என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கோர்ட்டு"

    • சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.

    முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது.

    முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    பின்னர் வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை சென்னையில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    • ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

    இதனிடையே, கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

    • நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன.
    • தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன.

    சென்னை:

    'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது சட்டத்தின் கோட்பாடு ஆகும். மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் 3-வது தூணாக விளங்கும் நீதி தேவதையின் கதவை தட்டுகிறார்கள்.

    அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து, நீதியை நிலைநாட்டும் மகத்தான பணியை கோர்ட்டுகள் செய்துவருகின்றன.

    இதற்கிடையே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' வழக்குகள், பாலியல் குற்றங்கள், நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 'போக்சோ' கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் குறைவாக இருப்பதாக கூறி, அருணாசலபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க இசைவு தெரிவித்திருந்தாலும், இன்னும் செயல்படுத்தவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 747 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கோர்ட்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 633 போக்சோ வழக்குகள் உள்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் 42 ஆயிரத்து 404 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகள் மூலமாக 8 ஆயிரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ கோர்ட்டில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.

    மத்திய அரசு 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரை (கடந்த மாதம் 3-ந்தேதி வரையிலான நிலவரப்படி) சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ.1,008 கோடி விடுவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.281 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ.105 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.84 கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.25 கோடியே 46 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ.55 லட்சமும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×