search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் கிரீன் ரசாயனம்"

    • மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.
    • நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    மாலை வேலைகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.

    பானி பூரி விரும்பி சாப்பிடும் பழக்கம் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியிலும் சிறுவர் சிறுமிகள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது.

    இதுபோன்ற மாணவ-மாணவிகள், இளைஞர்களை குறிவைத்து பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளிலும், கல்லூரிகள் செயல்படும் இடங்களை சுற்றியும் அதிக அளவில் பானிபூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையிலும் ஏராளமான பானிபூரி கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பானிபூரி மசாலாவில் பச்சை நிறத்தை அதிகரித்து காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    இதன் படி அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 'ஆப்பிள் கிரீன்' என்று அழைக்கப்படும் ரசாயனம் பானிபூரி மசாலாக்களில் சேர்க்கப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த ஆப்பிள் கிரீன் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளுக்கு சென்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான டாக்டர் சதீஷ்குமார் தலை மையிலான குழுவினர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பானிபூரியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களையும் தண்ணீரையும் பரிசோதனைக்காக எடுத்துள்ளனர். இந்த பானி பூரி மசாலாக்களில் ஆப்பிள் கிரீன் என்று அழைக்கப்படும் புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த உடன் ரசாயனம் கலந்த பானிபூரி மசாலாக்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பானிபூரி கடைகளில் பூரியில் ஊற்றி கொடுக்கப்படும் மசாலா தண்ணீரை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் அதனை பயன்படுத்தினால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் மசாலா கலந்த தண்ணீரை பல நாட்கள் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்து உள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் அப்போது பானிபூரி கடை கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

    ×