூறியுள்ளார்.

    நான் வேலை விஷயமாக அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவேன். எனவே எனது சகோதரன் உன்னையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்து கொள்வார். எனவே நீ அவனையும் திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொள் என கட்டாயப்படுத்தி உள்ளார். இதைக்கேட்டு சுனிலா தேவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் தனது மாமியாரிடம் முறையிட்டார். அப்போது உனது கணவர் சொன்னதை ஏற்றுக்கொள். அப்போது தான் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என மாமியார் அறிவுறுத்தி உள்ளார்.

    இது சுனிலாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் இதுதொடர்பாக தனது மாமனாரிடம் கூறியுள்ளார். அவரோ, இங்கே மிகவும் வறுமை இருக்கிறது. நீ ஒப்புக்கொண்டால் குடும்பம் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் சுனிலா தேவி கணவரின் இளைய சகோதரரையும் மணம் முடித்துள்ளார்.

    2 பேருடனும் குடித்தனம் நடத்தியது ஆரம்பத்தில் சுனிதா தேவிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. என்றாலும் நாளடைவில் அது வழக்கமாகி விட்டது. தற்போது 2 கணவர்களில் இளைய கணவர் தான் தன்னை அதிகம் கவனித்து கொள்வதாக சுனிலா தேவி கூறுகிறார்.

    அவர் கூறுகையில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது இளைய கணவர் தான் என்னை நன்கு கவனித்து கொள்கிறார் என்கிறார். சுனிலா தேவியை போலவே அதே கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் வசிக்கும் மீனா தேவி என்ற பெண்ணின் வாழ்க்கை கதையும் இதேபோல் உள்ளது. அவர் தனது கணவரின் 3 சகோதரர்களுடன் ஒரு ஆஸ்பெடாஸ் கூரையுடன் கூடிய வீட்டில் வாழ்க்கை நடத்தி வருகிறாராம்.

    இதுகுறித்து மீனா தேவி கூறுகையில், எனது கணவரின் 2 சகோதரர்களும், வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் எல்லாவற்றையும் 3 பேருக்குள்ளேயும் பிரிக்க வேண்டியது இருக்கும். இதனால் நாங்கள் ஒன்றாக கூடி கூட்டுத் திருமணமே எங்களுக்கு சிறந்தது என்று முடிவு செய்தோம்.

    அதன்படி எனது கணவரின் 2 சகோதரர்களையும் திருமணம் செய்து கொண்டு 3 பேருடனும் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வறுமையின் சாபத்தில் இருந்து நாங்கள் பிழைத்துள்றோம் என்றார்.

    ×