என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி"

    • 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார்.
    • இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர்.

    ஏதென்ஸ்:

    சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க, வலிமைமிக்க பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார். பதவிகாலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறி ஒதுங்கினார்.

    இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஐ.ஓ.சி.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நிதி நிலை, எதிர்கால போட்டிக்குரிய சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நேற்று ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

    தலைவர் பதவிக்கு முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ (இங்கிலாந்து), ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட் (பிரான்ஸ்), ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப் (ஜப்பான்), சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (இங்கிலாந்து), ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர்.

    மொத்தம் ஐ.ஓ.சி.யின் 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி வெற்றி பெற்று புதிய தலைவர் ஆனார். 2-வது இடத்தை பிடித்த ஜூவான் ஆன்டோனியா சமராஞ்சுக்கு 28 வாக்குகள் கிடைத்தது. எதிர்பார்க்கப்பட்ட செபாஸ்டியன் கோ 8 ஓட்டுகளே பெற்றார்.

    இதன் மூலம் 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார். இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். அத்துடன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த உயரிய பொறுப்புக்கு வந்த முதல் நபர் மற்றும் இளம் வயதானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரி முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 2004, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார். உலக நீச்சல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டியிலும் நிறைய பதக்கங்களை குவித்து இருக்கிறார்.

    ஒலிம்பிக் தினமான ஜூன் 23-ந் தேதி அன்று ஐ.ஓ.சி.யின் 10-வது தலைவராக அவர் முறைப்படி பொறுப்பேற்பார். இந்த பதவியில் அவர் 8 ஆண்டுகள் நீடிப்பார். இந்த காலக்கட்டத்தில் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், 2032-ம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு காத்திருக்கிறது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமத்தை பெற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பதை இவரது தலைமையிலான கமிட்டியே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு இளம் வீராங்கனையாக நீச்சல் பயணத்தை தொடங்கிய போது இது போன்ற ஒரு தருணத்தை அடைவேன், இப்படியொரு இடத்தில் நிற்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஐ.ஓ.சி.யின் முதல் பெண் தலைவராக இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் பெற்ற ஓட்டுகள் நிறைய பேருக்கு உத்வேகம் அளிக்கும் என கூறினர்.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
    • ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    இதற்கிடையே, ரஷியாவை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.

    ரஷிய வீரர்கள் மெத்வதேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இதேபோல் பெலாரஸ் அரினா சபலென்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் கூறுகையில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்றனர்.

    • இஸ்ரேலை தடைசெய்யக் கோரி பாலஸ்தீன குழு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியது.
    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரிஸ்:

    பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர்.

    இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், ஐ.ஓ.சி.யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்களிடம் இரண்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் உள்ளன. அதுவே அரசியல் உலகத்துடனான வித்தியாசம். இந்த வகையில் இருவரும் அமைதியான சக வாழ்வில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல. ஆனால் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டியாகும். மற்ற அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் நீட்டா அம்பானி.
    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது.

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானி 100% வாக்குகள் பெற்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய நீட்டா அம்பானி, " சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நீட்டா அம்பானி முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையை அவர் அப்போது படைத்தார். 

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, பிரான்சில் தொடங்கிய ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் கொரிய அணி அறிமுகத்திற்காக படகில் வந்து கொண்டிருந்த போது, அறிவிப்பாளர் பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரில் அறிமுகப்படுத்தினார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் இன்னும் நடந்து வருவதால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தென் கொரியாவின் விளையாட்டு அமைச்சகத்திடம் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பத்தை ஒப்புக்கொண்டதுடன் வருத்தமும் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், கொரிய மொழியில் மன்னிப்பு கோரியுள்ளது.

    அதில், அறிமுக விழாவில் தென் கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    ×