என் மலர்
நீங்கள் தேடியது "தவெக பொதுக்குழு"
- தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிச்சி பிரதமர் சார்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:-
* இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல... மாண்புமிகு மோடிஜி அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ... அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்... பேர சொல்லணும்...
* சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா.. அதிமுகவா? அப்புறம் என்ன பேர சொல்லணும்... பேர சொல்லணும்... புரியலையே?
* ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும்... இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?
* தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க...
* ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.
* சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம்... தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார்.... பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார்... பாத்து சார்... பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார் என்றார்.
- அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது.
- சரி பெண்களின் வாழ்க்கைத்தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியதாவது:-
எத்தனை தடைகள் போட்டாலும் மக்களை பார்க்க நினைத்தால் போயே தீர்வேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருக்கிறேன்.
நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆகணும் கனவு காண்கிறான். அது நடக்கவே நடக்காது என்று சொகின்றீர்கள். அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியே தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போடுகின்றீர்கள்?
அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சுறாவளியாக மாறும், ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.
என தருமை தமிழக வெற்றிக் கழக தோழர்களே, நான் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதைத் தான் திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண், சமய நல்லிணக்கத்தை பேணும், சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும். உங்களை வேண்டிவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை கேட்கும் போது மன உளைச்சலும், மனவேதனையும் தருவதாக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அதற்கு கரப்ஷன்ஸ், கபடதாரிகள் அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி. இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி? நாம் என்ன செய்யப்போறோம்?
நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை சந்தியுங்கள், அவர்களிடம் பேசுங்கள். ஒவ்வொரு தெருவுக்கும், வீட்டுக்கும் சென்று அவர்களின் பிரச்சனை என்னவென்று கேளுங்கள். அதை தீர்க்க என்ன வழி என்று யோசியுங்கள். அப்போது தான் அவர்களுக்கு நம்ம மீது நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான விதையை விதைத்துவிட்டு அதற்கு பின் நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டைப் போர் யானை, வாகை மலர்க்கொடி தானாக பறக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே. உங்க ஆட்சியை பற்றி மட்டும் கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்சப்புள்ளங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில் வேறு உங்களை அப்பான்னு கூப்பிடுறாங்கன்னு சொல்றீங்க.
தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களோட அரசியலுக்கே ஒரு முடிவு கட்ட போறாங்க. உங்க ஆட்சிக்கு முடிவு கட்டப்போறாங்க. உங்களோட இந்த அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போறாங்க.
சரி பெண்களின் வாழ்க்கை தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்? பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், டங்ஸ்டன், மின்கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம். இதுஎல்லாம் சாம்பிள் தான். இந்த எல்லா போராட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கூட இருக்கும்," என்றார்.
- சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
* ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறு சீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக் கணக்காகப் போராடி வருகின்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத தி.மு.க. அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
* டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும்.
* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்தி விட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.
* இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
* சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத் தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.
* தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும்.
* தலைவருக்கே முழு அதிகாரம். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவருக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது.
* தலைமைக் கழக நிர்வாகிகள், கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
* திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்கிற பி.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் யு.பி.எம்.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை. மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச்சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
* மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உரு வாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
* பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.
* குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள், 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
* இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி, வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.