என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர் வழிபாடு"

    • சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.
    • 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.

    அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.


    * அஸ்வினி - காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.

    * பரணி -போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.

    * கார்த்திகை - ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).

    * ரோகிணி - மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    * மிருகசீரிடம் - பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.

    * திருவாதிரை - இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.

    * புனர்பூசம் - தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.

    * பூசம் - கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.

    * ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.

    * மகம் - சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.

    * பூரம் - ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.

    * உத்திரம் - காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

    * ஹஸ்தம் - கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

    * சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

    * சுவாதி - புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    * விசாகம் - நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

    * அனுஷம் - வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    * கேட்டை - பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.

    * மூலம் - பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.


    * பூராடம் - ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

    * உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.

    * திருவோணம் - தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    * அவிட்டம் - திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

    * சதயம் - கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

    * பூரட்டாதி - ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

    * உத்திரட்டாதி - டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

    * ரேவதி - சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

    எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெறலாம்.

    • சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.
    • சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள்.

    சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.


    உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.

    சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.

    தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.

    அஷ்டமா சித்திகள்:

    அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை முறையே:

    1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா

    அணிமா:

    அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலவும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்

    மகிமா :

    மலையினும் பெரிய உருவம் தாங்கி நிற்கும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்.

    லகிமா:

    உடலைப் பாரமில்லாமல் லேசாகச் செய்து நீர், சேறு முதலியவற்றில் அழுந்திவிடாமல் காற்றைப் போல விரைந்து செல்லும் வல்லமை இந்த சித்தியினால் ஏற்படும்.

    பிரார்த்தி:

    நாம் விரும்புவனவற்றையும் நினைப்பவற்றையும் உடனே அவ்வாறே அடையும் வல்லமையைத் தருவது இந்த சித்தி.

    பிரகாமியம்:

    தம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலைத் தருவது இந்த சித்தி.

    ஈசத்துவம்:

    அனைவரும் தம்மை வணங்கும்படியான தெய்வத் தன்மையை எய்தும்படிச் செய்வது இந்த சித்தி.

    வாசித்துவம்:

    உலகம் அனைத்தையும் தம் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருக்கச் செய்யும் இந்த சித்தி.

    கரிமா:

    ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் அவைகளுடன் சம்பந்தப் படாமலும் இருக்கும் வல்லமையை அளிக்கும் இந்த சித்தி.

    • சித்த மயம் சிவமயம் என்பார்கள்.
    • சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர்.

    "சித்த மயம் சிவமயம்" என்பார்கள். சிவனே முதன்மை சித்தராக கருதப்படுபவர். உலகில் சித்தர்கள் பல பேர் உள்ளனர். என்றாலும், நமது தமிழ் மரபின்படி பதினெண் சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்கள் தலையாய சித்தர்களாக கருதப்படுகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு:-


    அகத்தியர்

    18 சித்தர்களில் முதன்மை யானவராக கருதப்படுகிறார் அகத்தியர். இவரது குரு சிவபெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் என அறியப்படுகிறார். தமிழ் சித்த மருத்துவ முறைகளை இந்த உலகிற்கு அளித்த மகான். கடுமையான தவத்தின் வாயிலாக பல சித்திகளை பெற்றவர்.

    தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவரது ஆயுட்காலம் 4 யுகம், 48 நாட்கள் ஆகும்.


    போகர்

    போகர் என்றாலே பழனிமலை முருகப்பெருமானது உருவ சிலையே நமது கண்முன் முதலில் தோன்றும். இவர் நவபாஷாணங்களை கொண்டு முருகப்பெருமானின் உருவ சிலையை செய்தவர். இவரது குரு அகத்தியர். ைவத்தியம் மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கியவர்.

    போகர் 7 ஆயிரம்,போகர் 12 ஆயிரம், சப்த காண்டம் 7 ஆயிரம் போன்ற நூல்களை இயற்றி இவ்வுலகுக்கு அளித்தவர். முடிவில் பழனி மலையில் சமாதியடைந்தார். 300 ஆண்டுகள், 18 நாட்கள் இவரது ஆயுட்காலமாக சொல்லப்படுகிறது.


    திருமூலர்

    63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார் திருமூலர். இவரது குரு நந்தி தேவர். மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3 ஆயிரம் பாடல்களை பாடி 'திருமந்திரம்' எனும் நூலை இயற்றினார். இவர் சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி கொண்டார். இவரது ஆயுட்காலம் 3 ஆயிரம் ஆண்டுகள், 13 நாட்கள் ஆகும்.


    வான்மீகர்

    வான்மீகர் நாரத முனிவரின் சீடராவார். ராமாயண இதிகாசம் எனும் பெரும் நூலை வழங்கியவர். திருவையாறு, எட்டுக்குடி எனும் ஊரில் சமாதியடைந்தார். இவர் 700 ஆண்டுகள் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார்.


    தன்வந்திரி

    காக்கும் கடவுள் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவ முறையை இந்த உலகுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள், 32 நாட்கள் ஆகும்.

    இடைக்காடர்

    இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது குரு போகர், கருவூரார். இவரது பாடல்கள் உலக இயல்புகளை, நிலையாமையை உணர்ந்து இறைவனை எப்படி அடைவது என்பதை சொல்கிறது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என பாடிய பாடல்கள், நாட்டுப்பாடல் மரபினை காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தியடைந்தார். இவரது ஆயுட் காலம் 600 ஆண்டுகள், 18 நாட்கள் ஆகும்.


    கமலமுனி

    இவர் போகரிடம் சீடராய் இருந்து யோகம் பயின்று சித்தர்களில் ஒருவரானவர். இவரது குருக்கள் போகர், கருவூரார். 'கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளதாக தெரிகின்றது. இவரது ஆயுட் காலம் 4 ஆயிரம் ஆண்டுகள், 48 நாட்கள் ஆகும். இவர் ஆரூரில் சமாதியடைந்துள்ளார்.


    கருவூரார்

    தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் காரணமாக இருந்தவர் கருவூரார். இவர் போகரின் சீடர். கருவூரார் பூசா விதி எனும் நூலை எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள், 42 நாட்கள் ஆகும். இவர் கரூரில் சமாதியடைந்துள்ளார்.


    கொங்கணர்

    இவர் போகரின் சீடர். பல மகான்களை சந்தித்து ஞானம் பெற்றவர். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் என பல நூல்களை இந்த உலகுக்கு வழங்கி உள்ளார். இவரது ஆயுட்காலம் 800 ஆண்டுகள், 16 நாட்கள் ஆகும். இவர் திருப்பதியில் சமாதியடைந்துள்ளார்.


    கோரக்கர்

    தத்தாத்ரேயர், மச்சமுனி, அல்லமா பிரபு ஆகியோர் கோரக்கரின் குருக்கள் ஆவர். மச்சமுனி அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமா தேவரிடம் போட்டியிட்டு தன்னைவிட மிஞ்சியவர் என்பதை உணர்ந்து அல்லாமா தேவரிடம் அருள் உபதேசம் பெற்றவர். போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார். இவரது ஆயுட்காலம் 880 ஆண்டுகள், 32 நாட்கள் ஆகும்.


    குதம்பை சித்தர்

    இவர் அழுகுணி சித்தரின் சீடர். இவரது பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என அழைத்து பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு பெற்றது. இவர் மாயவரத்தில் சமாதி அடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 1800 ஆண்டுகள், 16 நாட்கள் ஆகும்.


    மச்சமுனி

    மச்சமுனியின் குருக்கள் அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர் ஆவர். பிண்ணாக்கீசரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றவர். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை எழுதியுள்ளார். இவர் திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 300 ஆண்டுகள், 62 நாட்கள் ஆகும்.


    பாம்பாட்டி சித்தர்

    இவரது குரு சட்டைமுனி. 'ஆடு பாம்பே' என பாம்பை முன் நிறுத்தி பாடல்கள் பாடியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர் மருதமலையில் சமாதியடைந்துள்ளார். இவரது ஆயுட் காலம் 123 ஆண்டுகள் 32 நாட்கள் ஆகும்.


    பதஞ்சலி

    இவர் ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தவர். குரு நந்தி. வியாக்ர பாதருடன் தில்லையில் இருந்து சிவதாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் அற்புதமான நூலை இயற்றியுள்ளார். இவர் ராமேஸ்வரத்தில் சமாதி யடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 5 யுகம் 7 நாட்கள் ஆகும்.

    ×